தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலனாய்வு பிரிவு பொலிசாரினால் வெள்ளிக்கிழமையன்று முதற்தடவையாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதவான் இவரை வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வன்னிப் பிரதேசத்தில் சண்டைகள் தீவிரமடைந்தது முதல் கனகரட்ணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தைப் படையினர் கைப்பற்றிய போது, பொதுமக்களோடு, இவரும் தனது குடும்பத்தினருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள். கடந்த ஆறுமாத காலமாக விசாரணை செய்ததன் பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.