November

November

சவூதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்: பிரதியமைச்சர் பைலா நேற்று ஜித்தா அதிகாரிகளுடன் பேச்சு

சவூதி அரேபியாவின் கந்தகார் பாலத்துக்குக் கீழே தஞ்சமடைந்துள்ள இலங்கையர் தொடர்பாக பிரதி வெளி விவகார அமைச்சர் ஹுசைன் பைலா நேற்று ஜித்தாவிலுள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோரும் இங்கு சென்றுள்ளனர். இதேவேளை அங்கு தஞ்சமடைந்துள்ள இலங்கையருக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் ஜித்தா செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலத்திற்குக் கீழ் தஞ்ச மடைந்திருப்பவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  என்றாலும் சவூதி அரேபியாவில் ஹஜ் விடுமுறையையிட்டு எதிர்வரும் 2ம் திகதிக்குப் பின்னரே இதற்கான நடவடிக்கைகள் சாத்தியமாகுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கக் கடலில் தாழமுக்கம்; இன்றும் இடியுடன் மழை

rain2.jpgவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு கிழக்கு மற்றும் ஊவா பகுதிகளிலும் வடமத்திய பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்யும் என வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இடைக்கிடையே இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்வதுடன் கிழக்கு கடல் பகுதி சற்று கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதியையும் பாதிக்கும் என தமிழ்நாடு வானிலை அவதான மையமும் அறிவித்துள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் கூறியதாவது:-

வங்க கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங் களிலும், புதுச்சேரியிலும் இன்றும் அனேக இடங்களில் மழை பெய்யும், ஒன்று அல்லது 2 இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளார்

மட்டக்களப்பில் அமைச்சர் முரளி தலைமையில் சு. க. கலந்துரையாடல்

கிழக்கில் ஸ்ரீல. சு. கவை பலப்படுத்தும் வகையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது.

ஸ்ரீல. சு. க. பொதுச் செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண ஸ்ரீல. சு. க. அமைப்பாளர் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை அதிபர் மரணம்

பன்றிக் காய்ச்சலினால் குருநாகலில் பாடசாலை அதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் வென்னப்புவவில் மற்றுமொரு பாடசாலை மூடப்பட்டுள்ளது. குருநாகல் மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த கே.டபிள்யூ.குணதிலக என்ற 58 வயதுடைய பாடசாலை அதிபரே பன்றிக் காய்ச்சலினால் இறந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். அவரது மகளுக்கு நேற்று திருமணம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதேவேளை, இவரது மரணம் பன்றிக் காய்ச்சலினால் ஏற்பட்டதென குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி எச்.எம்.கே.சேனநாயக்க உறுதிப்படுத்தியதுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இத்தொற்றுக் காரணமாக 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வென்னப்புவ தங்கொட்டுவ பாலிகா வித்தியாலயத்தின் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் பன்றிக் காய்ச்சல் தொற்றினால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  இப்பகுதியில் பல பாடசாலைப் பிள்ளைகள் இந் நோய்த் தொற்றுக்குள்ளானதல் நேற்று சனிக்கிழமை முதல் மூடப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை திங்கள் முதல் மத்திய மாகாண பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பாடசாலைகளை மூடும் விவகாரம் கல்வியமைச்சர் மத்திய மாகாண முதலமைச்சருடன் மோதல்

மத்திய மாகாணப் பாடசாலைகள் மூடப்பட்டமை தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மத்திய மாகாணப் பாடசாலைகளை மூடிவிடும் அறிவிப்பு தொடர்பாக கல்வியமைச்சிடம் கலந்தாராயப்படவில்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

பாடசாலைகளை மூடிவிடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பது தொடர்பாக மத்திய மாகாண முதலமைச்சர் பிரத்தியேகமான உரிமையை கொண்டிருக்கவில்லை என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் இந்த விடயம் தொடர்பாக மத்தியமாகாண முதலமைச்சருக்கு தான் அறிவிக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.  வைரஸ் காய்ச்சல் (பன்றிக் காய்ச்சல்) அச்சுறுத்தல் சாத்தியத்தையடுத்து நவம்பர் 23 தொடக்கம் டிசம்பர்9 வரை மத்திய மாகாணத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மூடப்படுமென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா அறிவித்திருந்தார்.

டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து – கங்குலி

ganguly.jpgஇலங்கை- இந்தியா முதல் டெஸ்ட் போட்டி முடிவு குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது:- ஆமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தின் போக்கை கவனித்தால் இந்த மைதானத்தில் ஆடுகளம் சரி இல்லாமல் இருந்ததை காட்டுகிறது.

டெஸ்ட் போட்டிக்கு தகுந்த மாதிரி ஆடுகளம் அமைக்கப்படவில்லை. இதனால் தான் இப்படி போட்டியின் போக்கு மாறியது.  பொதுவாக இந்திய மைதானங்களில் சிவப்பு மண் இருக்கும். இதில் அமைக்கும் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எகிறி சுழலும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்.

ஆனால் ஆமதாபாத் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றார்போல இல்லை. எனவே பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின் நிலைமை வேறு மாதிரி அமைந்து விட்டது.

போட்டியின் முடிவு தெரிந்தால்தான் அது ரசிகர்களை ஈர்க்கும். 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி மவுசு அதிகரித்து வரும் இந்த வேளையில் இது போன்று டெஸ்ட் போட்டி முடிவுகள் இருந்தால் டெஸ்ட் போட்டிக்கே ஆபத்தாகி விடும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கொழும்பில் குடாநாட்டு மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பு அனுமதியை கேட்கும் பொலிஸார்

யாழ்.குடாநாட்டிலிருந்து ஏ9 வீதியூடாகக் கொழும்புக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அனுமதி நீக்கப்பட்டபோதும் அவர்கள் கொழும்பில் தங்குவதற்கு அந்த பாதுகாப்பு அனுமதித்துண்டை பொலிஸார் கேட்கின்றனர். இதுவரை காலமும் கொழும்பு வருபவர்கள் தமது பாதுகாப்பு அனுமதித்துண்டை (கிளியறன்ஸ்) பொலிஸ் நிலையங்களில் காண்பித்து வதிவிட பொலிஸ் பதிவை மேற்கொண்டனர்.

தற்போது அந்த பாதுகாப்பு அனுமதித்துண்டை கொழும்பில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் கேட்பதாக அங்கிருந்து வருவோர் கூறுகின்றனர். பாதுகாப்பு அனுமதி நீக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதியைக் காண்பித்து தற்போது குடாநாட்டு மக்கள் பயணம் மேற்கொள்ளும் முறையை பொலிஸ் நிலையங்களில் கூறினால் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

அத்துடன், இங்குள்ள சில கிராம சேவையாளர்கள் பொலிஸ் பதிவை உறுதிப்படுத்த யாழ்ப்பாணத்தில் உள்ள கிராம சேவையாளரின் கடிதத்தையும் கேட்கின்றனர். இவ்வாறான நிபந்தனைகளால் குடாநாட்டு மக்கள் கொழும்பில் தங்குவதற்கு பொலிஸ் பதிவை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடாநாட்டிலிருந்து வருபவர்கள் கொழும்பில் தங்குவதற்கு பொலிஸ் பதிவை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள்; முகாமிலிருந்து வெளியேறிய பெண்ணின் சாட்சியம்: ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

Realesed from camps and reached to Vavuniyaகிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் முகாம் வாழ்க்கையின் பின்னர் அங்கிருந்து வெளியேறி வவுனியாவிற்கு இம்மாதம் 5ம் திகதி வந்துள்ளனர். கிளிநொச்சியில் தமது உயர்தர வகுப்புப் படிக்கும் இரு பிள்ளைகளையும் புலிகளிடமிருந்து பாதுகாக்கப் போராடி, பின்னர் செல்லடிக்குள் உயிர் தப்பினால் போதுமென போராடி, மாசி மாதத்தில் ஒரு பிள்ளையைப் பிரிந்த நிலையில் இவர்கள் முகாமிற்கு வந்தனர். ஒரு மாதத்தின் பின்னர் மற்றைய பிள்ளையை உறவினர்களுடன் சந்தித்த போதிலும் அவர்களின் மகன் புலிகளின் வலுக்கட்டாய பயிற்சியில் 10, 15 நாட்கள் அகப்பட்டதால் தற்போது நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 2006ம் ஆண்டின் பின்னர் புலிகளால் கட்டாயப் பயிற்சிக்கு உட்படுத்தப் பட்டவர்களை ஒரு வருடத்தின்பின் தாம் விடுவிப்போம் எனக் கூறியுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

தம்முன்னால் மகன் புலிகளால் இழுத்துச் செல்வதை கண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்ட கணவருடனும் மற்றைய பிள்ளையுடனும் முகாமினுள் அடுத்த போராட்ட வாழ்வை வாழ்ந்தார்கள். வெய்யில் என்றால் இருக்க முடியாத வெக்கை, மழை என்றால் ஈரம் ஊறும் நிலத்தில் பொலித்தீன் துணையுடன் படுக்கை, விடியமுதல் வரும் இலையான்கள், அட்டைகள் பாம்புகள் சுண்டெலிகள் இவற்றுடனும் ஒரு போராட்டம். தற்போது இவற்றைத் தாண்டி வவுனியா வந்தபோதும் தமது போராட்டம் ஓயவில்லை எனக்கலங்கினார்.

தாம் வவுனியாவில் எதிர்நோக்கும் வேதனைகளையும் எப்போது கிளிநொச்சி போவோம் எனகாத்திருப்பதன் காரணங்களையும் எம்முடன் உரையாடுகையில் வெளிப்படுத்தினார்.

நாம் வவுனியாவுக்குப் பதிவுசெய்து ஒருமாதிரி முகாமைவிட்டு வெளியேறிவிட்டோம். இங்கு வந்தால் நாங்கள் கிளிநொச்சிக்காரர் முகாம்காரர் அகதிகள் என்று வவுனியா மக்களுக்கு எங்களில் ஒரு கீழ்த்தரமான எண்ணம். முகாம்காரர் என்றால் ஏதோ குப்பைகள் கூளங்கள் என்றமாதிரி தாழ்வான எண்ணங்கள். எங்களோடு ஒட்டமாட்டினம்.

பள்ளிக்கூடம் போனால் முகாம்பிள்ளை என்று சுட்டிக் காட்டப்படுகிறார்கள். வித்தியாசமாய் நடத்துகிறார்கள். நாங்கள் அனுபவித்தமாதிரி வவுனியா மக்கள் அனுபவிக்கவில்லை. எங்களுக்கு இது சரியான தாக்கமாய் இருக்கிறது. எல்லாம் இழந்து வந்திருக்கிற எங்களை இவர்கள், வேறொங்கோ உலகத்திலிருந்து வந்த தீண்டத்தகாத ஆட்கள் மாதிரி நடத்துகிறார்கள்.

குடியிருக்க வீடு பார்க்கப் போனால் ஒரு இன்ரவியூவே நடத்துவினம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன வயது. பிள்ளைகள் எங்கே. ஒருபிள்ளை நலன்புரி முகாமில் இருக்கிறதென்று சொன்னாலும் பிரச்சினை. வீடு தரமாட்டாங்கள் என்ற பயம். சொல்லாவிட்டாலும் என்ன நடக்குமோ என்ற பயம். என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். வசதியாக இருந்தவர்கள் என்று சொன்னால் வாடகை கூடக் கேட்பாங்களோ என்ற பயம். வசதி குறைந்தவர்கள் என்று சொன்னால் வீடு தரமாட்டார்களோ என்ற பயம். நேற்று முழுக்க வீடு பார்க்கப்போய் ஒவ்வொரு விதமான ஆட்களை சந்தித்து வந்தோம். ஜந்தாம் திகதி வந்தோம் இன்னும் ( Nov 18ம் திகதி) வீடு எடுக்க முடியாமல் அலைகிறோம்.

இரண்டு அறைகள் கொண்ட ஒரு மண்குடிசையில் ஒரு அறையில் நான்கு குடும்பம் இருக்கிறோம். இந்த வீட்டில் இருப்பவர்கள் எமக்கு உறவானவர்கள். எமக்கு சில மாதங்கள் முன்பாக வெளியேறினவர்கள். அட்வானஸ் றென்ட் என்று வீட்டுக்காரர் வாங்குவார்கள் ஆனால் மழைக்கு எல்லாப் பக்கத்தாலும் ஒழுக்கு ஒன்றும் செய்து தரமாட்டார்கள். எல்லாம் நாமே பார்த்துக்கொள்ள வேணும். புதிதாக ஒரு தட்டிகூட இறக்க விடமாட்டார்கள். நாங்கள் எவ்வளவு காலம் இருக்கலாம் என்று எதுவும் சொல்ல மாட்டினம் இருந்தாப்போல் எழும்பச் சொன்னால் எழும்ப வேணும் இதில் எதை நம்பி எந்தப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்றும் யோசிக்க வேணும்.

ஆஸ்பத்திரிக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. கடைக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. எங்கை போனாலும் கிளிநொச்சிகாரரோ முகாம்காரரோ அகதிகளோ என்று தாழ்வான எண்ணங்களே.

இடம்பெயர்ந்து வந்தனாங்கள் கையில் ஒன்றும் இல்லாமல் வந்தனாங்கள் இங்கையெண்டாலும் பிள்ளைகளைப் படிப்பிப்பம் என்று போனால் ‘என்ன சீருடை இல்லாமல் வாறீங்கள்’ என்று கேள்வி. பிள்ளைகளுக்கு ரெஸ்ட் வைத்துத்தான் எடுப்பார்கள். 3ம் வகுப்புப் பிள்ளைக்கும் தேவாரம் பாடச்சொல்லி வாய்பாடு கேட்டார்கள். பாஸ் என்றால்தான் சேர்ப்பார்கள். பெயில் விட்ட பிள்ளையென்றால் எங்கு போகுமோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் என்று அங்கு போனால் ‘என்ன நீங்கள் நிறச்சட்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறீங்கள்? என்ன ஒண்டும் தெரியாதனீங்களே வன்னியில் இருந்தனீங்கள். யூனிபோம் போடவேணுமெண்டு தெரியாதோ?’ என்று கேள்வி. ஆசிரியர்கள் அதிபர் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் பண்பானவர்கள் நாட்டுநிலைமை தெரிந்தவர்கள் இந்தப் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்று யோசிக்கவில்லைத்தானே. அன்பாக என்றாலும் அவர்களை வரவேற்று கைகுடுக்கத் தெரியவில்லை. டீசன்ட் டிசுப்பிளின் தெரியாதவர்களா இவர்கள்.

வவுனியாவில் பள்ளிக்கூடங்களிலும் வசதிகள் குறைவு. முகாமில் இருந்த படிப்பு இங்கு இல்லை. முகாமினுள் அங்கிருந்து வந்த ரீச்சர்மாரே படிப்பித்தாங்கள். மேசை கதிரை கூட இல்லை. ஒருசில பிள்ளைகளுக்குத்தான் மேசை கதிரை இருந்தது. பிள்ளைகள் நிலத்தில் இருந்து மடியில் வைத்து எழுதுவாங்கள். இருந்த வீடுகளுக்கு லைட் இல்லை. பிள்ளைகள் றோட்டு லைட் வெளிச்சத்தில்தான் படிப்பார்கள். றோட்டு லைட்டுக்கு கீழே பாயைப் போட்டுவிட்டு மடியில் புத்தகங்களை வைச்சுப் படிப்பாங்கள். ஏதோ அந்த நிலைமைகளுக்கேத்த மாதிரி உணர்ந்து அவங்களும் இருந்தாங்கள். இங்கை பள்ளிக்கூடத்திலும் முகாம் பிள்ளையைப் பாருங்கோ நல்லாசெய்யுது என்று மற்றப் பிள்ளைகளுக்கு ரீச்சர் சொன்னாவாம்.

எதற்கும் முகாம் பிள்ளை முகாம்பிள்ளை என்று பிரித்துத்தான் பார்ப்பார்கள். ஒருக்கா உழுக்குளம் பாடசாலையில் ஒரு பிள்ளைக்கு குளவி கடித்து விதையொன்று வீங்கிவிட்டது. பிள்ளைக்கு அதில் ஒப்பறேசனும் செய்த இடம். ரீச்சரிடம் பிள்ளை போய் தனக்கு இப்பிடி என்று சொல்ல அவ அதிபரிடம் அனுப்பிவிட்டா. அதிபர் இன்னும் ரெண்டு பிள்ளைகளைப் பிடித்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பிள்ளைக்கு எங்கை நோகுது என்ன நடந்தது என்று ஒருத்தரும் பார்க்கவேயில்லை. இன்னொரு பிள்ளைக்கு கிபீர் சத்தம் கேட்டாலே மயக்கம் வரும். ஒருக்கா கிபீர் வருகுதென்று ஓடிப்போய் ஒழிக்கையில் பிள்ளையின் தலையில் அடிபட்டுவிட்டது. பிள்ளைக்கு கை கால் குளிர்ந்து மயங்கி ஒருமாதிரி வந்து மருந்தெடுத்தது. சில நேரங்களில் அவனுக்கு ஒருமாதிரி வரும். நல்லாய் படிக்கக்கூடிய பிள்ளை. அந்தப் பிள்ளையின் பிரச்சினை என்னவென்று தெரியாமல் அவனை பழக்கவழக்கம் தெரியாத பிள்ளை என்று பேசியிருக்கினம். எங்கடை பிள்ளைகளை எப்பவும் தாழ்வாய்த்தான் நடத்துவினம். சரியான கவலையாக இருக்குது. முகாமிலை தண்ணியதுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை முகாமிலேயே இருந்திருக்கலாம். வெளியாலை வந்து வவுனியாச் சனங்களோடை துன்பப்படுவது பெருங் கவலையாக இருக்கிறது.

நாங்கள் இங்கை படுகிறபாடு நீங்கள் இங்கை வந்து பார்த்தால்தான் தெரியும். என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிக்கிறம். என்ன வாழ்க்கையோ. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட எமது குழந்தைகள் இப்போது புலிப்பட்டம் சூட்டப்பட்டு உள்ளுக்கிருக்கினம். பொதுமக்கள் எங்களுக்கு அகதிப்பட்டமும் கம்பிவேலி வாழ்க்கையும். வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள். நாங்கள் வீடுவாசல் சொத்து சுகம் பிள்ளைகள் படிப்பு எதிர்காலம் எல்லாத்தையும் இழந்து போதாதற்கு வவுனியாவில் மரியாதையும் இழந்து நிக்கிறோம். முகாம் போன ஆட்கள் எல்லாம் பயிற்சி எடுத்த ஆட்கள் என்று பார்க்கினமோ என்னத்தை நினைத்துக்கொண்டு எங்களை இப்படி நடத்துகிறார்களோ தெரியவில்லை. இங்கையிருந்தும் ஒரு இடம்பெயர்வு வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

இங்கு காசுக்குத்தான் முதலிடம். வன்னிக்குள் உறவினர்களுடன் நாங்கள் எப்பிடி வாழ்ந்தம். வன்னிக்குள் இருந்த எல்லாரும் ஒன்றாய்தான் இடம்பெயர்ந்து வந்தனாங்கள். ஆனால் இங்கை வந்து பார்த்தால் சொந்தக்காரரோ தள்ளி நிக்கிறாங்கள். வன்னிக்காரரோடை அண்டினால் பிரச்சினையாம். வீடுவாசல் கொடுப்பதற்குப் பஞ்சிப்படுகினம். சில சொந்தங்களுக்கு போன் பண்ணினால் எடுக்கிறாங்களேயில்லை. உங்களையெல்லாம் வைச்சிருந்து விட்டு பிறகு கோட்டு வழக்கு பொலிஸ் என்று நாங்கள் அலைய ஏலாது என்று சிலர் சொன்னார்கள். சொந்தங்களை வைத்திருந்தால் தமக்கு பொறுப்பு செலவு என்று வந்துவிடும் என்றும் யோசிக்கிறார்கள் போலிருக்குது. முகாமுக்குள் இருந்தவர்களை சொந்தச் சகோதரமே வந்து பார்ககாமலும் இருந்திருக்கினம். பிறகு தமக்கு ஏதும் தொல்லை வந்திடுமோ என்ற பயம். எனது தம்பி குடும்பம் முகாமில் இருக்கிறார்கள் அவர்களைப் பார்க்கப் போனபோது இங்கு நாங்கள் படுகிற கஷ்டம் எல்லாத்தையும் சொன்னோம். அங்கிருந்த அதிபர் ஒருவரையும் சந்தித்து கதைத்தேன். வவுனியா வந்து அடிமை வாழ்க்கை வாழுவதைவிட இங்கேயே இருந்துவிட்டு நாம் நேரடியாக கிளிநொச்சிக்கே போவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த 54 வயதில் எதுவுமில்லாமல் வந்து இனிமேல்தான் புதிதாக எல்லாத்தையும் ஆரம்பிக்கவிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றார்.

‘கிளிநொச்சி போக விடுகிறாங்களில்லை. ஏன் என்றும் தெரியாது. நாங்கள் எல்லோரும் எப்பிடி ஒன்றாய்ச் சேர்ந்து புலிகளை மீறி இராணுவத்திடம் வந்து சேர்ந்தோமோ எப்படி உந்த செல்லடி குண்டடிக்குள்ளால அடிபிடிக்குள்ளால் வெளியே வந்தோமோ அதேமாதிரி இனி வவுனியாவிலிருந்து நாங்கள் எல்லோருமாக சேர்ந்து உந்த முள்ளுவேலி இராணுவத்தை தள்ளிப்போட்டு கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போவதுதான் ஒரே வழி போலுள்ளது’ என வேகத்துடன் சொன்னார்.

உள்ளுர் விமான சேவையில் புதிதாக 6 விமானங்கள் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

chamalrajapaksaa.jpgமஹிந்த சிந்தனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்ப உள்ளுர் விமான சேவையின் மேம்பாடு கருதி 6 புதிய சிறிய விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுமார் 50 பேர் பயணம் செய்யக்கூடிய எம்.ஏ-60 என்ற இந்த சிறியரக விமானங்களை கொள்வனவு செய்ய 105 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியான சுழ்நிலை நிலவுவதால் விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  சீன அரசாங்கம் 5 வருடங்களில் திருப்பச் செலுத்தக் கூடிய வகையில் கடனுதவியாக இந்த விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் சுதந்திரமாக வெளியே நடமாடலாம்.

வன்னி நிவாரணக்கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படுமென ஜனாதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ சற்று நேரத்துக்கு முன் மெனிக் பாம் நிவாரண முகாமில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்பு அனைவரும் முகாம்களிலிருந்து சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.