20

20

இலங்கை தமிழர்கள் என எங்களை அடையாளப்படுத்தாதீர்கள் – இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற இலங்கை பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு, இம்முறை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக இவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி, “இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள். அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர்.

எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுகிறது – ஐ.நா சுட்டிக்காட்டு !

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ( United Nations Office for the Coordination of Humanitarian Affairs) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கூற்றுப்படி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு பலஸ்தீன குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏப்ரல் ஒன்று முதல் வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மனிதாபிமான உதவி பணிகளில் 15% இஸ்ரேலிய அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் ஏற்பட்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை குறிப்பிட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபரின் இலங்கை வருகை ஒத்திவைப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள ஈரான் தூதுவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் அதிபர் இலங்கைக்கு வராவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.