02

02

அமெரிக்காவில் கொடூரமாக தாக்கி கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு – 7 போலீஸார் பணியிடை நீக்கம் !

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.  3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் திகதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார்.

 

அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்தனர். வீட்டுக்கு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் விரட்டிப்பிடித்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். 3வது நாளில் அந்த நபர் இறந்தார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மெம்பிஸ் போலீஸ் நிர்வாகம், இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவர்களில் 5 பேர் கருப்பினத்தவர்கள். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட டைரே நிக்கோலஸின் உடல் நிலையை மதிப்பீடு செய்து போதிய மருத்துவ உதவிகளை வழங்காத காரணத்துக்காக தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான குற்றங்களில் ஈடு படும் நபர்களை விரட்டிப்பிடிக்க ‘ஸ்கார்பியன்ஸ்’ என்ற பெயரில் அதிரடிப்படையை மெம்பிஸ் காவல்துறை 2021-ம் ஆண்டு உரு வாக்கியது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் படை தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியதால், ஸ்கார்பியன் படையை நிரந்தரமாக கலைப்பதாக மெம்பிஸ் காவல் துறை அறிவித்துள்ளது.

தொடர் பொருளாதார பிரச்சினைகள் – இங்கிலாந்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரித்தானியாவில்  5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் இராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், அரசு ஊழியர்கள் என 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தம் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றதால் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 85 சதவீத பள்ளிகள் பாதிப்பை சந்தித்தன.

லண்டனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்த முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், வரிவிதிப்பு முறை நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் சமத்துவமின்மை மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. இதனை நாடு தாங்காது. பிரிட்டனில் முன்பை விட கோடீஸ்வரர்கள் அதிகரித்துவிட்டனர். கோவிட் காலத்தில் கோடீஸ்வரர்கள் நிறைய பணம் சம்பாதித்தனர். அதற்கு ஏற்ப அவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை” என அவர் குற்றம் சாட்டினார்.

“அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற செயலால் கொரிய தீபகற்ப நிலை சிவப்புக்கோட்டை எட்டியுள்ளது.” – வடகொரியா

“அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற செயலால் கொரிய தீபகற்ப நிலை சிவப்புக்கோட்டை எட்டியுள்ளது.” என வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட வட கொரிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நட்பு நாடுகளின் பயிற்சிகளின் விரிவாக்கம் கொரிய தீபகற்பத்தை பெரிய போர் ஆயுதக் களஞ்சியமாகவும் மிகவும் முக்கியமான போர் மண்டலமாகவும் மாற்ற அச்சுறுத்துகிறது.

மிகப்பெரும் அணுசக்தியுடன் நட்பு நாடுகளின் எந்தவொரு குறுகிய கால அல்லது நீண்ட கால இராணுவ சவாலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராகவுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ மோதல் சூழ்ச்சிகள் மற்றும் விரோதச் செயல்கள் காரணமாக கொரிய தீபகற்பம் மற்றும் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் நிலைமை தீவிர சிவப்புக் கோட்டை எட்டியுள்ளது.

அணுவாயுதத்திற்கான அணுகுண்டு மற்றும் ஒரு முழுமையான மோதலுக்கு ஒரு முழுமையான மோதல் என்ற கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ முயற்சிக்கும் வடகொரியா கடுமையான எதிர்வினையை எடுக்கும்.

கொரிய தீபகற்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்து மூலோபாய சொத்துக்களை அறிமுகப்படுத்தினால், வடகொரியா அதன் இயல்புக்கு ஏற்ப அதன் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் தெளிவுபடுத்தும்’ என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வட கொரியா பல தசாப்தங்களாக தென் கொரியாவுடன் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை ஒரு சாத்தியமான படையெடுப்பிற்கான ஒத்திகை என்று விபரித்துள்ளது, இருப்பினும் நட்பு நாடுகள் அந்த பயிற்சிகளை தற்காப்பு என்று விபரித்துள்ளன.

பல ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பயிற்சியை நேச நாடுகள் மீண்டும் தொடங்கியதால் வடகொரியா கடந்த ஆண்டு தனது சொந்த ஆயுத இருப்புகளை அதிகரித்தது.

வட கொரியாவின் நடவடிக்கைகள் ஏவுகணை மற்றும் பீரங்கி ஏவுகணைகளை உள்ளடக்கியது, இது தென் கொரியா மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது உருவகப்படுத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதல்கள் என்று விபரிக்கப்பட்டது.

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் – இலங்கைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு !

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.