அமைச்சர்களின் 50 ஆடம்பர குடியிருப்புக்கள் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால
அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 ஆடம்பர உத்தியோகபூர்வ குடியிருப்புகளை, அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலான திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரச கட்டிடங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக புதிய வளாகங்களைக் கோரியுள்ளதால், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு இந்த குடியிருப்புகளில் ஒன்று ஒதுக்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த குடியிருப்புகளுக்கு ஏற்கனவே அதிக அளவு பொது நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே அவை மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் அதிகப்படியான சலுகைகளை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர் விஜேபால, அரசியல்வாதிகளுக்கான வாகன அனுமதிகளை அரசாங்கம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. இதற்கிடையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தில் எந்த அமைச்சரும் ஆடம்பர குடியிருப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என ஆட்சியமைப்பதற்கு முன்பே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.