இலங்கை- இந்தியா முதல் டெஸ்ட் போட்டி முடிவு குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது:- ஆமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தின் போக்கை கவனித்தால் இந்த மைதானத்தில் ஆடுகளம் சரி இல்லாமல் இருந்ததை காட்டுகிறது.
டெஸ்ட் போட்டிக்கு தகுந்த மாதிரி ஆடுகளம் அமைக்கப்படவில்லை. இதனால் தான் இப்படி போட்டியின் போக்கு மாறியது. பொதுவாக இந்திய மைதானங்களில் சிவப்பு மண் இருக்கும். இதில் அமைக்கும் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எகிறி சுழலும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்.
ஆனால் ஆமதாபாத் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றார்போல இல்லை. எனவே பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின் நிலைமை வேறு மாதிரி அமைந்து விட்டது.
போட்டியின் முடிவு தெரிந்தால்தான் அது ரசிகர்களை ஈர்க்கும். 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி மவுசு அதிகரித்து வரும் இந்த வேளையில் இது போன்று டெஸ்ட் போட்டி முடிவுகள் இருந்தால் டெஸ்ட் போட்டிக்கே ஆபத்தாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.