கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கிரீஸ் நாட்டு மொத்த மக்கள் தொகையில் இதுவரை 41 சதவிகிதம் பேருக்கு கொரோனா வைரஸ் இரண்டு தவணை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவத் துறையில் பணியாற்றும் பணியாளர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளது.
அதனால் மருத்துவப் பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்திக்கொள்வது தனிநபர் விருப்பம் என்றும், மதச் சட்டங்களுக்கு அது எதிரானது என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக மருத்துவப் பணியாளர்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் கண்டிப்பாக ஊதியமற்ற விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

