17

17

“கிரிக்கெட்டில் வென்றாலும் ஆப்கானிஸ்தானை விட நாம் வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளோம்.”- ஜனாதிபதி ரணில்

“கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை. தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர். கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலி – முத்தையா முரளிதரன்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா முரளிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், இந்தியாவில் இடம்பெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் இணைந்து கொண்டதுடன், போட்டிக்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

எனினும் அவரது பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமலும் இல்லை என முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும் எனவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் புதையலை தேடி அகழ்வு – பொலிஸாருக்கு ஏமாற்றம் !

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்தனர்.

குறித்த வீட்டில் புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரி இருந்தனர். நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று காலை 9,30 முதல் மதியம் 2 மணி வரையில் புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புதையல் அகழ்வதற்காக விசேட அணியினர் வந்திருந்த நிலையில் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது. மதியம் 2 மணி வரையில் அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதும், எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இலங்கைக்கு புத்துயிர் அளிக்க வாருங்கள் – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் குமார் சங்கக்கார கோரிக்கை !

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.facebook.com/Official.Kumar.Sangakkara/posts/pfbid0CRNjvqWUo1jXh44y2G7EXZYdTfb6ugn6iyFaeVoEwGCMXnzzuBZkz2fwr49Xz4fcl

உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகேயினால் பிடிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை காட்சிகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட குமார் சங்கக்கார,

“நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது! எங்கள் தீவு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது.

குறித்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள குமார் சங்கக்கார, இலங்கை மீண்டும் விருந்தினர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..

தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள குமர் சங்கக்கார,

“எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால், நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி, இங்கு சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பயண ஆலோசனைகளை தளர்த்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு கழிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, தேவையற்ற செய்திகள் நல்ல செய்திகளை விட வேகமாக பரவுகின்றன. எனவே தயவுசெய்து இதனை பகிரவும், ”என்று சங்கக்கார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீண்டாமைக் கொடுமை – மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்த கடை முதலாளி !

தமிழ்நாடு – தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர் , “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. நீங்கள் போங்க. இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்க எனச் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” என்று சொல்கிறார்.

உடனே, அதில் ஒரு குழந்தை என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறார். உடனே, ‘கட்டுப்பாடுன்னா… ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்காங்க. உங்கத் தெருவுல யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” என்று சொல்வி அந்தக் குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார்.

இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை அந்தக் கடைக்காரர் தன் சுய சாதியினர் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதன் பிறகு பல வாட்ஸ்அப் குழுக்கள் இந்த வீடியோ வைரல் ஆனது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும், அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் (கோனார் மற்றும் பட்டியல் சாதியினர்) சேர்ந்தவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோனார் சாதியினர் பட்டியல் சாதியினரிடம் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கு தங்கள் கடைகளில் எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என கோனார் சமூகத்தினர் தீர்மானம் செய்ததாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் பாஞ்சாகுளம் கிராமத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறிஅடுத்தடுத்து மோசடி – எச்சரிக்கையுடன் இருக்குமாறு மனுஷ நாணயக்கார வேண்டுகோள் !

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவிலான தனிநபர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒரு வெளிநாட்டு வேலையின் நோக்கத்திற்காக கடவுச்சீட்டு அல்லது தேவையான நிதியை வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட அமைப்பு மற்றும் அதன் உரிமத்தின் சட்டபூர்வமான தன்மையை தீர்மானிக்க உறுதிப்படுத்தல்களைப் பெற வேண்டும் என கூறினார்.

மோசடி செய்பவர்களின் தகவல்களைப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

எலிசபெத் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை – காரணம் என்ன..?

சமீபத்தில் மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரித்தானிய பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. அதற்கு பிரித்தானிய பார்லிமென்டின் பொதுச்சபை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் அனுமதி மறுத்து உள்ளார்.

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறித்து பிரித்தானியாவை சேர்ந்த எம்.பி.,க்கள் கடந்த ஆண்டு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிட்டனை சேர்ந்த 5 எம்.பி.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சீன பகுதிக்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. இதையடுத்து, ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் சீன அரசு பிரதிநிதிகள்பார்லிமென்ட் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங்குக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் இறுதி சடங்கில் சீனா பங்கேற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

குருந்தூர் மலையோடு சேர்த்து பறிபோகும் தமிழர்களின் விவசாய நிலங்கள் !

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் அப்பகுதிக்கு நேற்று (16) மாலை பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ், புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு சார்ள்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொட‌ர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

“எனது வீட்டை எரித்தவர்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டிருக்கமாட்டார்கள்.”- ஜனாதிபதி ரணில்

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியிலே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

அரசாங்க இல்லங்களை எரிப்பதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் இல்லத்தை ஆக்கிரமித்தவர்கள் அல்லது எனது வீட்டை எரித்தவர்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் என நானே தெரிவித்தேன் இதன் காரணமாகவே என்னை ஆதரிப்பது குறித்து நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சட்டத்தை மீறியவர்களே கைதுசெய்யப்படுகின்றனர் இந்த கைதுகளை நான் செய்யவில்லை பொலிஸாரிடம் விட்டுவிட்டேன் அனைத்தும் சட்டபூர்வமாக இடம்பெறுகின்றது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுவர் வியாபாரம் மற்றும் சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்த யாழில் துறைசார் கலந்துரையாடல் !

சிறுவர் வியாபாரம் மற்றும் சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (16) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பொது இடங்களில் நிகழும் சமூகச்சீர்கேடுகளை தடுத்தல் மற்றும் கண்காணித்தல், போதைப் பொருள் பாவனை மற்றும்  போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மையங்களை உருவாக்குதல், மாவட்ட மற்றும் சிறுவர் உத்தியோகத்தர்கள் ஊடாக மாணவர்களின் ஒழுக்கநெறிகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந் நடவடிக்கைகள்  உணர்வுபூர்வமான விடயமாகும். எமது சமூகத்தினை பேண வேண்டியது எமது கடமையாகும். அனைவரும்  இணைந்து கூட்டுப்பொறுப்புடன் இந் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், சட்ட வைத்தியர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர், மாவட்ட மற்றும் பிரதேச  செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.