பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !
லக்ஸான் என்ற தமிழ் இளைஞர் கடந்த சனிக்கிழமை 26 ஏப்பிரல் பாரிஸின் புறநகர் ரயில் நிலையமொன்றின் தண்டவாளத்தில் படுத்திருந்து தற்கொலை செய்துள்ளார். பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து குறித்த இளைஞன் பிரான்ஸ்க்கு வந்துள்ளார். அவரின் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் அவர் வேலை செய்த உணவகம் ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குரிய சம்பள பாக்கி இருந்ததாகவும் தெரியவருகின்றது. விசாவும் இல்லாமல் வேலை செய்த சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்காத விரக்தியில் லக்ஸான் இருந்ததாக அவரது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தெரிய வந்துள்ளது. கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர், தண்டவாளத்தில் தலையை வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வெநாளிட்டு வேலை வாய்ப்புக்களுக்கான பல்வேறு சந்தர்ப்பங்களை பல துறைகளிலும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து வேலை பெற்று வரலாம். அதற்கேற்றாற் போல் இளைஞர் யுவதிகள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிந்ததே.
அதேநேரம் கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விசா இல்லாத தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் வேலை வழங்கும் கடைக்காரர்களால் குறைந்த சம்பளம், அதிகப்படியான வேலைப்பளு மற்றும் ஒழுங்காக சம்பளத்தை கொடுக்காமல் என பல்வேறு வகைகளிலும் சுரண்டப்படுகிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் விசா இல்லாத காரணத்தால் சட்டத்தையும் நாட முடியாதுள்ளது. ஒரு கட்டத்தில் லக்ஸான் போன்று தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.