18

18

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் !

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 

ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயற்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) பயங்கரவாத அமைப்பின் இரண்டு நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

 

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததுடன், சிறுமிகள் மூவர் காயமடைந்தனா்.

 

இந்த நிலையில், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் இன்று (18) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியானதாக மாகாணத்தின் துணை ஆளுநர் அலிரேசா தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தான் – ஈரான் இடையிலான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் !

செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

 

ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

 

கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார்.

காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இலக்குகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுதது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத்  தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை இத்தாக்குதல்களில் அமெரிக்கப்படைவீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 

இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.