பன்றிக் காய்ச்சலினால் குருநாகலில் பாடசாலை அதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் வென்னப்புவவில் மற்றுமொரு பாடசாலை மூடப்பட்டுள்ளது. குருநாகல் மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த கே.டபிள்யூ.குணதிலக என்ற 58 வயதுடைய பாடசாலை அதிபரே பன்றிக் காய்ச்சலினால் இறந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். அவரது மகளுக்கு நேற்று திருமணம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதேவேளை, இவரது மரணம் பன்றிக் காய்ச்சலினால் ஏற்பட்டதென குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி எச்.எம்.கே.சேனநாயக்க உறுதிப்படுத்தியதுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இத்தொற்றுக் காரணமாக 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, வென்னப்புவ தங்கொட்டுவ பாலிகா வித்தியாலயத்தின் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் பன்றிக் காய்ச்சல் தொற்றினால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இப்பகுதியில் பல பாடசாலைப் பிள்ளைகள் இந் நோய்த் தொற்றுக்குள்ளானதல் நேற்று சனிக்கிழமை முதல் மூடப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை திங்கள் முதல் மத்திய மாகாண பாடசாலைகள் மூடப்படவுள்ளன.