புலிகளிடமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட நகைகள் ! மக்கள் தங்களுடையதை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம் !
யுத்த காலத்தில் புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி என்பன பத்திரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இரத்தினக்கல் மற்றும் தங்கா பரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர், அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகைகளை புலிகளின் வங்கியில் மக்கள் வைப்பிட்டு இருந்தனர். மேலும் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறுபவர்கள் குறித்த அளவு தங்கத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அவர்கள் விதித்து இருந்தனர். மேலும் யுத்தத்திற்கான நிதி சேகரிப்பிலும் அவர்கள் நகைகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட நகைகளே இறுதி வன்னி யுத்தத்தில் மக்களிடம் போய் சேர்ந்தது.
மேலும் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த நகைகளை எப்படி உறுதிப்படுத்துவது என்பது மிகச்சவாலானதாக அமையும். மேலும் சில நகைகளின் உரிமையாளர்கள் தற்போது உயிருடன் இருப்பார்களா என்பதும் கேள்விக்குறி. சம்பந்தப்பட்ட நகைகள் உரிமை கோரப்படாதவிடத்து. அந்நகைகளை யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு வட்டியற்ற நுண்கடன் முறையில் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதே பொருத்தமானதாக அமையும்.