உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றன!
அகில இலங்கை ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குக்குப் பதிவுகள் மாலை 4 மணிவரை நடைபெற்றன.
அந்தவகையில் வாக்களிப்பு மிகவும் சுமூகமாக நடைபெற்றது. ஏற்கெனவே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் போன்றே வன்முறைகள் பெரிதும் அற்ற தேர்தல்களாக உள்ளூராட்சித் தேர்தல்களும் அமைந்திருந்ததாக கண்காணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி இடர்கால ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது பிற்போட்டு வந்தார். மேலும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்து வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இருந்த போதும் ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த துணியவில்லை.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாகவே வந்திருந்தார். அதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னர் ரணில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட ஜனாதிபதித்தேர்தலை நடத்தினார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என இரண்டிலும் வெற்றி பெற்று அநுரகுமார திஸ்ஸநாயக்க தலையில் என்பிபி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது . “ நாடு அநுரவோடு” என்ற சுலோகத்துடன் இலங்கையில் முதன்முறையாக ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்திய இயக்கம் என்பிபியாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
என்பிபிக்கு இலங்கையில் வாழ்கிற அனைத்து இன மக்களின் வாக்குகளும் கிடைத்தன. என்பிபி ஒரு தேசிய கட்சியாக தனித்து தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
மீண்டும் உள்ளூராட்ச்சித் தேர்தலில் என்பிபி தனித்து அனைத்து சபைகளிலும் “ வெற்றி நமதே ஊர் எமதே” என்ற சுலோகத்துடன் போட்டியிட்டுள்ளது. வடக்கு கிழக்கை பொறுத்தவரையும் கூட தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் செயற்ப்படும் கட்சிகளும் பல்வேறு வகையில் தமது தேர்தல் கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டு இது தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் தேர்தல்கள் என்று கூறி இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு உள்ளூர் சபைகளின் அதிகாரம் தமிழர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிங்களகட்சியின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு விழும் சாவு மணி எனக் கூறி உள்ளூராட்சித் தேர்தலில் குதித்திருந்தன.
இதன்படி இன்று 13 759 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல்கள் நடைபெற்றன.
வாக்காளர்களில் 16 ,854 ,298 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். 341 உள்ளூர் ஆட்சி மன்றங்கள் உள்ள நிலையில் இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே தேர்தல்கள் நடைபெற்றன. இதில் கல்முனை மாநகர சபை மற்றும் அல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 28 மாநகர சபைகள் 36 நகர சபைகள் 275 பிரதேச சபைகள் என 339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
அந்தவகையில் 339 உள்ளுராட்சி சபைகளுக்கு 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 75589 பேரில் 8257 பேரை தெரிவு செய்வதற்காக மக்கள் தமது ஜனநாயக கடமையை சரிவரச் செய்திருந்தனர்.
அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக கொழும்பு மாநகர சபை காணப்படுவதாகவும் இதில் 394 533 வாக்காளர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக ஹப்புத்தளை நகர சபை காணப்படுவதாகவும் இதில் 3051 வாக்காளர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நடந்து முடிந்துள்ள தேர்தல் நிலவரப்படி நண்பகல் இரண்டு மணி வரை முக்கியமான மாவட்டங்களைப் பொறுத்தவரை 50 வீதத்திற்கு குறைவான வாக்களிப்பு வீதமே பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீதமும் , யாழ்ப்பாணத்தில் 34 சதவீதமும், கிளிநொச்சியில் 39 சதவீதமும், மட்டக்களப்பில் 38 சதவீதமும், களுத்துறை 45 சதவீதமும், அநுராதபுரம் 40 சதவீதமும், பதுளையில் 48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குகள்
5783 நிலையங்களில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் தேர்தல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கில் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4450 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்ச்சி மன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் படிப்படியாக வெளிவரவுள்ளன. இத்தேர்தல் முடிவுகள் கடந்த காலக் காட்டிலும் மிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளன. பொருளாதார நெருக்கடியின் போது ஆட்சியை மக்கள் ஊழலுக்கு எதிரான என்பிபியிடம் ஒப்படைத்திருந்தனர். ஆறுமாதகாலமாக ஆட்சி புரியும் என்பிபி மீதான நம்பிக்கை மக்களிடம் எந்தளவு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.