நல்லை ஆதீன சுவாமிகளின் இரகசிய மரணம் அவர் சமாதியாகாமல் எரிக்கப்பட்டது ஏன் ? தன்ணுணர்வு இழந்தவர் எப்படி வாக்குமூலம் தந்தார் ? ஆதாரங்கள் எங்கே ?

நல்லை ஆதீன சுவாமிகளின் இரகசிய மரணம் அவர் சமாதியாகாமல் எரிக்கப்பட்டது ஏன் ? தன்ணுணர்வு இழந்தவர் எப்படி வாக்குமூலம் தந்தார் ? ஆதாரங்கள் எங்கே ?

 

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் (வயது 68) மே மாதம் முதலாம் திகதி உயிரிழந்தார். அவர் என்ன சுகயீனம் என்று காரணம் குறிப்பிடப்படாத வருத்தத்தின் காரணமாக, பெயர் குறிப்பிடப்படாத கொழும்பில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் அவர் இறந்ததாக ஆறுதிருமுருகனின் வட்டாரங்கள் செய்தியை வெளியிட்டன.

யாழில் ஒரு முக்கிய பிரமுகரான நல்லை ஆதீன சுவாமிகள் நோய்வாய்ப்பட்ட தோ கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டதோ அவருக்கு நெருங்கியவர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. திடிரென அவர் இறந்த செய்தி ஆறுதிருமுருகனின் வட்டாரங்களால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இச்செய்தி பலரையும் சென்றடைவதற்கு முன்னமே அவருடைய உடலும் 24 மணி நேரத்திற்குள்ளாக தகனம் செய்யப்பட்டுள்ளது.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டா வது குருமகா சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் இயற்பெயர் சுந்தரலிங்கம் என்பதாகும். நல்லூரை சொந்த இடமாகக் கொண்ட இவர் 1970களின் ஆரம்பத்தில் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் துறவறம் வழங்கப்பட்டு, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் என்ற நாமம் பெற்றார். 1981ஆம் ஆண்டு முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி நிலையை அடைந்தமையை தொடர்ந்துஇ நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானமாக பட்டம்சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி நிலையஅடைந்ததை அடுத்து அவருடைய உடல் நல்லை ஆதீனத்தில் சமாதியாக்கப்படும் எனவே சைவமக்கள் எதிர்பார்த்தனர். அதுவே நல்லை ஆதீனத்தின் பாரம்பரியமும். அவருடைய உடல் சமாதியில் வைக்கப்படும் என்றே செய்திகளும் வெளியாகின.

ஆனால் நல்லை ஆதின சுவாமிகளின் மதிப்பு உயர்ந்துவிடக்கூடாது மற்றையவர்களுக்கு இந்த இறுதிக் கிரியைகளில் வாய்ப்புகள் வந்துவிடக் கூடாது அவருடைய நன்மதிப்பை குறைத்துக் கொள்ளும் நோக்கோடு ஆறுதிருமுருகன், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளை சமாதியில் வைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுவாமிகள் தன்னை எரிக்கும்படி கேட்டதாகவும் தன்னையும் தான் சார்ந்த மேலும் இருவரும் தான் தனது இறுதிக்கிரியைகளில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கையின் மத, அரசியல் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருக்க வேண்டிய இறுதிநிகழ்வை ஆறுதிருமுருகன் கனகச்சிதமாக ஒரு சாதாரணரின் இறுதிச்சடங்காக குறுக்கி தன்னுடைய நீண்டகால திட்டத்துக்கு அடிக்கல் கோலினார்.

நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவருடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நல்லை ஆதீனத்தை திருத்துவதற்கான முயற்சிகள் லண்டனில் உள்ளவர்களால் முன்னெடுக்கப்பட்டது. என் சச்சிதானந்தன் இதனை முன்னின்று ஆரம்பித்தார். அதற்கு ஆறுதிருமுருகன் நிதி சேகரிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து லண்டன் சைவப் பிரமுகர்கள் நிதியை வாரி இறைத்தனர். லண்டன் சைவமுன்னேற்றச் சங்கப் பிரமுகர்கள் இதில் முன்நின்றனர். கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. நல்லை ஆதினமும் சுவாமிகளும் ஆறு திருமுருகனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். நல்லை ஆதீன சுவாமிகளின் உணவுக்கான நிதியைக் கூட ஆறுதிருமுருகனே கட்டுப்படுத்தி வந்துள்ளார். அவருக்கான உணவுக்கான நிதி சரியாக வழங்கப்படாததால் தனிப்பட்ட முறையில் சுவாமிகளுக்கு தான் நிதி வழங்கியாதாக யாழ் முக்கிய பிரமுகர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

காலமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தன்னை தன்னுடைய குரு தன்னைத் தெரிவு செய்தது போல் தனக்குப் பின் ஒருவரை வளர்த்தெடுத்து உருவாக்க முற்பட்டார். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகன் அனுமதிக்கவில்லை. சுவாமிகளுக்குப் பின் பெயருக்கு ஒருவரை நியமித்துவிட்டு பின் தானே குருவானலாம் என்ற கற்பனையில் இவர் இருந்திருக்கின்றார் என்ற விடயங்கள் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகின்றது.

புகழ்பெற்ற யோக சுவாமிகளின் பாரம்பரியத்தில் உருவானது நல்லை ஆதீனம். அதனை முன்னாள் அமைச்சர் டகளஸ் தேவானந்தாவின் அனுசரணையில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபராகி, யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் இடம்பெற்று மெல்ல மெல்ல பிரபல்யமான ஆறுதிருமுருகன் கைப்பற்றுவதற்கு முழுமுயற்சியில் இறங்கியுள்ளார். குருவானவர் இறக்கின்ற போது தன்னிடம் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் செய்திகளைக் கசியவிட்டுள்ளார்.

யோக சுவாமிகளின் சீடனாக உருவானவர் ஹவாய் சுவாமி என்றழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி. இவர் ஒரு ஆங்கிலேயர். இவர் எண்பதுக்களில் இலங்கை வந்தபோது இவருக்கு உதவியாக அனுப்பி வைக்கப்பட்ட ரிஷிகரன் என்ற கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொண்டன்சாமி என்று சொல்லிக்கொண்டு தற்போது ஆறுதிருமுருகனோடு ஒட்டிக்கொண்டுள்ளார். மதுப் பிரியரான இவரை ஆறுதிருமுருகன் ஆதீனக் குருவாக்கி அதன் பின் தானே குருவாகலாம் என்ற யோசனையில் செயற்படுவதாக நல்லை ஆதீனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் காலமான சுவாமிகளை அறிந்த அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தொடர்புகொண்டதில் சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. காலமான சுவாமிகளுக்கும் ஆறுதிருமுருகனுக்கும் நல்ல உறவு இல்லை எனத் தெரியவருகின்றது. ஆதீனத்துக்கு வருகின்ற முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்களுடன் சுவாமிகளை உரையாடவிடாமல் ஆறுதிருமுருகனே முந்திக்கொண்டு உரையாடுவதிலிருந்து இந்த அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் அவருடைய உணவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையே வெகுவாகக் கட்டுப்படுத்தியும் வந்துள்ளார் ஆறுதிருமுருகன்.

இந்தப் பின்னணியில் சுவாமிகள் மரணத்துக்கு முன் தனக்கு சொன்னதன் படி தான் செய்கிறேன் என ஆறுதிருமுருகன் சொல்வது ஏற்புடையதாக இல்லை. சுவாமிகளின் மரணமே தற்போது பல கேள்விகளை எழுப்புகின்றது. அவர் என்ன நோய்வாய்ப்பட்டு இருந்தார் ? அவர் ஏன் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டார் ? கொழும்பில் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ? யார் அவருக்கு சிகிச்சை அளித்தது ? யாழ் சைவர்களின் முக்கிய பிரமுகரான இவரின் மரணத்தை ஏன் அந்த மருத்துவமனை அறிவிக்கவில்லை ? அவர் ஏன் மரணமானார் என்பதும் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் ?

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் மரணம் போல் சுவாமிகளின் மரணமும் பல கேள்விகளை எழுப்புகின்றது.

இது தொடர்பில் தேசம்நெற்க்கு கிடைக்கின்ற மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் சுவாமிகள் சில காலமாகவே சுயநினைவை இழக்க ஆரம்பித்து விட்டார் என்பது. அவர் தன்னுடைய அங்கி அவிழ்ந்து வீழ்வதையே உணர இயலாத நிலையில் இருந்ததாக நல்லை ஆதீனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயநினைவை இழந்தவர் தன்னுடைய மரணச்சடங்கை இப்படிச் செய்யுங்கள், இன்ன, இன்னார் தான் என்னுடைய இறுதிநிகழ்வில் உரையாற்ற வேண்டும் என்பதெல்லாவற்றையும் எப்படிச் சொன்னார். சொத்துக்களை எப்படி ஒப்படைத்தார்.

ஆறு திருமுருகன் தொடர்ந்தும் சைவர்களுக்கு நாமம் போட முடியாது. உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நல்லை ஆதீனத்துக்கு மக்கள் எழுதி வைத்த சொத்துக்களுக்கு என்ன நடக்கின்றது. சிவபூமிக்கு மக்கள் எழுதி வைக்கும் சொத்துக்களுக்கு என்ன நடக்கின்றது. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மரணத்தின் பின்னணி என்ன ? உண்மைகள் உறங்குவதில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *