தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !
காஷ்மீரின் இரண்டு பகுதிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையேயும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியா சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகின்றது.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை என்று முற்றாக மறுக்கிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் அமைதிக்கான கோரிக்கையை இந்தியா பலகீனமாக கருதக் கூடாது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் கோரும் சுதந்திர விசாரணையில் சீனா மற்றும் ரஸ்யா நடுநிலமை வகிக்கலாம் என கருத்துப்பட தெரிவித்துள்ளார்.
முன்னராகவே பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலின் பின்னர் காஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய பாதுகாப்பு படைகளால் “கூட்டுத்தண்டணைக்கு“ ( collective punishment) உள்ளாகி வருவதாக எம்பி ரூஹீல்லா மெஹ்தி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 7 ஹமாஸ் இஸ்ரேலின் இசை நிகழ்ச்சியில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் இராணுவத்தின் கூட்டுத்தண்டணைக்கு ஹாசா மக்கள் பலியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இதுவரை 9 வீடுகளை காஷ்மீரில் இந்திய ராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. வீடுகள் போராளிகளுக்கு சொந்தமானவை அல்ல. அந்த வீடுகளில் ஒருகாலத்தில் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் தங்கியிருந்துள்ளனர். அல்லது அங்கே அவர்கள் பிறந்து வளர்ந்துள்ளனர். அதற்காக உள்ளூர் மக்களின் வாழ்விடங்களை அழித்து அப்பாவி மக்களை இஸ்ரேல் போன்று தண்டிப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.