11

11

புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி மூலம்  சுட்டுக் கொன்ற இராணுவவீரர் மரணம் !

மார்க்சிஸ்ட் புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி மூலம்  சுட்டுக் கொன்றவராக அறியப்படும் பொலிவியா இராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பொலிவியா காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்திருந்த சே குவேரா பட்டினியாலும், ஆஸ்துமா நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி கியூப – அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உதவியுடன் பொலிவிய இராணுவத்தினர் அக்டோபர் 8 ஆம் திகதி 1967 ஆம் ஆண்டு சே குவேராவைப் பிடித்தனர். பின்னர் பொலிவிய இராணுவ வீரர்களால் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் சேகுவேராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவராக அறியப்படும், பொலிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சே குவேராவை கொன்ற நிகழ்வை மரியோ டெரான் ஒரு முறை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர், ”சிறைப்பிடிக்கப்பட்ட சேகுவேரா, லா ஹிகுவேரா பகுதியில் பாழடைந்த பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். அது என் வாழ்வின் மிக மோசமான தருணம். அந்த நேரத்தில் சே குவேரா பிரம்மாண்டமாக தோற்றமளித்தார். அவரது கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.சேவின் பார்வை என் மீது விழும்போது எனக்கு மயக்கம் ஏற்பட்டது. ஒரே ஒரு விரைவான கண் அசைவால் சே குவேரா என்னை நிராயுதபாணியாக்க முடியும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். சே என்னை நோக்கி அமைதியாக இருங்கள் என்று கூறினார், என்னை நன்றாகப் பாருங்கள். நீங்கள் ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள் என்றார். அதனைத் தொடர்ந்து நான் அந்த அறையின் வாசல் பக்கம் சென்றேன். கண்களை மூடிக் கொண்டு சே குவேராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.” – ரஷ்யா குற்றச்சாட்டு !

துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் வியாழக்கிழமை நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

உக்ரைனில் போா் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது : லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள அவா் தயாராக இல்லை. அவா் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் சொ்கெய் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டாா். எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம் என்றாா் குலேபா.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாவது :

உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை.

தற்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்றுள்ள பேச்சுவாா்த்தை அதனை நிரூபித்துள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் தனது மேற்கத்திய சாா்பு நிலையைக் கைவிட்டு நடுநிலை வகிக்க வேண்டும், ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனைகளை முன்வைத்தேன். அதற்கான பதிலை உக்ரைன் அரசிடமிருந்து எதிா்பாா்த்துள்ளேன்.

அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.

இந்த விவகாரத்தில் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் சமாளிப்போம். பொருளாதார விவகாரத்தில் ரஷ்யா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை சாா்ந்து இயங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.