யாழ். தென்மராட்சி கிழக்குப் பிரதேசமான எழுதுமட்டுவாள், கரம்பகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த மேற்படி பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி மக்களை அப்பகுதியில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
தென்மராட்சிப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் கிழக்கு பகுதியான எழுதுமட்டுவாள் ஜே-334 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் கரம்பகம் ஜே-330 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் அப்பகுதிப் பொதுமக்களின் மீள்குடியேற்றத் திற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புப் படையினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சி.ஸ்ரீனிவாசன், 523வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஹேமந்த பண்டார, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சாள்ஸ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடந்த 10 வருட காலமாக பொதுமக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாமலிருந்த கரம்பகம், எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடும்பிரயத்தனத்தின் மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மீளக்குடியேறத் தயாராக இருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழ்நிலையில் நாம் கடந்த காலத்தில் இழந்தவற்றை ஈடுசெய்யும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.