02

02

“எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன் பாதுகாப்போம்.” – நாடாளுமன்றில் ஜோபைடன் !

‘நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் கூறுகையில்
‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம். உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புடின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது.
முன்னதாக,  சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காதபோது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர். புடினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. இராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புடின் நிராகரித்துவிட்டார்.  மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி – ஐரோப்பிய பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கோரிக்கை! - உக்ரைன் ஜனாதிபதி கையெழுத்து (Photo) - தமிழ்வின்
இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்  நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:
உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை டிராக்டரில் கட்டி இழுத்து திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி – வைரல் வீடியோ இணைப்பு !

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கியுவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.

இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் இராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில், “இந்த வீடியோவின் மூலம் ரஷ்யா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார்.

இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” என்றார்.