05

05

முகக்கவசங்களுக்கு bye சொல்கிறது இங்கிலாந்து..!

ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக கொரோனாவை வெற்றி கொண்டு வெளிவருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. முக்கியமாக உலகின் பல பகுதிகளும் முடங்கிப்போயிருக்க ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக முகக்கவசங்களை தூக்கி வீச ஆரம்பித்துள்ளன. முக்கியமாக யூரோ உலக்கிண்ண போட்டிகளை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்த வண்ணமுள்ளனர்.

கொரோனா  பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது  முக கவசம்  அணிவது கட்டாயமாக உள்ளது. விரைவில் இந்த கட்டுப்பாடு அகற்றப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து வீட்டு வசதிதுறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் கூறியதாவது:-

வருகிற 19-ந்திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக நீக்க தயாராகி வருகிறோம். அதன் பிறகு யாரும் முககவசம் அணிய தேவை இருக்காது. இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன.” என்று அவர் கூறியுள்ளார்.

நேர்முக வர்ணனையில் அருவருக்கத்தக்க விதமாக பேசிய தினேஷ்கார்த்திக் !

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நேர்முக வர்ணனையின்போது, அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியமைக்காக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டையையும், பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியையும் ஒப்பிடும் வகையில் தினேஷ் கார்த்திக் பேசியமைக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

தினேஷ் கார்த்திக்கின் ஆபாசமான இத்தகைய விமர்சனத்துக்கு அவரின் மனைவியும், தாயும் கூட கண்டனம் வெளியிட்டனர்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் மன்னிப்புக் கோரியுள்ளார். தினேஷ் கார்த்திக் தனது கிரிக்கெட் வர்ணனையின்போது, “ பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் தங்களின் மட்டையை விரும்பவதில்லை. அது அவர்களுடனே இருக்கும். ஆனால், மற்ற வீரர்கள் பயன்படுத்திய மட்டைகளைதான் அதிகமாக விரும்புவார்கள். மட்டை என்பது அடுத்தவர் மனைவி போல. அதுதான் சிறந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சமூகவலைத்தலங்களில் கடும் கண்டனம் எழுந்திருந்த நிலையில், இலங்கை – இங்கிலாந்து இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியின், வர்ணனையில் தனது முந்தைய அருவருக்கத்தக்க பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

கடந்த போட்டியில் நான் பேசிய பேச்சுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை. ஆனால், அது தவறுதான்.

அனைவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல என்றார்.

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட மக்கள் படை – கிராம மக்களை சுட்டுத்தள்ளிய இராணுவம் !

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்திகதி இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், இராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், மத்திய மியான்மரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் தீவிரமடைந்துள்ளது. சில பகுதிகளில் இராணுவத்திற்கு எதிராக மக்களே ஒன்று சேர்ந்து பாதுகாப்பு படைகளை உருவாக்கி உள்ளனர்.
இதில், காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இராணுவத்திற்கு எதிரான பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 890 ஆக உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை கிராமத்திற்குள் புகுந்த இராணுவ வீரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இறந்துபோனவர்களின் உடல்களை மீட்பதற்கு கூட வெளியேற முடியாத நிலையில் இருந்துள்ளனர். சனிக்கிழமை 17 உடல்களும், இன்று 8 உடல்களும் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பலர் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். காட்டுப்பகுதியில் உள்ள தங்கள் குழுவினரை இராணுவம் வேட்டையாடி வருவதாக பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.