2025

2025

காசாவின் நிலைமை குறித்து இலங்கை கவலை ! கண்டிக்க வேண்டும் என்கிறார் எம்.பி ரவூப் ஹக்கீம் !

காசாவின் நிலைமை குறித்து இலங்கை கவலை ! கண்டிக்க வேண்டும் என்கிறார் எம்.பி ரவூப் ஹக்கீம் !

 

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், மேலும் மோசமடைய வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டது. பிராந்தியத்தில் விரைவில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று இலங்கை நம்புவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நீண்ட காலமாக பாலஸ்தீன மக்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற போராளி. அவர் பாலஸ்தீன மக்கள் மீது தனக்குள்ள கரிசனையை வெளியிட்டு வருபவர். ஆனால் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளன. அதனால் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதுதொடர்பில் அடக்கித் தான் வாசிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

காசாவில் இஸ்ரேல் இந்த வாரம் வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களில் 700 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்றைய தினம் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்போது எம்.பி ரவூப் ஹக்கீம், இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை, தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல், இன்று காஸாவில் எவ்வாறு இனப்படுகொலைகளைச் செய்கின்றதோ அதனையே எண்பதுக்களில் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கும் கற்பித்தது. நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு புலியும் இருக்கும் என்றது தான் அவர்களின் தாக்குதல் தந்திரம். இதனையே இவர்கள் ஜேவிபி யை அழிக்கவும் பயன்படுத்தினர். காஸாவில் பிறப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் தற்போது ஆட்சியில் உள்ள தீவிர வலதுசாரிகள், அதற்காக குழந்தைகளையும் பெண்களையும் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். காஸாவில் நடைபெறுவது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் முழுமையான ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது.

மேற்கு நாடுகளுக்கு ஈடாக இலங்கையில் குடும்ப மருத்துவர் முறை விரைவில் !

மேற்கு நாடுகளுக்கு ஈடாக இலங்கையில் குடும்ப மருத்துவர் முறை விரைவில் !

ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதையும் அடிப்படையாக கொண்டு, குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.

இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்றும் மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறினார்.

பாராளுமன்றச் சலுகைகள் அமைச்சுச் சலுகைகள் குறைக்கப்படுகின்றது !

பாராளுமன்றச் சலுகைகள் அமைச்சுச் சலுகைகள் குறைக்கப்படுகின்றது !

 

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 1 மில்லியன் ரூபாய் காப்பீட்டு இழப்பீட்டை 25 இலட்சமாக குறைக்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் ! 

த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் !

த பினேன்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு உரியத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த எம்.பி கஜேந்திரகுமார், மூடப்பட்ட குறித்த நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. குறித்த நிறுவனம், மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் அந்த நிறுவனத்தினால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அத்துடன் த பினேன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலத்தில் செய்வதற்கு நீதிமன்றம் விற்பனை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போதைய மதிப்பீட்டை விடவும் குறைந்த அளவில் அவை விற்பனை செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலை சில நற்செயல்களுக்காகவும் பேசப்படுகின்றது ! 

யாழ் பல்கலை சில நற்செயல்களுக்காகவும் பேசப்படுகின்றது !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த மதகுரு, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, நேற்றையதினம் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை அரசியல் வரலாறு பாராளுமன்றத்தில் !

படுகொலை அரசியல் வரலாறு பாராளுமன்றத்தில் !

மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் 1300 பெயர்களைக் கொண்ட பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள ரோஹிணி குமாரி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்பே ஜே.வி.பி-யால் சிறுவர் படையினர் உருவாக்கப்பட்டனர் இதற்கு சிறந்த உதாரணம், 70 வயதுடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெண்ணைக் கொலை செய்ய, 13 வயதான ‘கந்தலே போனிக்கி,” பயன்படுத்தப்பட்டார் என்றார்.

இது குறித்து பதிலளித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண நூலகத்தை எரித்து தமிழர்கள் மீது படுகொலை சட்டங்களை ஏவியவர்கள் இன்று கொலைப் பட்டியல் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள் என்றார்.

இந்தப் படுகொலை அரசியல் தெற்குக்கு மட்டுமானதல்ல, வடக்கிலும் மிக நீண்ட காலமாக நடந்தது. வடக்கு கிழக்கில் உருவான நாற்பது வரையான விடுதலை அமைப்புகள் உருவாக்கி ஆயுதங்களால் மட்டுமே பேசிக்கொண்டனர். தமிழ் மக்கள் தியாகிகள் துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என முத்திரை குத்தப்பட்டனர்.

இது பற்றி ஈழநாடு பத்திரிகை வருமாறு எழுதியுள்ளது: “தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் தேவைக்காகவே ஒவ்வொரு கால கட்டங்களில் துரோகி, தியாகி என்னும் சொற்களை பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகளின் ஆடு புலியாட்டத்தின்போது, ஒ ரு குறிப்பிட்ட காலகட்டத்தில் துரோகிகள் என்போர் திடீர் தியாகிகளாகி விடுவதும் பின்னர் தியாகிகள் என்போர் திடீர் துரோகிகளாவதும் சர்வசாதாரணமானது.”

இதனை மழைக்கு முளைக்கும் காளான்கள் போல் தேர்தலை நோக்கி உருவாகும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

வரவு செலவு திட்டம் – 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

வரவு செலவு திட்டம் – 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்றவர்களைப் படிக்காதவர்கள் கை நாட்டு என்று மட்டம் தட்டும் அர்ச்சுனாவுக்கு வேட்புமனு படிவம் நிரப்பத் தெரியவில்லை !

மற்றவர்களைப் படிக்காதவர்கள் கை நாட்டு என்று மட்டம் தட்டும் அர்ச்சுனாவுக்கு வேட்புமனு படிவம் நிரப்பத் தெரியவில்லை !

 

பா உ அர்ச்சுனா மற்றவர்களை அறிவற்றவர்களாக ஏளனம் பண்ணுபவர். அமைச்சர் ராமலிங்கத்தையும் பல தடவைகள் அவருடைய மலையகப் பின்னணியை வைத்து அவமானப்படுத்துபவர். அவர் அமைச்சர் சந்திரசேகரனைமட்டுமல்ல மலையக சமூகத்தையே கீழ்த்தரமாக பேசிவருபவர். தனக்கு மூன்று பட்டங்கள் இருக்கின்றது, மூன்று பல்கலைக்கழகங்களில் படித்தவர், என்றெல்லாம் பெருமை பேசிவந்தவர். கௌசல்யா நரேனையும் சிறந்த சட்டத்தரணியாக பெருமை பேசுபவர். ஆனால் இறுதியில் வேட்புமனுவையே நிரப்பத் தெரியவில்லை என்றதும் படிவங்களில் கையெழுத்துப் போடாமல் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்ததும் இவர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது.

இது தொடர்பில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பா உ அர்ச்சுனா தமிழ் பெண்களை அவமானப்படுத்தி வருவதை கண்டித்ததுடன், தன்னைப் பற்றியும் பொய்களைப் பரப்பி வருவதையும் சுட்டிகாட்டினார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பல பகுதிகளில் யாழ்ப்பாணத்தின் முன்னணி கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இது ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி எனவும் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் எனவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம் என்றார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பல தமிழ்தேசிய கட்சிகளும் என்.பி.பியை குற்றஞ்சாட்டிவரும் நிலையில், யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களுக்குள் நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்தது போல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.

இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்ற முறைமைகள் சாதாரணமாக (A/L) கா.பொ.த. உயர் தரம் படிக்கின்ற ஒரு மாணவரிடம் கேட்டால் கூட இது தான் இப்படிதான் என தெளிவாக சொல்லுகிற போது இவர்களுக்கு தெரியாமல் இருப்பதென்பது இவர்களிடத்தே அக்கறையில்லை என்பதை காட்டுகிறது. ஆகையினால், தங்களது இயலாமையை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை பயன்படுத்த வேண்டாம் என்றார்.

மேலும் பட்டாலந்தா சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணையைப் போலவே, யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று என்.பி.பியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தொடரும் இராணுவ வீரர்கள் மீதான கைது – நாமல் ராஜபக்ச அதிருப்தி !

தொடரும் இராணுவ வீரர்கள் மீதான கைது – நாமல் ராஜபக்ச அதிருப்தி !

 

பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமற்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்கள் குறித்து அரசாங்கம் ஒரு பரந்த கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மிருசுவில் படுகொலையாளிக்கு வெளிநாட்டு பயணத் தடை !

மிருசுவில் படுகொலையாளிக்கு வெளிநாட்டு பயணத் தடை !

 

2000 டிசம்பரில் யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில், 8 பொது மக்கள் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுனில் ரத்நாயக்கவை மன்னித்து விடுவித்திருந்தார்.

இந்நிலையில், மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து மிருசுவில் படுகொலை தொடர்பாக சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.