நொதேர்ன் வைத்தியசாலைக் தொற்று நோய்க் கிருமிகள், மலசலக் கழிவுகள் யாழ் திருநெல்வேலி வீதியில் ! தூக்கத்தில் யாழ் அதிகாரிகள் !
யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களால் மக்கள் படும் துன்பம் ஒருபுறம் இருக்க கொஞ்சம் கூட சமூக நோக்கு இல்லாமல் தனியார் வைத்தியசாலைகளும் இயங்கி மக்களை சிரமத்துக்குள்ளாக்கி வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் வைத்தியசாலையான நொதேன் வைத்தியசாலை கொஞ்சம் கூட சாதாரண மக்களை பற்றிய சிந்தனையுடன் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன்வைக்கபடுகின்றது.
இந் நிலையில் வைத்தியசாலை கழிவுநீர் பொதுமக்கள் பாவிக்கும் பாதைகள் மற்றும் வீடுகளை நோக்கி திருப்பிவிடுவதாக திருநெல்வேலி பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கழிவுநீர் கழிவுகளுடன், தொற்றுநோய் கிருமிகள், மற்றும் மலக்கழிவுகளும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நொதேன் வைத்தியசாலையின் கட்டடங்கள் மின்னல் வேகத்தில் அயல் காணிகளை ஆக்கிரமித்து வருவதுடன் இந்த கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதிகள் மிக வேகமாக வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாதாரண மக்கள் கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான அனுமதிகளை பெற மாதக்கணக்கில் – வருடக்கணக்கில், யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் நிலையில், நொதேர்ன் வைத்தியசாலை போன்ற கோடிகளில் பணம் புரளும் நிறுவனங்களுக்கு மட்டும் இலகுவில் கட்டட அனுமதிகள் கிடைப்பது அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதை தெளிவாக காட்டுகிறது. இந்த நிலையை அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனும் குறிப்பிட்டிருந்தார். சாதாரண மக்கள் அரச அலுவலகங்களுக்கு சென்றால் சேவையை பெற பல மாதங்களாகின்ற நிலையில் பணம் படைத்தவர்கள் இலகுவாக தங்கள் வேலைகளை அரச அலுவலகங்களில் செய்து முடிக்கிறார்கள் என ஆளுநர் வேதநாயகன் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

