06

06

வெளியேறிக்கொண்டிருக்கும் அமெரிக்கப்படைகள் – உயிரை காக்க அயல்நாடுகளில் தஞ்சமடையும் ஆப்கான் வீரர்கள் !

அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழியின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவது கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.

அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.

அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை கட்டுப்படுத்திவரும் தலிபான்கள், குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

 

எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

 

வெற்றிடத்துக்கு பசிலின் பெயர் பரிந்துரைப்பு

எம்.பி பதவியிலிருந்து ஜயந்த கெட்டகொடவின் விலகியதையடுத்து வெற்றிடமாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
பட்டியல் இடத்தை நிரப்புவதற்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது பதவி விலகல்
கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நிலையிலேயே காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது

தொலைபேசி இறக்குமதியை தடைசெய்யத் தீர்மானம் இல்லை – அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன

தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையும் இடம் பெறவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி இடை நிறுத்தப்படவேண்டும் என இலங்கை மத்திய வங்கி தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு வேறு மூலோபாயங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்பார்த்துள்ளது. பரஸ்பர பறிமாற்ற வசதிகள் ஊடாக சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடமிருந்து 8 ஆயிரம் மில்லியன் நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். தொலைக்காட்சி, தொலைப்பேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறான தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அர்ஜுன அலோசியஸிற்கு சொந்தமான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகளை மீள ஆரம்பிக்க வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் சந்தேக நபராக உள்ள காரணத்தினால் அந்நிறுவனத்திற்கு விற்பனை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பொறுத்தமற்றது என அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது என்றார்.

அஸ்ட்ராஜெனெகா பெற்றவர்களுக்கு பைசர்

ஒக்ஸ்போர்ட்டின் அஸ்ட்ராஜெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள் இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கை கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இரண்டாவது செலுத்துகையை மேற்கொள்ளும்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.