November

November

ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவித்தால் ஆதரவு வழங்க தயார் – மனோ கணேசன் எம்.பி.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாகக் கூறுவாராயின் அவருக்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்தால், அவருக்கு ஆதரவு வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாதென மனோ கணேசன் கூறினார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (24) மாலை நடைபெற்ற மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை அறிவித்தார்.

எமக்கு உள்ளது ஒரே நாடும் ஒரே அரசும்தான். நாம் தற்போது அரசாங்கத்தில் பங்காளர்களாக இல்லாவிட்டாலும் அரசில் இருக்கின்றோம். அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இனங்களின் தனித்துவத்தைப் பேணும் அதேநேரம் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். ஜனா திபதியின் தலைமையிலான அரசாங்கத் திற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், இனப் பிரச்சினை குறித்த உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேல் மாகாண கலை, கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப் பினர் எஸ். இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

க.பொ.த. (சா/த) டிச. 11 இல்: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள்

sri-lankan-students.jpgக.பொ.த.  சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 5 லட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நிவாரணக் கிராமம் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி நீங்கலாக நாடு முழுவதும் 3215 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 லட்சத்து 05 ஆயிரத்து 257 பாடசாலை பரீட்சார்த்திகளும் எஞ்சியவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவிக்கிறது. 4 லட்சத்து 10 ஆயிரத்து 274 மாணவர்கள் புதிய பாடத் திட்டத்தின் கீழும், 1 லட்சத்து 34 ஆயிர த்து 858 மாணவர்கள் பழைய பாடத்திட்ட த்தின் கீழும் தோற்றவுள்ளனர்.

3215 பரீட்சை நிலையங்களுக்கும் 504 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் சுமார் 70,000 பேர் பரீட்சைக் கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இசையால் புது விதி செய்யும் IBC : முகம்மது நிஸ்த்தார்.

ibc_logoநூற்றுக்கணக்கான அப்பாவி தமிழரை அங்கவீனர்களாக்கி ஆயிரக்கணக்கில் கொன்றொழித்து மூன்று இலட்சம் வரையிலான மக்களை முற்கம்பி முகாமுக்குள் அடைத்ததுடன் ‘எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி’ கண்ட திருப்தியில் ஐ.பீ.சீ வானொலி இப்போது கோமாளித்தனமாக ‘இசையால் இனியொரு புதுவிதி செய்வோம்’ என்ற கோசத்துடன் செயல்படுகின்றது.

இந்த வானொலியின் இரண்டு அண்ணாமார்கள் தங்களை ITV-1ன் Ant and Dec என்ற எண்ணத்தில் காலை வேளையில் ‘தேடிவரும் தென்றல்’ என்ற நிகழ்ச்சியில் புதிய பாடல்களை ஒலிபரப்பி உலகளாவிய ரீதியில் ஐ.பீ.சீ நேயர்களை குதூகலப்படுத்துகிறார்களாம். ஆனால் நிகழ்ச்சியை நிதானமாக அவதானிப்போருக்கு மாத்திரமே விளங்கும் இந்த இரண்டு அண்ணாமார்களும் இந்த வருடத்து ‘X – Factor’ நிகழ்ச்சியில் வரும் Jodward (John and Edward) தரத்தினர் என்ற உண்மை.

இந்த அண்ணாமார்களுடன் கொஞ்சி குலாவவரும் தம்பிகள், தங்கையர். அக்காமார் சிலவேளைகளில் மாமா, மாமிமார் எல்லாரும் தங்களுக்காகவும் தங்கள் கைக்குழந்தைகளுக்காகவும் விசேடமாக முற்கம்பி முகாமுக்குள் அடைபட்டிருக்கும் மக்களுக்காகவும் புத்தம் புதிய பாடலொன்றைக் கேட்க விரும்ப, இந்த அண்ணாமார்களும் தவறாமல் ‘புலி உறுமுது, புலி உறுமுது’ என்ற பாட்டை ஒலிபரப்பி இடையிடையே இந்த நிகழ்ச்சியுடன் சம்பந்தமில்லாத ஆனால் ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்படுத்தி ‘தமிழன் என்றால் யார்’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்து ‘இவன்தான்டா தமிழன்’ என்று முடியும் நடிகர் விஜயின் டயலொக்குடன் இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிப்பர்.

இப்படியே வானொலி அண்ணாமார்களின் கொச்சை தமிழையும் சராசரி நிலைக்கும் சற்று கீழ்நிலையிலுள்ள அவர்களின் உலக அறிவையும் பொருட்படுத்தாமல் நம் சகிப்புத்தன்மையை மிகவும் சோதிக்கும் அன்பு நேயர்களின் உரையாடல்களையும் பொறுத்துக் கொண்டு புதிய பாடல் கேட்க தயாராகும்வேளை திடீர் என்று பல்குழல் பீரங்கி தாக்குதல்போல் பலமுறை மறு ஒலிபரப்பு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொலைகாட்சியின் ‘மக்கள் அரங்கம்’ என்ற விசுவின் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பப்படும்.

இந்த மக்கள் அரங்க நிகழ்வில் நெடுந்தீவு அக்கா ஒருவரின் புலம்பல் ஐ.பீ.சீ நேயர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அந்த புலம்பலை உலகத் தமிழர் அனைவரும் கேட்க ஆவண செய்யும்படி நேயர்கள் அந்த வானொலி அண்ணாமார்களை கேட்டுக் கொண்டே இருப்பார். இது போதாதா அண்ணாமார்களும் சலிப்படையாமல் தம் காரியத்தை செவ்வனே செய்து முடிப்பர்.

அக்காவின் புலம்பில் சற்று நம்பிக்கையிழந்த விசு இரண்டு கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை முடித்துவைப்பார்.

கேள்வி ஒன்று: உங்கள் நாட்டில் ஆயுத போராட்டம் முடிந்து விட்டதாக சொல்லப்படுகின்றதே இது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: போராட்டம் இன்னும் முடியவில்லை.

கேள்வி இரண்டு: பிரபாகரன் எப்படி உள்ளார்?

பதில்: நலமே உள்ளார்.

இந்த கேள்வி இரண்டுக்கான விடைதான் இன்று அனேகரை குழப்பிக் கொண்டிருக்கும் விடயம். அதாவது ஏசுநாதர் சிலுவையில் தன்னுயிரை நீத்தாரா என்ற கேள்வியில் கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு போன்றது தான் பிரபா இருக்கின்றார் அல்லது இல்லை என்ற இந்தப் பிரச்சினை. ஆனால் ஐ.பீ.சீ யைப் பொறுத்தவரை இது ‘Tiger Wood’ன் அடியில் தங்கு தடையின்றி குறித்த குழியில் போய்விழும் கொல்ப் (golf) பந்து போன்ற விடயம். அதாவது கார்த்திகை 27க்கான நேரடி விளம்பரத்துக்கு உதவும் விடயம்.

ஆனாலும் இதிலுள்ள ஆபத்தை கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நேயர்களையே ஏய்க்கும் இவர்களின் முயற்சியை பார்க்கும்போது எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் இவர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சரி இவர்கள் சொல்வது போன்று பிரபாகரன் இன்னும் உயிருடன் நலமே இருக்கிறார் என்றால் கார்த்திகை 27ல் அவர் வரவேண்டும். அவர் வரமாட்டார் என நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினாலும் அவர் வருவார் என்று நாசுக்காக சொல்லும் ஐ.பீ.சீ அவர் ஏன் அன்று வரமாட்டார் என்ற கேள்விக்கு தயார் நிலையிலுள்ள அவர்களின் பதில், வெளியே சொல்ல முடியாத காரணத்தின் நிமித்தம் நேரடியாக காட்சியளிக்காமல் மறைந்திருந்து மக்களுடன் உரையாட விரும்புகிறார் என்பதாகவே அமையும்.

ஆகவே ஐ.பீ.சீ பிரபாகரனுக்காக குரல் தரவல்ல ஒருவரை தயார்படுத்த வேண்டும். அது அவ்வளவு கடினமான காரியமுமல்ல. இருப்பினும் ஐ.பீ.சீயின் அரசியல் ஆய்வாளர்களால் அதாவது பருவமழை அடிக்கடி பொய்ப்பதால் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் அல்லலுறும் ஒரு நாட்டில் பருவகால மழையை நம்பி ஒரு பேப்பர் ஊடாக இராணுவ வியூகம் அமைத்துக் கொடுக்கும் ஜேர்மனிய சபேசன், கனேடிய திருச்செல்வம், முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றத்துக்கு தந்திரோபாய நியாயங்கள் கற்பிக்கும் ஜப்பானிய கலாநிதி சச்சி சிறிகாந்தா ஆங்கிலத்தில் படித்த காரணமோ அல்லது ஏனோ தமிழ் திக்கும் யு. கே பற்றிமாகரன் கிரிக்கட் நேர்முக வர்ணணை பாணியில் அரசியல் விமர்சனம் செய்யும் இந்திய அப்துல் ஜப்பார் என்ற பலரும் இன்னும் தொட்டுப்பார்க்காத ‘எங்கும் பிரபா என்றும் பிரபா’ என்ற நெடுந்தீவு அக்காவின் உறுதிமொழி ஐ.பீ.சீ யின் கார்த்திகை 27ஜ நோக்கிய பயணத்திற்கு வழி சமைத்து விட்டது.

இந்த ஆய்வாலர்கள் இது பற்றி கதைக்காவிட்டாலும் பின்வரும் கேள்விகளுக்கான விடைகளையும் பிரபாகரனுக்கு குரல் தரவல்லவருக்கூடாக நேயர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் ஐ.பீ.சீ உள்ளதை மறந்துவிட முடியாது.

ஆகவே ஐ.பீ.சீ பாணியில் நாம் கேட்பது கேள்விக்கு நாங்கள் தயார், பதில்தர நீங்கள் தயாரா என்பதே. நீங்கள் தயாராயின் இதோ எமது கேள்விகள்.

1. எங்கு ஒளித்துள்ளிர்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, ஆனால் ஏன் ஒளித்துள்ளிர்கள் என்று சொல்ல முடியுமா?.

2. இன்று ஏன் வெளியே வந்தீர்கள் மீண்டும் ஒழித்திருக்கப் போகிறீர்களா? அப்படியானால் எவ்வளவு காலத்துக்கு, ஏன்?.

3. கிளிநொச்சி நோக்கி இராணுவம் முன்னேறும்போது கிளிநொச்சியை பிடிப்பதென்பது ராஜபக்ஸவின் பகல்கனவு என்றீர்கள். ராஜபக்ஸவோ இது எனது கனவுமாத்திரமல்ல, அனைத்து நாட்டுமக்களின் கனவு என்றாரே. அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?.

4. கிளிநொச்சியை இழக்கமாட்டீர் என உங்களை நம்பச்செய்த விடயம் எது, ஏன் அது கைகூடவில்லை?.

5. இத்தனை ஆயிரம் உமது தொப்புள்கொடி உறவுகள் செத்து மடிந்தபோது உமது சயனைற் குப்பிக்கு என்ன நடந்தது?.

6. இது ஒரு துன்பியல் சம்பவமாக கருதுகிறீரா அல்லது வரலாற்று தவறு என்கின்றீரா அல்லது இது இன்னும் சிங்களவரின் நயவஞ்சகதனம் என்கின்றீரா?.

7. நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்றீரா?.

8. குழு குழுவாக இலங்கை சென்று அரசாங்கத்துடன் கதைப்பவர்கள் பற்றி உமது நிலைப்பாடு என்ன?.

9. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது இது சிங்கள நாட்டின் பிரச்சினை இதில் தமிழர் வாக்களிக்க தேவையில்லை என்கின்றீரா. அப்படியானால் த.தே.மு சிங்கள நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறது?.

10. முற்கம்பி முகாமுக்குள் இருக்கும் 300 000 மக்களும் உமது கட்டளையை மீறி உமது படையின் சூட்டுக்கு மத்தியில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்கள் துரோகிகளா, இதில் உமது பெற்றோரும் அடங்குவரா?.

11. இந்த மக்களை சந்தித்து மன்னிப்பு கேட்பீரா. மன்னிப்பு கேட்க தயார் எனில் நீர் தவறு செய்துள்ளீர். எனவே மீண்டும் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமாயின் துப்பாக்கியை தொட முடியாது. அப்படியானால் உமது எதிர்கால போராட்ட வடிவமென்ன?.

12. பொட்டம்மான் உயிரோடிருந்தால் அதுவும் உம்மைப் போன்று ஒளிந்திருந்தால் அவருக்கான கட்டளை என்ன?.

13. இந்த கேள்விக்கு அனேகமாக உமக்கு பதில் தெரிய நியாயமில்லை ஆனாலும் தெரிந்தால் சொல்லலாம் ‘இசையால் இனி ஒரு புது விதி’ என்ற ஐ.பீ.சீ யின் உழறல் சுமார் ஒரு மில்லியன் புலம்பெயர் தமிழரை நிரந்தரமாக இலங்கைக்கு செல்லவிடாது தடுக்க எடுக்கும் முயற்சியா?.

திருப்தியான பதில் கிடைக்குமாயின் 2011 கார்த்திகை 27ல் நாமும் கலந்து கொள்ளலாம்.

அவுஸ்திரேலியா செல்லும்போது ஆழ்கடலில் கைதானவர்களின் விசாரணை சிஐடியிடம்

படகுகள் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 69 பேரும் சி.ஐ.டியினரின் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவின்பேரில் காலி, பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 69 பேரில் 63 தமிழர்களும், 6 சிங்களவர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

ஏ(எச்1 என்1) அச்சம்: கைகளை அடிக்கடி கழுவி சுகாதாரம் பேணுமாறு அறிவுறுத்து

influenza-a.jpgபுதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) நோய் நாடெங்கிலும் பரவியுள்ளதால் பொது மக்கள் தங்கள் கரங்களை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேநேரம் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியையும் பார்வையிட்டதும் தங்கள் கரங்களை சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதேவேளை தும்மும் போதும், இருமும் போதும் ஒவ்வொருவரும் சுத்தமான துணித் துண்டைப் பயன்படுத்து மாறும் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மக்களிடம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் கூறுகையில் :- புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் நாட்டின் பல பிரதேசங்களில் பரவியுள்ளது.

இது இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு, தலசீமியா, சுவாசத் தொகுதி நோய்கள், புற்று நோய், இருதய நோய்கள் போன்ற நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் எளிதில் இந்நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

அதனால் இவ்வாறானவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இது காற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோய் என்றாலும் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படுகின்ற எச்சில் சிதறல்கள் மூலமே பெரிதும் பரவுகின்றது.

இவ்வாறு வெளிப்படும் வைரஸ் சுற்றாடலிலுள்ள பொருட்களில் படிந்திருக்கும். அவற்றை அறியாமலேயே தொடுபவர்கள் கண்கள், வாய், மூக்கு என்பவற்றை தொடும் போது இவ்வைரஸ் தொற்றிக்கொள்ளுகின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டே அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. அதேநேரம் சளி, இருமல் நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து

இந்நோய்க்குரிய தடுப்பு மருந்து எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியிலேயே இலங்கைக்குள் கொண்டு வரப்படவிருக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் நான்கு இலட்சம் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்கவுள்ளது. இத்தடுப்பு மருந்தை இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும், நோய் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு இந்தியத் தூதர் விஜயம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார். இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.

முகாம் மக்கள் விடுதலை:ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்பு

IDPs_Cookingவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

வெள்ளைமுள்ளி வாய்க்காலில் பெருமளவு வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு பரலினுள் புதைத்த நிலையில் கண்டுபிடிப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் இயக்கம் மறைத்து வைத்திருந்த அதிசக்தி வாய்ந்த பெருமளவு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணா ரத்ன தெரிவித்தார்.

இந்த வெடிபொருட்கள் பிளாஸ்டிக் பரல்களில் இடப்பட்டு வெள்ளைமுள்ளி வாய்க்காலில் இரு இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இந்தத் தேடுதலின் போது 15 கிலோ கிராம் எடையுள்ள 74 பொறிக்குண்டுகளும் ஒரு கிலோ கிராம் எடையுள்ள 38 பொறி குண்டுகளும் ஐந்து கிலோகிராம் எடையுள்ள இரு கிளைமோர் குண்டுகளும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள 10 கிளேமோர் குண்டுகளும் மீட்கப்பட்டன.

இது தவிர 500 கிராம் எடையுள்ள 12 வெடிபொருள் பெட்டிகள், 500 கிராம் எடையுள்ள 11 பொறிக் குண்டுகள் புலிகளால் தயாரிக்கப்பட்ட 125 கைக்குண்டுகள், புலிகளின் தமிழன் படையணிக்கென தயாரிக்கப்பட்ட 81 குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிப் பாகங்கள், எம். பி. எம். பி. குண்டுகள் 200, 5 கிலோகிராம் எடையுள்ள 27 குண்டுகள் 12.07 மற்றும் 7.62 மி.மீ. ரக ரவைகள் 10 ஆயிரம் ஆர்.பி.ஜி. குண்டுகள் 7, ஆர்.பி.ஜி. சார்ஜர்கள் 4, புலிகளின் பாண்டியன் படையணிக்கென தயாரிக்கப்பட்ட 16 கிளேமோர் குண்டுகள் என்பனவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளை முள்ளிவாய்க்காலின் மற்றொரு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 125 கைக்குண்டுகளும் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 81 கைக் குண்டுகளும் 5 கிலோகிராம் எடையுள்ள 27 குண்டுகளும் 16 ‘பாண்டியன்’ குண்டு களும் மீட்கப்பட்டுள்ளன.

குர்பானி விவகாரம்: அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி பணிப்பு

macca.jpgஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர், ஹில்மி கரீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

ஐ. ம. சு. முவின் தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனையின் 2 ஆம் பாகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமாக “மஹிந்த சிந்தனை”யின் இரண்டாம் பாகம் வெளியிடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

2005 ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த சிந்தனையின் முதலாவது பாகம் வெளியிடப்பட்டு மக்கள் ஆணை கோரப்பட்டது. இதன் படி மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினர்.

மக்களின் ஆணைப்படி மஹிந்த சிந்தனையின் முதலாம் பாகத்திலுள்ள பெரும்பாலான அம்சங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெறுவதற்காக மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தீர்வு யோசனை, பாரிய அபிவிருத்தித் திட்ட யோசனைகள் அடங்கலான பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தனது முதலாவது பதவிக் காலத்தில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்த உள்ளார்.

ஏற்கனவே பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டங்களினூடாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைந்து தெற்காசியாவில் தலை சிறந்த நாடாக மாறும் என்றார்.