03

03

மிக்கையில் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா?

ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை சிதறடித்தவராகக் தன் மக்களால் – ரஷ்யர்களால் கருதப்படும் ஜனநாயகத்தை கொண்டுவந்தவராக அமேரிக்க கூட்டு நாடுகளால் போற்றப்படும் சர்ச்கைக்குரிய முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் மிக்கையில் கோர்ப்பசேவின் உடல் இன்று மொஸ்கோவில் அடக்கம் செய்யப்படுகின்றது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்ட பின் இடம்பெற்ற தேர்தலில் மிக்கைல் கோர்பசேவால் ஒரு வீத வாக்குகளை மட்டுமே தக்க வைக்க முடிந்தது. தனது கடைசிக் காலங்களை மிக்கையில் கோர்பசேவ்வால் நிம்மதியாகக் கழித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

பனிப் போரை இருதரப்பும் விட்டுக்கொடுத்து முடிவுக்கு கொண்டுவரவில்லை. சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகள் நேட்டோவில் அங்கத்துவம் பெற ரஷ்யாவின் எல்லைகளை நேட்டோ சுற்றி வளைத்துக் கொண்டது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட நேட்டோ அந்த நாடுகளை அணி சேர்த்துக்கொண்டது. இன்றைய ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு வித்திட்டதும் அன்று 1991இல் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மிக்கைல் கோர்பசேவ்.

அமெரிக்காவும் நேட்டோவும் கனவிலும் எதிர்பாரத்திராத வகையில் சோவியத் யூனியன்வை சிதறடித்தது மிக்கைல் கோர்பசேவ்வின் மீள்கட்டமைப்பு என்ற ‘பிறிஸ்ரொய்கா – perestroika’. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவருடைய வெளிநாட்டு அமைச்சர் பொறிஸ் யெல்சின் நேட்டோ நாடுகளின் குட்டி நாய் போலவே நடந்துகொண்டார். குடிக்கும் பெண்களுக்கும் அடிமையான இவர் பொதுவெளியில் கூட கண்ணியத்தை கடைப் பிடிப்பதில்லை. மிகைல் கோர்பசேவ்வும் – பொறிஸ் யெல்சினும் சோவியத் யூனியனைச் சிதறடித்து கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் மக்டோனால்ட்ஸ் போன்ற தங்கள் பல்தேசியக் கொம்பனிகளை ரஷ்யாவினுள் நுழைத்தன. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்தது. தங்கள் குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கைக்கு ரஷ்யப் பெண்கள் தங்களை விபச்சாரத்திற்கு தள்ள வேண்டிய நிலை 1990க்களில் ஏற்பட ஆரம்பித்தது.

மிக்கைல் கோர்ப்பசேவின் இறுதி அடக்கம் அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்படவில்லை. ரஷ்யர்கள் அவருடைய மரணம் தொடர்பில் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. தற்போதைய ரஷ்யத் தலைவர் விளாடிமிர் பூட்டினுக்கும் – மிகைல் கோர்ப்சேர்வ்க்கும் கொள்கை அடிப்படையில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. மிகைல் கொர்பசேவின் மீள்கட்டமைப்பு பிறிஸ்ரொய்கா இந்த நூற்றாட்டின் மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட விளாடிமீர் பூட்டின், மேற்குநாடுகளை கோர்பசேவ் மிகையாக நம்பிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

1980க்களில் பனிப்போர் காலத்தின் அரசியல் சூழல் இலங்கையிலும் பிரதிபலித்தது. இந்திய – சோவியத் உறவுகள் மிக இறுக்கமாக இருக்க, அமெரிக்க இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அயல் நாடான இலங்கையில் தனக்கு எதிரான போக்கில் அமெரிக்காவுக்கு சாயும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசுக்கு பாடம் புகட்ட வளர்த்து எடுக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டமும். தமிழீழ விடுதலைப் புலிகளும். அதன் பின் வேலியே பயிரை மேய்ந்ததும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றானது. இந்த அரசியல் சதுரங்கத்தில் அரசியல் கூட்டுக்கள் மாறியது. அமெரிக்காவும் இந்தியாவும் நட்பாகியது. விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகினர். இந்தியா உசுப்பிவிட்ட தமிழீழத்துக்கு தமிழீழம் உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் துடித்தனர். பாவம் இலங்கைத் தமிழர்கள். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இருந்த உரிமைகளையும் இழந்தனர். இன்னும் இந்தியா தமிழீழம் வாங்கித் தரும் என்று அடம்பிடிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது பிஜேபி யோடு சேர்ந்து மறவன்புலவு சச்சிதானந்தம் கோஸ்டி சைவத் தமிழீழம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு கொடி பிடிக்கவும் போராடவும் நியாயம் கற்பிக்கவும் எமக்கு அரசியல் தலைமைகள் இருக்கின்றன. யாரோ பெற்ற பிள்ளைகளை விடுதலை என்ற பெயரில் எதற்கும் பலிகொடுப்பதில் இலங்கைத் தமிழர்களும் புலத்து தமிழர்களும் மகா வல்லவர்கள்.

பனிப் போர், கோடைப் போர், அரப் ஸ்பிரிங், ஹோல்பேஸ் ஸ்பிரிங் என்பதெல்லாமே மக்களை மடையர்களாக்குவதாக ஆகிவிட்டது. பிறிஸ்ரொய்கா போல். மிகைல் கோர்பசேவ்வின் பிறிஸ்ரொய்கா நேட்டோ நாடுகளுக்கு கிடைத்த அல்வா.

தமிழீழம் கேட்ட ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தியா தமிழீழம் எடுத்து தராவிட்டாலும் ஜுலி சங் தமிழீழம் எடுத்துத் தர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ரிஷி சுநாக் நிச்சயம் உதவியிருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால். எத்தளை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மக்களை?

மிகைல் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா? என்ற இந்தக் கேள்விக்கான இரு பதில்களுமே சரியானது. பதில் அளிப்பவரைப் பொறுத்தது.

“ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலம் மாத்திரமே.”- வாசுதேவ நாணயக்கார

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலம் மாத்திரமே ஆட்சியில் இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை என்பதால் அவரது ஆட்சிக் காலம் மிகக் குறுகியதாக அமையும்.

நாடாளுமன்றில் செயற்படும் சுயாதீன கட்சிகளினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார். சுயாதீன கட்சிகளினால் நாளை ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியில்  இலங்கை அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுவோர், இளைஞர், பெண்கள் உட்பட பலரை கூட்டணியின் கொள்கைகளுக்கிணங்க இணைக்க எதிர்பார்த்துள்ளது.

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சுயாதீனக் கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர், சின்னம் மற்றும் கொள்கை அறிக்கை என்பன நாளை நடைபெற இருக்கும் கூட்டணியின் ஆரம்ப விழாவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கட்சியாக செயற்படும் போது பல அரசியல் குழப்பங்கள் வருமெனவும் அவற்றை சமாதானமான முறையில் தீர்த்துக்கொண்டு அனைவருடனும் ஒண்றிணைந்து பயணிக்க வேண்டுமெனவும் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் தொடங்கும் மிடுக்கு – 2021 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடம் – மாவட்ட அடிப்படையில் மன்னார் முதலிடம் !

கடந்த காலங்களில் தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன. மாகாண அடிப்படையில் 8, 9 இடங்களையே வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றிருந்தன. தமிழர் பகுதிகளின் கல்விச்சூழல் தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடிந்ததது.

இந்த நிலையில் அண்மையில் வெளியாகியிருந்த 2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மீண்டும் வடக்கு – கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்டுத்தியுள்ளதை காண முடிகின்றது.

No description available.

2020ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தை பெற்றிருந்ததது. வடக்கு மாகாணம் 06ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் படி பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் பெறுபேற்றின் (2021) படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் . 11237 மாணவர்கள் பல்கலைகழக அனுமதிப்பிற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் மாகாண அடிப்படையில் மூன்று இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 2020ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் சுமார் 1500 மாணவர்கள் வரையில் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியிருந்தனர். எனினும் இந்த நிலையில் இந்த வருட பெறுபேறுகள் ஓரளவு சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றன. வடக்கு மாகாணத்திலிருந்து 2021ல் பரீட்சைக்கு தோற்றிய 12388 மாணவர்களில் சுமார் 8000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைகழக கற்கைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

No description available.

2021 உயர்தர பெறுபேறுகளில் மாவட்டங்களின் அடிப்படையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

2020 பரீட்சை பெறுபேறுகளின் படிவடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்தன. முதல் 5 இடங்களுக்குள் எந்த வடக்கு – கிழக்கு மாகாண மாவட்டங்கள் எவையுமே இடம்பெற்றிருக்கவில்லை.

தமிழர்கள் மீதான இன அடக்குமுறையின் ஒரு வடிவமாக வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் கல்வி நிலையை வீழ்த்துவதில் பல சதிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் உயர்தர  வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் இதன் நீடித்த தாக்கத்தின் விளைவை வெளிப்படையாக எடுத்துக்காட்டியிருந்தன. யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய வடக்கின் மாகாணங்கள் பாரிய பின்டைவை சந்தித்திருந்தன.

மாவட்ட அடிப்படையில் வடக்கில் போரினால் அதிகம்  பாதிக்கப்பட்ட பிரதேசங்களான முல்லைத்தீவு 17ஆவது இடத்தினையும், கிளிநொச்சி 21 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தன. இதுதவிர மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பு 21ஆவது இடத்தினையும், வவுனியா இறுதி இடமான 25வது இடத்தையும் பெற்றிருந்தது.

 

 

 

No description available.இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைகழகத்தெரிவுக்கான அடிப்படை தகுதியை பெற்றுள்ள மாணவர் தொகையினடிப்படையிலான  பகுப்பாய்வின் படி  வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் கனிசமானளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

 

மாவட்ட அடிப்படையிலான பெறுபேறுகளின் படி (அதாவது தோற்றுகின்ற மூன்று பாடங்களிலும் சித்தியடைவதுடன் –  common general test லும் சித்தியடைவோரின் தொகையின் படி ) மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என்பன முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளமையானது குறிப்பிடத்தக்கது. கடந்த வருட பெறுபேறுகளின் படி 10ஆவது இடத்திலிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் பெறுபேறுகள் அடிப்படையிலான நிலை 7ஆவது இடத்தினை நோக்கி நகர்ந்துள்ள அதே நேரம், வவுனியா மாவட்டம் 25ஆவது இடத்திலிருந்து 15ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. அதே நேரம் இந்த பட்டியலில் முல்லைத்தீவு 8ஆவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுபேறுகள் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளதை காண முடிகின்றது. கடந்த வருடத்தில் கொரோனா பரவலை பலர் காரணம் காட்டினாலும் கூட இந்த பிரச்சினை எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானதே. ஆகவே கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் அடுத்தடுத்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அடைவு வீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அதிக தேவையுள்ளதை இந்த பெறுபேறுகள் தெளிவாக காட்டுகின்றன.

இந்த பெறுபேறுகளின் முடிவுகள் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுகின்ற அதே நேரம் வடக்கு – குறிப்பாக யாழ்ப்பாணம் தன்னுடைய கல்வி அடைவு மட்டத்தில் தொடர்ந்து  பின்னடைவை சந்தித்து வருவதை அண்மைய கால பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றது. 2020 ஆம் ஆண்டில் 5000 மாணவர்கள் வரையில் பல்கலைகழக விண்ணப்பிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் 4500 மாணவர்களே தெரிவாகியுள்ளனர் . பல்கலைகழக இறுதி  தெரிவு அடிப்படையில் கணிக்கும் போது இந்த தொகை இன்னமும் குறைவடையும். தன்னை கல்விச்சமூகமாக அடையாளம் காட்டிக்கொண்டு வந்த யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை இன்னமும் முன்னேற்றமானதாக மாறவேண்டிய – மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாணவர்களிடையே  வேகமாக துளிர்விடும் போதைப்பொருள் கலாச்சாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமாயின் யாழ்பாபண கல்விச்சமூகம் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

கல்விக்காகவே எமது தமிழ்சமூகம் கடந்த காலத்தில் பல இன்னல்களை சந்தித்தது. போர்க்காலங்களிலும் சரி – இடப்பெயர்வுகளின் போதும் சரி – வறுமையின் போதும் சரி நமது தமிழ்சமூதாயம் கல்வியை இறுக்கமாகப்பிடித்திருந்ததது. எனினும் அண்மைய காலங்களில் வேகமாக மாணவர்களிடையே அதிகரித்துள்ள  தொலைபேசிப்பாவனை, மக்களிடம் பரவியுள்ள வெளிநாட்டு மோகம், போதைப்பொருள் கலாச்சாரம், பணம் ஈட்டும் தொழிலாக கல்வி மாறியுள்ளமை என பல காரணங்களால் வடக்கு -கிழக்கின் கல்வியும் அபாயமான ஒரு சூழலை எட்டியுள்ளது.

எனவே வடக்கு – கிழக்கின் கல்விமான்களும் – ஆசிரியர்களும் – அரச அதிகாரிகளுமாக இணைந்து வடக்கு – கிழக்கில் மீண்டும் முன்னேற்றமடைய ஆரம்பித்துள்ள இந்த ஆரோக்கியமான கல்விச்சூழலை இன்னும் ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க இயங்க வேண்டும்.

60 ஆயிரம் இளைஞர்களைக் கொன்று குவித்தவரின் மகன் தான் சஜித் பிரேமதாச  – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தமிழ் மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழிவகுத்தவரும் 60 ஆயிரம் இளைஞர்களைக் கொன்று குவித்தவரும் தனது தந்தை பிரேமதாசா என்பதனை மறந்து அடக்குமுறைகளை பற்றி அவரது மகனான சஜித் பிரேமதாச அதிகமாகவே பேசுகிறார் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எதற்கெடுத்தாலும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர் உக்ரைன் யுத்தத்தால் இதை விட மோசமான பொருளாதார நிலைமை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் போதும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது தான் பழி போடுவார்கள்.

நாட்டின் நிலைமை மிக மோசமாக காணப்படுகிறது. இத்தகைய நிலையில் ஆறு அடிப்படை விடயங்களை உள்ளடக்கி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். நாட்டின் இன்றைய நெருக்கடி நிலை நேற்று ஏற்பட்டதல்ல இது தொடர் பொருளாதார நெருக்கடி அந்த வகையில் எதிர்க் கட்சியில் சிலர் மொட்டு கட்சியை குறை கூறுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

அரச செலவினங்கள் அதிகரித்தது அரசாங்க காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல முற்பட்ட அரசாங்க காலங்களிலும் அது தொடர்ந்தது. இதை கருத்தில் கொள்ளாது மொட்டு கட்சியை குற்றஞ்சாட்டுவது எதிர்க்கட்சியின் தொழிலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இலங்கை வந்தார் கோட்டாபாய – சிறப்பு படை பாதுகாப்பு !

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதோடு,  இல்லத்தை கைப்பற்றியுமிருந்தனர் அதனையடுத்து  ஜூலை மாதம் 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய  கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார்.

May be an image of 5 people, people sitting and people standing

பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர்  சென்றார். அங்கிருந்தபடியே தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை  நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்கொக்குக்குச் சென்று தஞ்சமடைந்தார்.

அங்கு சிறைக்கைதி போல் ஒரே அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் 52 நாட்களுக்குப் பிறகு நேற்று நள்ளிரவு கொழும்பு வந்தடைந்தார். அவருக்கு இலங்கையின் அமைச்சர்களும், அதிகாரிகளும் மாலை சூட்டி வரவேற்பு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு காவல்துறை மற்றும் இராணுவம் அடங்கிய படைக்குழு புதிதாக அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைக்குழுவில் கொமாண்டோக்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.