2024

2024

பௌத்த விகாரைகளின் நிலமே பதவிகளில் சாதாரண மக்களுக்கும் வாய்ப்பு வேண்டும் – அசேல சம்பத்

பௌத்த விகாரை மற்றும் தேவாலயங்களின் நிலமே பதவிகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்று தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத்  வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த விகாரைகளில் தியவடன நிலமே மற்றும் தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமே பதவிகள் பெரும்பாலும் உயர்குல குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை சாதாரண பொதுமகனும் வகிக்கும் வகையில் பௌத்த விகாரை மற்றும் தேவாலய சட்டங்கள் திருத்தப்பட ​வேண்டுமென்று தேசிய நுகர்வோர் முன்னணி (ஜே.பி.பி) தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

புதிய அரசாங்கத்தின் நியமனமானது தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த அரசியல் பாரம்பரியத்தை உடைத்துள்ளது. அதே போன்று, பௌத்த விகாரை மற்றும் தேவாலய அமைப்புகளில் பஸ்நாயக்க நிலமே மற்றும் திவடன நிலமே பதவிகள் இனி ஒரே பரம்பரை அல்லது தலைமுறைகளுக்கு மட்டுப்படுத்தப்படக்கூடாது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் தொழில் வல்லுநர்களுக்கு நாடாளுமன்ற பிரவேசம் பொதுவானதாக இருப்பது போல், இலங்கையின் பௌத்த ஆலய அமைப்பில் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமே பதவிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

தேவாலயங்களின் வளங்கள் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் பதிவாகியுள்ளதால், அவற்றின் வருமானத்தை மதிப்பீடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அசேல சம்பத் தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Ai தொழில்நுட்ப தாக்கத்துடன் 2025 முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை !

Ai தொழில்நுட்ப தாக்கத்துடன் 2025 முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை !
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Zக்களின் வாரிசுகளாக இருப்பார்கள். மேலும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் Gen Beta தலைமுறையாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரையில் பிறந்த குழந்தைகள் எல்லாம் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்ட “ஆல்பா” தலைமுறையினர் என்றும் அடுத்து 2025 ம் ஆண்டு முதல் 2039 ம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்ப தாக்கமுடைய “பீட்டா” தலைமுறையினராக பிறப்பார்கள் என்றும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளர் மெக் கிரிண்டில் கூறியுள்ளார். மேலும், இவர்கள் GEN-BETA என்று அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்களை அடுத்து ஆண்டு நடுப்பகுதியில் நடாத்த திட்டமிடும் என்.பி.பி !

மாகாண சபை தேர்தல்களை அடுத்து ஆண்டு நடுப்பகுதியில் நடாத்த திட்டமிடும் என்.பி.பி !

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்து செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகு தான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளை தொடர முடியாது பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகிறது. ஆனால் அச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை.அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவே தான் அந்த ஏற்பாடுகளை திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் முதல் கொண்டு அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, மாகாண சபை தேர்தல்களை மீள அதன் அதிகாரங்களுடன் இயங்க செய்வது குறித்து உறுதியளித்து வருகின்றனர். தமிழர்கள் போராடி பெற்ற மாகாண சபை முறையை ஒருபோதும் நாங்கள் தடுக்கப்போவதில்லை எனவும் மாகாண சபை அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ஐந்து வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத என்.பி.பி அமைச்சர்கள் – மௌனம் களைத்த என்.பி.பி அமைச்சர் !

ஐந்து வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத என்.பி.பி அமைச்சர்கள் – மௌனம் களைத்த என்.பி.பி அமைச்சர் !

அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன். என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவு பெற்றுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவிவகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேற்றாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம். எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது. நாம் அடித்தளத்திலிருந்து மேல் எழுந்து கொண்டிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.

 

ஐபிசி பாஸ்கரனின் தடாலடி அறிவிப்பும் அரசியலுக்கான நகர்வும் !

ஐபிசி பாஸ்கரனின் தடாலடி அறிவிப்பும் அரசியலுக்கான நகர்வும் !

“என்ன தொழில் தெரியுமோ, அந்த தொழிலுக்கு ஏற்ற வேலை நான் தாறேன்” என அழைப்பு விடுக்கின்றார் ஐபிசி பாஸ்கரன். இயக்கச்சியில் இயங்கும் றீச்சாவில் காப்பென்டர் வேலை, பிளம்பர் வேலை, வெல்டிங் வேலை, மேசன் வேலை போன்ற வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறும் பாஸ்கரன் மற்றும் ராற்றோ ( Tattoo) குத்தவும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடுகிறார். ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி வார்க்கவும், வாகனங்கள் ஓடவும், உணவகத்தில் வேலை, தீம் பார்க்கில் இருக்கின்ற விளையாட்டு இயந்திரங்களை இயக்கும் மெசின் ஒப்பிறேற்ரர்கள் என பல்வேறுபட்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக காணொலி வெளியிட்டுள்ளார். அத்துடன் பல கவர்ச்சிகரமான சம்பளக் கொடுப்பனவுகளையும் அறிவித்துள்ளார். அதில் முக்கியானது நேர்மையாக 5 வருடங்கள் தன்னிடம் வேலை செய்தால் இரண்டு பரப்பு காணியில் வீடு கட்டித் தருவதாகவும் வாக்குறுதியளிக்கிறார். தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தங்கும் விடுதியுடன் மூன்று நேர உணவுடன் வேலை கொடுப்பேன் என்கிறார். அத்துடன் ஏற்கனவே 110 பேர் றீச்சாவில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள் என்றும் றீச்சாவில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரவாதம் அளிக்கின்றார்.

முக்கியமாக விஷேட தேவைகள் உடையவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றும் கூறுகிறார் பாஸ்கரன். கந்தையா பாஸ்கரனின் வேலைவாய்ப்பு அறிவுப்புக்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், அவர் தொழிலாளர் நலன்புரி சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று தொழிற்சங்கவாதிகள் கூறுகின்றனர். குறைந்த சம்பளத்தில் கூடிய வேலைவாங்கல், தொழிலாளர்களின் விடுமுறை மற்றும் ஓய்வுநேரம், உடல், உள சுகாதாரம், பணிச்சுமை, மேலதிக வேலைக்கான படி மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிடப்படும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சமூக சேவையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விடயத்தில் வட மாகாண ஆளுநர் மற்றும் கிளிநொச்சி பிரதேச சபை போன்றனவும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஐபிசி பாஸ்கரனின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கள் அவரது வட மாகாண முதலமைச்சர் கனவை சாத்தியமாக்குமா? என்பதை எதிர்வரும் காலம் பதில் சொல்லும்.

வடக்கில் வேலை வாய்புக்கள் இல்லாமல் இல்லை. இருக்கின்ற வேலைகளை செய்வதற்கு இளைஞர் மற்றும் யுவதிகள் தயாராகவும் இல்லை. ஒருபக்கம் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் உதவிகளையே தமது வாழ்வாதாரமாக எதிர்பார்த்து வாழ்கிறார்கள். மறுபுறம் தாங்களும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை வேலைக்கு ஆட்கள் கிடைக்காமையால் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தும் ஏன் நேபாளத்திலிருந்தும் வந்து வேலை செய்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகங்களில் தங்கும் விடுதிகளில் இந்நிலமையை காணக்கூடியதாக உள்ளது.

உண்டியல் குலுக்கி வாழாமல் உழைத்து வாழும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு சமூகத்தின் தலையாய கடமையாகும்.

 

யாழுக்கு தண்ணீர் வழங்குவதை லண்டன் கற்பக விநாயகர் தடுப்பது ஏன்? லண்டன் கற்பக விநாயகர் ஆலயமும் அதன் அரசியலும் !

லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் குறிப்பாக அதன் தலைவர் எம் கோபாலகிருஷ்ணன், கற்பக விநாயகரை தமிழ் அரசியலோடு அதன் ஆரம்பம் முதல் இணைத்துள்ளார். சுன்னாகம் கிணறுகளில் கழிவு எண்ணெய் வந்ததற்குப் பின்னிருந்த ஊழல் மோசடியாளர்களான பொன் ஐங்கரநேசன், மாவை சேனாதிராசா, மற்றும் யாழுக்கு தண்ணீர் வழங்குவதைத் தடுக்கும் பா உ சிறிதரன் ஆகிய ஊழல் மோசடி அரசியல்வாதிகளை கற்பக விநாயகரின் திருவிழாக்களில் காணலாம். தமிழ் மக்களின் மட்டுமல்ல மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளான தண்ணீரில், தமிழ் மக்களின் பொது எதிரிகளாக கடந்த ஆட்சிக்காலங்களில் இருந்த பேரினவாத சக்திகளே கை வைக்கவில்லை. தாகத்திற்கு தண்ணீர் வழங்குவது என்பது மிகச் சிறந்த அறம். அந்தக் குடி தண்ணீரை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்க மறுத்து விலாங்கு மீன் போன்று அரசியல் செய்யும் சிறிதரன் கற்பக விநாயகர் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றார். அவரோடு ஐங்கரநேசன் மற்றும் மாவை ஆகியோரும் கொண்டாடப்படுகின்றனர். கற்பக விநாயகரின் உண்டியல் பணமும் அர்ச்சனைப் பணமும் கூட யாழ் மக்களின் தாகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது காஸாவில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனர்களின் தண்ணீர், உணவு, உறைவிடம் என எல்லாவற்றிலும் தன் கையை வைத்து ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை எப்படிச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதற்கு மாறாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்களாக அறியப்படும் பா உ சிறிதரன், பொன் ஐங்கரநேசன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே முதுகில் குத்துகின்றனர். அவர்களின் மக்கள் விரோத அரசியல் நடவடிக்கைகளுக்கு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருமானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூட லண்டன் கற்பக விநாயகரின் தேர்த்திருவிழாவில் பா உ சிறிதரன் கலந்துகொண்டார். சிறிதரனுடைய அரசியலுக்கு நிதி வழங்குபவர்களில் லண்டன் கற்பக விநாயகர் ஆலயமும், அதன் தலைவர் எம் கோபாலகிருஷ்ணனும் ஐபிசி பாஸ்கரனும் முக்கியமானவர்கள்.

கிளிநொச்சி விவசாயிகளை யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிராகத் தூண்டிவிட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். கிளிநொச்சி விவசாயிகளை வஞ்சித்து யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கேட்கவில்லை. இரணைமடு அணைக்கட்டை நான்கு அடிக்கு உயர்த்தி நீர்க்கொள்ளளவை அதிகரித்த பின்னரேயே மேலதிக நீரை யாழ் கொண்டு செல்ல கேட்கின்றனர். அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொண்டிருந்தனர். தற்போது ஆண்டுதோறும் 20 மில்லியன் கனமீற்றர் தண்ணீர் இரணைமடுவில் இருந்து கடலுக்குள் விடப்படுகின்றது. ஆனால் யாழ் மக்களுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் கன மீற்றர் தண்ணியே தேவைப்படுகின்றது என்றும் அதனை வழங்குவதால் கிளிநொச்சி மக்களுக்கோ விவசாயிகளுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார் நீர் முகாமைத்துவ நிபுணர் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார். பா உ எஸ் சிறிதரன் மற்றும் பொன் ஐங்கரநேசன் போன்ற மோசடி அரசியல்வாதிகளும் அவர்களோடு கிளிநொச்சி நீர்த்திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுபடுவதாக கலாநிதி எஸ் சிவகுமார் குற்றம்சாட்டுகின்றார். கடலுக்குள் செல்லும் தண்ணீரை யாழ் மக்களுக்கு குடிக்கக் கொடுக்க மறுப்பது மிகப்பெரிய அநீதி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், யாழ் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான பங்களிப்பை அவசரமாச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகளுக்கு அழுத்தங்கள் வழங்க வேண்டும் என்கிறார் ஜேர்மனியில் வாழ்கின்ற சுப்பிரமணியம் உதயஜோதி. இங்கு பிரதேசவாதம் பேசுவது அர்த்தமற்றது எனவும் யாழ்ப்பாண தரையமைப்பு தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடிய தரையமைப்பு அல்ல என்றும் தெரிவிக்கும் அவர், யாழ்ப்பாணத்து கிணற்று நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதை அங்குள்ள கிணற்று நீரைக் குடிப்பவர்கள் உணருவார்கள் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணக் கிணற்று நீரில் நைற்றஜன் அளவு அதிகம் இருப்பதையும் தற்போது இடநெருக்கடி காரணமாக கிணற்றுக்கும் மலசலகூடத்துக்கும் உள்ள நெருக்கம் காரணமாக மலசலகூடக் கிழிவுகள் கிணற்று நீரோடு கலப்பதன் ஆபத்தை காலஞ்சென்ற பேராசிரியர் நடராஜா சிவராஜா தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீரால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளதும் யாழ் மருத்துவர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. சில மரணங்களும் இதன் காரணமாக ஏற்படுகின்றது. இது தொடர்பான சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இதன் பாராதூரமான நிலை வெளிவரும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு உதவுகின்ற போது பொறுப்புடன் நடந்தது கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்களும் தாங்கள் பொது நன்மைகருதிச் செலுத்தும் பணம் சரியான முறையில் செல்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடர்பில் லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் தனது கருத்தை வெளிப்படுத்தினால் அதனை பதிவு செய்ய தேசம்நெற் தயாராக உள்ளது.

 

புலிகள் வழங்க அனுமதித்த தண்ணீரைத் தடுத்த பா உ சிறிதரன் – கிளி க்கு விவசாயி முகம் யாழுக்கு புலி முகம் சிறிதரன் பிழைக்கத் தெரிந்த ஒரு விலாங்குமீன் !

புலிகள் வழங்க அனுமதித்த தண்ணீரைத் தடுத்த பா உ சிறிதரன் – கிளி க்கு விவசாயி முகம் யாழுக்கு புலி முகம் சிறிதரன் பிழைக்கத் தெரிந்த ஒரு விலாங்குமீன் !
இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் திட்டத்துக்கு, கிளிநொச்சி விவசாயிகளுடன் கலந்தாலோசித்து, தங்களுடைய முழு ஆதரவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கி இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் மௌனித்ததும் அரசியலுக்குள் குதித்த சிறிதரன் 2010இல் ஈபிஆர்எல்எப் பட்டியலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றதும் புலிகளின் முடிவை, தன்னுடைய சொந்த அரசியல் நலன்களுக்காக, தன்னுடைய வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக கிளிநொச்சி – யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதத்தைக் கிளப்பிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு தண்ணி தரமாட்டோம் என்று கிளிநொச்சி விவசாயிகளை யாழ்பாணத்துக்கு எதிராகத் திருப்பி விட்டுள்ளார்.
ஆரம்பத்தில் வடமாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சி வி விக்கினேஸ்வரன் எடுத்த உருப்படியான விடயங்களில் ஒன்று இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு வர வேண்டும் என்று கோரியது. ஆனால் பா உ சிறிதரன் வழங்கிய அழுத்தத்தால், இந்த முடிவை மாற்றிக் கொண்டார் சி வி விக்கினேஸ்வரன். இவருடைய தலைமையில் இருந்த வடமாகாண சபை, மோசடி மற்றும் ஊழல்கள் காரணமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில தினங்களுக்கு முன் மற்றுமொரு பெரும் மோசடியைச் செய்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீரைக் கொண்டுவரும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன் இவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட வரைபை மாற்றியுள்ளனர். கிளிநொச்சியில் பா உ சிறிதரனின் நண்பர் குருகுலராஜா இருந்த காலம் முதல் கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின் தங்கி 23, 24வது மாவட்டமாக இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துக்கு தண்ணீரைத் தடுத்து கோடிக்கணக்கான நிதியை வீணாக்கி தமிழ் மக்களைத் தண்ணீருக்குத் தவிக்க விட்டு தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றார் சிறிதரன்.
இரணைமடுத்திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் தங்கள் அதிகாரத்தை வைத்திருக்கும் போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இதற்கான முதலீட்டை – கடனை வழங்குவதற்கு முன் ஆசிய அபிவிருத்தி வங்கி இத்திட்டத்திற்கு விடுதலைப் புலிகளுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தது. அதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சி விவசாயிகளுடன் உரையாடி விவசாயிகள் சம்மேளனத்தை உருவாக்கி தலைவராக ஒருவரை சு ப தமிழ்செல்வன் நியமித்தார், கிளிநொச்சி விவசாயிகளுடைய குறைகளைக் கேட்டு அறிந்தனர். அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையின்படி இரணைமடு அணைக்கட்டு உயர்த்தப்பட்டு அவர்களுடைய ஏனைய நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் இன்னமும் கிளிநொச்சியில் வாழ்கின்றார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமயிலான ஈபிஆர்எல்எப் ‘மண்டையன் குழு’ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்ட, இவர்களுடன் கைகோர்த்தார் சிவஞானம் சிறிதரன். தற்போது எஸ் சிறிதரன் கனடா சென்று திருப்பி இருக்கின்றார். ஆனால் அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் குடும்பம் கனடாவில் இருந்தும், அவர் கனடா செல்ல முடியாது.
காரணம் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக வெளிவந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த திருச்செல்வத்தின் ஒரே மகனைப் படுகொலை செய்தவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் என்று தற்போது கனடாவில் வாழும் திருச்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். திருச்செல்வத்தை போடுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர் எல்எப் தேடிச்சென்ற போது திருச்செல்வம் ஓடி ஒழிந்துவிட்டார். அப்போது ஏ ஏல் படித்து நான்கு பாடத்திலும் ஏ சித்திபெற்று பிரபல்யயமாகப் பேசப்பட்ட அம்மாணவன் அகிலன் திருச்செல்வம், தந்தைக்குப் பதிலாக கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். மலவாசல் வழியாக சோடாப் போத்தல் செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அப்பேர்ப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் சிறிதரன். அப்போது இவர்கள் எல்லோரும் வீட்டுச் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றி பெற்றதும், சிறிதரன் தன்னுடைய நீண்ட கால அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க ஈபிஆர்எல்எப் இலிருந்து தமிழரசுக் கட்சிக்கு கட்சி தாவினார். ஒரு கூட்டணிக் கட்சியிலிருந்து இன்னொரு கூட்டணிக் கட்சிக்குத் தாவினார்.
தேர்தலில் வென்ற புதிதில் இரணைமடுத் திட்டம் ஆரம்பமாகியது. சற்று அமைதியாக இருந்து யாழ்ப்பாணத்துக்கு தணணீர் கொண்டு செல்வதற்கு உடன்பட்டவர் பின்னர் நீண்டகால அரசியல் நோக்கில் கிளிநொச்சியை தன்னுடைய கட்டுப்பாட்டு பிரதேசமாக்க பிரச்சினையை கிளற ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமலாக்கப்பட்டதும், ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் திட்டத்துக்கான ஆதரவை உறுதிப்படுத்த மற்றுமொரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டி வந்தது. அதனால் ஒரேயொரு தடவை இயங்கிய விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையில் செல்வாக்குத் செலுத்திய பா உ சிறிதரன் முதலமைச்சர் மற்றும் பொன் ஐங்கரநேசன் ஆகியோரை வளைத்துப் போட்டு இத்திட்டத்திலிருந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடனும் சேர்ந்து தண்ணீர் மோசடியில் ஈடுபட்டனர். இருந்த திட்டங்களை குழப்பியடித்து புதிய திட்டங்களை உருவாக்கி அதிலிருந்து லாபமீட்டினர். இதில் மாவை சேனாதிராஜாவும் பொன் ஐங்கரநேசனும் சுன்னாகத்தில் கழிவு எண்ணை யாழ் கிணறுகளுக்குள் வந்த விடயத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தமை தெரிந்ததே.
இந்தப் பின்னணியில் சிறிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட விவசாயிகள் பிரதிநிதி மீது துரோகப்பட்டம் கட்டி அவரைப் பதவி விலக வைத்தார். அதன்பின் யாழ்ப்பாணத்திற்க்கு தண்ணீர் கொண்டு செல்லாமல் இருக்க புதிய நிபந்தனைகளை தன்னுடைய வலதுகரமான இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகனை வைத்து மேற்கொண்டார். அவையாவும் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கிளிநொச்சித் தண்ணீரை கடலுக்கு வேண்டுமானால் அனுப்புவோம் ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப மாட்டோம் என பா உ சிறிதரன் கோஸ்டியினர் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.
இரணைமடு நீரை யாழ் கொண்டு செல்ல வேண்டாம் என நேரடியாகவோ மறைமுகமாகவோ தடுக்கின்ற பா உ சிறிதரன், சிவமோகன் மற்றும் சமூக ஊடகவியலாளர், மற்றும் சுயேட்சை வேட்பாளர் த கிருஷ்ணன் ஆகியோருடன் நேர்காணலுக்காக தொடர்பு கொண்ட போதிலும் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களுடைய கருத்துக்களையும் மக்கள் முன்வைக்க வாய்ப்பளிக்க விரும்புகின்றோம்.

கறுப்பினத்தவர் கொலை – மீண்டும் அம்பலமான அமெரிக்கப் பொலிஸாரின் வக்கிரமுகம்

கறுப்பினத்தவர் கொலை – மீண்டும் அம்பலமான அமெரிக்கப் பொலிஸாரின் வக்கிரமுகம்
நியூயோர்க் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பினத்தவரான 43 வயது ரோபேர்ட் ப்ரூக்ஸ் என்ற கைதி பொலிஸாரால் தாக்கப்பட்ட காணொலி வெளியாகியுள்ளது. கடந்த டிசெம்பர் 9ஆம் திகதி ரோபேர்ட் ப்ரூக்ஸ் சிறைச்சாலை மருத்துவமனையில்வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில், அவரது மரணத்துக்கு “கழுத்தை அழுத்தியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல்” காரணம் என உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 13 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஒரு சிறைச்சாலை மருத்துவமனைத் தாதியர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் போது அதிகாரி ஒருவரின் உடல் கமெராவில் பதிவாகிய காணொலியை நியூயோர்க் சட்டத்துறை அதிகாரி 27ஆம் திகதி வெளியிட்டுள்ளார். காணொலியில் ரோபேர்ட்டை மூன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தாக்குவது, அவரின் முகத்திலிருந்து இரத்தம் வடிவது, அவரின் கழுத்தை அதிகாரி ஒருவர் நெரிப்பது போன்ற பல கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
தன்னுடைய காதலியை கொலைசெய்யும் நோக்கில் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் ரொபேர்ட் ப்ரூக்ஸ்க்கு 2017ஆம் ஆண்டு 12ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2020இல் ஜோர்ஜ் பிளெய்ட் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்த காணாலி கறுப்பினத்தவர்களின் மீதான அமெரிக்கப் பொலிஸாரின் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருந்தது. தொடர்தும் ஆங்காங்கே இவ்வாறான சம்பங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் ரோபேர்ட் ப்ரூக்ஸ் தாக்கப்பட்ட காணொலி மீண்டும் பொலிஸாரின் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகள் விடுதலை கோரி கையெழுத்து வேட்டை

முன்னாள் போராளிகள் நலன்புரிசங்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கோரிக்கை மகஜருக்கு மக்களிடம் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. அப்போது சர்வ மதத் தலைவர்களும் , சமூக அமைப்புக்களும் மற்றும் பொதுமக்களும் கையொப்பம் இட்டனர். ஆளும் அநுர தலைமையிலான அரசு தன்னுடய தேர்தலில் வாக்குறுதியாக வழங்கிய அ்ரசியல் கைதிகளை விடுதலையை உத்வேகப்படுத்தும்படியாகவே இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான செ. அரவிந்தன் இந்த வருடம் மார்ச் 26 இல் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப்பிரிவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பா.உ சிறிதரனின் தண்ணீர் மோசடி – கடலுக்கு தண்ணீர் போனாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் போக கூடாது.

பா.உ சிறிதரனின் தண்ணீர் மோசடி – கடலுக்கு தண்ணீர் போனாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் போக கூடாது.

இதுவரை வெளிவராத உண்மைகள்: பா உ எஸ் சிறிதரனின் தண்ணீர் மோசடியும் வீணடிக்கப்பட்ட திருப்பி அனுப்பப்பட்ட கோடிக்கண நிதியும்!

பா உ எஸ் சிறிதரனின் தண்ணீர் அரசியல் மோசடியால் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் பல மில்லியன் நீர்வள அபிவிருத்திக்குப் பயன்படுத்தபடாமல் வீணடிக்கப்பட்டுவிட்டதாகவும் ஓய்வு பெற்ற பேராசிரியரும் வடக்கின் நீர் முகாமைத்துவத்தை முன்னெடுத்தவருமான கலாநிதி சிவகுமார் சுப்பிரமணியம் தேசம்நெற்றுக்கு இன்று தெரிவித்தார். இலங்கையில் உள்ள அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகவும் உணர்ச்சியூட்டும் ஏமாற்று அரசியலாலும் தமிழீழம் கேட்ட மக்களுக்குச் சேரவேண்டிய அபிவிருத்தி நிதி வீணடிக்கப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்டது என்கிறார் பொறியியல் கலாநிதி எஸ் சிவக்குமார்.

2010இல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பா உ சிறீதரன், இரணைமடு அணைக்கட்டை உயர்த்தி அதன் தண்ணீர் கொள்வனவை அதிகரித்து யாழ் மாவட்டத்துக்கு தண்ணீர் விநியோகம் மேற்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டு, 266 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒதுக்கியது. இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளில் குழாய்கள் பொருத்தப்பட்டு நீர் தாங்கிகளும் கட்டப்பட்டு விட்டது. இந்நிலையில் எல்லாவற்றுக்கும் உடன்பட்ட பா உ சிறிதரன் இறுதிக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்ற பிரச்சினையை முன்வைத்தார்.

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டது. இந்த மோசடியில் நீர்ப்பாசனத் திணைக்களத்திலிருந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருந்தனர். தங்களுடைய சொந்த நலன்களுக்காக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் தூண்டி விடப்பட்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொடுத்தால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டே விவசாயிகள் தூண்டிவிடப்பட்டதாக வடக்கின் ஆறுகள் குளங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட நீர்முகாமைத்துவ நிபணர் கலாநிதி எஸ் சிவகுமார் தெரிவித்தார். இரணை மடுக்குளத்தின் தண்ணீரை யாழ்பாணம் கொண்டுவருவதால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்த கலாநிதி எஸ் சிவகுமார், வடக்கில் ஆண்டு தோறும் 200 மில்லியன் கனமீற்றர் அளவு மழைநீர் கடலைச் சென்றடைகின்றது என்றும் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்திலிருந்து 20 மில்லியன் கனமீற்றர் அளவு நீர் ஆண்டுதோறும் கடலுக்குச் செல்வதாகவும் கலாநிதி எஸ் சிவகுமார் தெரிவித்தார். ஆனால் யாழ்ப்பாணத்து நீர்த் தேவைக்கு வெறும் 10 மில்லியன் கனமீற்றர் அளவு நீரே தேவைப்படுவதையும் கலாநிதி சிவகுமார் தெளிவுபடுத்தினார்.

தற்போது யாழில் வீடு வாங்கி நிரந்தரமாக குடும்பத்துடன் வாழும் எஸ் சிறீதரன் தனது வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு, இந்த தண்ணீர் மோசடியில் ஈடுபடுகின்றார். இது பற்றி பா உ இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியது முற்றிலும் உண்மை என்பதையும் கலாநிதி சிவகுமார் உறுதிப்படுத்தினார்.

விஞ்ஞான அறிவியல் அடிப்படையில் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் கனமீற்றர் நீரைக் கொண்டு செல்வதால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதை அனுபவமிக்க நீர்முகாமைத்துவ நிபுணராக தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் கலாநிதி சிவகுமார் தன்னுடைய நேர்காணலில் தெரிவித்தார்.