27

27

ஐ.நா அமைதிப்படைகள் மீது கொங்கோ மக்கள் தாக்குதல் !

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் கொங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அந்நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடிம்போ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அலுவலகத்திற்கு நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமைதிப்படை வீரர்களையும் கடுமையாக தாக்கினர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பறித்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையின் போது ஐநா அமைதிபடை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 வீரர்களில் 2 பேர் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

காட்டுமிராண்டிகள் போல புதுமுக மாணவர்களை தாக்கியுள்ள யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் – தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் வடக்கின் கல்வி நிலை !

அண்மைய காலகட்டங்களில் வடக்கில் அடுத்தடுத்து சமூக சீரழிவுகளும் – சமூக வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட முல்லைத்தீவில் ஒரு பாடசாலை ஆசிரியர் உயர்தர ஆண் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி குறித்த மாணவர்களின் உதவியுடன் பாடசாலை மாணவிகளை நிர்வாணமாக்கி வீடியோக்களை எடுத்திருந்தனர். அதுபோல யாழ்ப்பாண நகர்புறத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரிடம் இருந்து அண்மையில் ஹெரோயின் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தவிர க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும் – உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் வடக்கு மாகாணமே ஒன்பதாவது நிலையில் உள்ளது. (இலங்கையில் ஒன்பது மாகாணங்களே உள்ளன)

இது தான்  வடக்கின் அண்மைய கால கல்வி நிலை.

இவ்வாறான ஒரு நிலையிலிருந்து வடக்கின் கல்வியை மீட்பதற்கு மிகப்பெரும் பொறுப்போடு செயல்பட வேண்டிய தேவை வடக்கு தமிழர் கல்வி வளர்ச்சியின்  மிகப்பெரிய மத்திய நிலையம் என கடந்த காலங்களிலிருந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இன்று வரை இதன் தேவையை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உணரவே இல்லை என்பதே ஆக வேதனையான விடயம்.

வருடா வருடம் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அல்ல இல்லையோ பகிடிவதை தொடர்பான ஏதேனும் ஒரு பெரிய குற்றம் பதிவாகிவிடும். விசாரணைகள் தீவிரமாக நடக்கின்றன மாணவர்களுக்கு வகுப்பு தடைகள் வழங்கப்பட்டன என  சில செய்திகள் வெளியாகுமே தவிர பகிடி வதைகளை முழுமையாக இல்லாது செய்ய எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் யாழ்.பல்கலைகழக சமூகம் மேற்கொண்டதாக இதுவரை  தெரியவில்லை.

இந்த நிலையில் அண்மையில்  பல்கலைக்கழகத்திற்கு தெறிவாகியுள்ள புதுமுக  மாணவர்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் போல அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ள  ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்;

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த . கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது . அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி , மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர் . அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது . அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளததாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதைகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என இலகுவான தண்டனை ஒன்றையும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பகிடிவதைகள் தொடர்பில் யாழ்.பல்கலைகழகத்தின் பொறுப்பற்ற அறிவிப்பாகவே பார்க்க முடிகிறது.

முன்னைய காலப்பகுதிகளில் தமிழர் சமுகத்தின் உரிமை சாரந்த பிரச்சினைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் குரல்கொடுத்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து முழுமையாக வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதையே பகிடிவதை தொடர்பான தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியும் வெறுமனே பாடசாலை கல்வி போல புத்தகங்கள் வழியானதாக  மட்டுமே மாறிப்போயுள்ள நிலையில் மாணவர்களை சமூகத்துக்கு உரியவர்களாக மாற்றாது புத்தகப் பூச்சிகளாக மாற்றி அனுப்புவதை மட்டுமே இந்த யாழ்ப்பாண  பல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களே முழு காரணம். தற்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் சில விரிவுயாளர்களை தவிர ஏனைய விரிவுரையாளர்கள் ஒரு உழைப்பதற்கான தளமாக மட்டுமே பல்கலைக்கழகத்தை மாற்றியுள்ளனர் – பார்க்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு நிலை மிகப் பெரிய விரிசலிலேயே இன்று வரை காணப்படுகின்றது. “எனக்கு சம்பளம் வருகிறது நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன்“ இந்த மனோநிலையை பல்கலைகழகத்தில் பாதிக்கும் அதிகமான விரிவுரையாளர்களிடம் காணப்படுகின்றது. இவர்கள் மாணவர்களிடம் அடிப்படை மனிதாபிமானம் பற்றியோ – பல்கலைகழக மாணவர்களின் சமூகப் பொறுப்பு பற்றியோ மறந்தும் கூட பேசுவது கிடையாது. பிறகு எவ்வாறு ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றின் உருவாக்கத்தை  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து எங்களால் எதிர்பார்க்க முடியும்..?

முன்பெல்லாம் தங்களுடைய பிள்ளைகளை சைக்கிள்களிலும் – மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிச் சொல்லும் பெற்றோர் யாழ்.பல்கலைகழக வளாகத்தை கடக்கும் போது இந்த பல்கலைக்கழகத்துக்கு பிள்ளையை எப்படியாவது படிக்க அனுப்ப வேண்டும் என எண்ணுவர். ஆனால் இந்த பகிடிவதை கலாச்சாரத்தாலும் – முறையற்ற கற்பித்தலாலும்  இன்று நிலை தலைகீழாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வேண்டாம் என கூறும் நிலை பெற்றோர் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழர் பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான  நடவடிக்கைகளுக்காகவும் – சமூக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வடக்கின் மிகப்பெரிய கல்வி நிலையம் என்ற அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இதன் பெறுதியை அங்குள்ள விரிவுரையாளர்களும் சரி மாணவர்களும் சரி உணர்ந்து கொண்டு உள்ளார்களா..? என்றால் இல்லை என்பதே விடை.

தமிழர் பகுதிகளில் இன்னமும் சீர்படுத்தப்பட வேண்டிய எத்தனையோ  சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை முன்னின்று தீர்ப்பதில் யாழ்.பல்கலைகழக மாணவர்களதும் – பல்கலைக்கழக சமூகத்தினதும் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் பொறுப்பற்ற இந்த மாணவர்கள் இன்னமும் வன்முறையை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பகிடிவதைகளில் ஈடுபடும் இதே மாணவர்கள் இன்னமும் கொஞ்ச நாட்களில் பட்டமும் பெற்றுக்கொண்டு அரச வேலைகளில் – ஆசிரியர்களாக பாடசாலைகளில்  புகுந்துவிடுவார்கள். பின்பு இவர்கள் இவர்களை போல வன்முறை குணம் கொண்ட ஒரு சமூகத்தை தான் உருவாக்க போகிறார்களே தவிர ஆரோக்கியமான சமூக்த்தை அல்ல.

நீண்டகாலமாக பகிடிவதைக்கான ஆகப்பெரிய தண்டனையாக வகுப்புத்தடைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் எந்த மாற்றமுமே வரப்போவதில்லை. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத இழிவான செயல்களை செய்யும் இந்த மாணவர்களை நேரடியாகவே பல்கலைக்கழக கல்வியில் இருந்து நீக்கிவிடுவதே இந்த பகிடிவதைக்கான தீர்வு. அல்லாது விடின் இது வாழையடி வாழையாக இனிமேலும் தொடரத்தான் போகிறது.

அடிப்படை மனிதாபிமானத்தை கூட கற்றுத் தர முடியாத கல்வியால் என்ன பயன்..?

கோட்டாபாய போய் ரணில் ராஜபக்ஷ வந்தார். [ அமெரிக்க – ஐ.எம்.எப்க்கு கைக்கூலியானது காலி முகத்திடல் போராட்டம்] – தேசம் திரை

அமெரிக்காவின் கைக்கூலியானார்கள் கோட்டா கோ கோம் போராட்டக்காரர்கள்

கோட்டாபய ராஜபக்ச போய் ரணில் ராஜபக்ச வந்தார்!! அமெரிக்க – ஐஎம்எப் க்கு கைக்கூலியானது காலிமுகத்திடல் போராட்டம்!!!

காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.

ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.

அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.

மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:

பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.

ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.

இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?

‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.