இசையால் புது விதி செய்யும் IBC : முகம்மது நிஸ்த்தார்.

ibc_logoநூற்றுக்கணக்கான அப்பாவி தமிழரை அங்கவீனர்களாக்கி ஆயிரக்கணக்கில் கொன்றொழித்து மூன்று இலட்சம் வரையிலான மக்களை முற்கம்பி முகாமுக்குள் அடைத்ததுடன் ‘எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி’ கண்ட திருப்தியில் ஐ.பீ.சீ வானொலி இப்போது கோமாளித்தனமாக ‘இசையால் இனியொரு புதுவிதி செய்வோம்’ என்ற கோசத்துடன் செயல்படுகின்றது.

இந்த வானொலியின் இரண்டு அண்ணாமார்கள் தங்களை ITV-1ன் Ant and Dec என்ற எண்ணத்தில் காலை வேளையில் ‘தேடிவரும் தென்றல்’ என்ற நிகழ்ச்சியில் புதிய பாடல்களை ஒலிபரப்பி உலகளாவிய ரீதியில் ஐ.பீ.சீ நேயர்களை குதூகலப்படுத்துகிறார்களாம். ஆனால் நிகழ்ச்சியை நிதானமாக அவதானிப்போருக்கு மாத்திரமே விளங்கும் இந்த இரண்டு அண்ணாமார்களும் இந்த வருடத்து ‘X – Factor’ நிகழ்ச்சியில் வரும் Jodward (John and Edward) தரத்தினர் என்ற உண்மை.

இந்த அண்ணாமார்களுடன் கொஞ்சி குலாவவரும் தம்பிகள், தங்கையர். அக்காமார் சிலவேளைகளில் மாமா, மாமிமார் எல்லாரும் தங்களுக்காகவும் தங்கள் கைக்குழந்தைகளுக்காகவும் விசேடமாக முற்கம்பி முகாமுக்குள் அடைபட்டிருக்கும் மக்களுக்காகவும் புத்தம் புதிய பாடலொன்றைக் கேட்க விரும்ப, இந்த அண்ணாமார்களும் தவறாமல் ‘புலி உறுமுது, புலி உறுமுது’ என்ற பாட்டை ஒலிபரப்பி இடையிடையே இந்த நிகழ்ச்சியுடன் சம்பந்தமில்லாத ஆனால் ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்படுத்தி ‘தமிழன் என்றால் யார்’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்து ‘இவன்தான்டா தமிழன்’ என்று முடியும் நடிகர் விஜயின் டயலொக்குடன் இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிப்பர்.

இப்படியே வானொலி அண்ணாமார்களின் கொச்சை தமிழையும் சராசரி நிலைக்கும் சற்று கீழ்நிலையிலுள்ள அவர்களின் உலக அறிவையும் பொருட்படுத்தாமல் நம் சகிப்புத்தன்மையை மிகவும் சோதிக்கும் அன்பு நேயர்களின் உரையாடல்களையும் பொறுத்துக் கொண்டு புதிய பாடல் கேட்க தயாராகும்வேளை திடீர் என்று பல்குழல் பீரங்கி தாக்குதல்போல் பலமுறை மறு ஒலிபரப்பு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொலைகாட்சியின் ‘மக்கள் அரங்கம்’ என்ற விசுவின் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பப்படும்.

இந்த மக்கள் அரங்க நிகழ்வில் நெடுந்தீவு அக்கா ஒருவரின் புலம்பல் ஐ.பீ.சீ நேயர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அந்த புலம்பலை உலகத் தமிழர் அனைவரும் கேட்க ஆவண செய்யும்படி நேயர்கள் அந்த வானொலி அண்ணாமார்களை கேட்டுக் கொண்டே இருப்பார். இது போதாதா அண்ணாமார்களும் சலிப்படையாமல் தம் காரியத்தை செவ்வனே செய்து முடிப்பர்.

அக்காவின் புலம்பில் சற்று நம்பிக்கையிழந்த விசு இரண்டு கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை முடித்துவைப்பார்.

கேள்வி ஒன்று: உங்கள் நாட்டில் ஆயுத போராட்டம் முடிந்து விட்டதாக சொல்லப்படுகின்றதே இது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: போராட்டம் இன்னும் முடியவில்லை.

கேள்வி இரண்டு: பிரபாகரன் எப்படி உள்ளார்?

பதில்: நலமே உள்ளார்.

இந்த கேள்வி இரண்டுக்கான விடைதான் இன்று அனேகரை குழப்பிக் கொண்டிருக்கும் விடயம். அதாவது ஏசுநாதர் சிலுவையில் தன்னுயிரை நீத்தாரா என்ற கேள்வியில் கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு போன்றது தான் பிரபா இருக்கின்றார் அல்லது இல்லை என்ற இந்தப் பிரச்சினை. ஆனால் ஐ.பீ.சீ யைப் பொறுத்தவரை இது ‘Tiger Wood’ன் அடியில் தங்கு தடையின்றி குறித்த குழியில் போய்விழும் கொல்ப் (golf) பந்து போன்ற விடயம். அதாவது கார்த்திகை 27க்கான நேரடி விளம்பரத்துக்கு உதவும் விடயம்.

ஆனாலும் இதிலுள்ள ஆபத்தை கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நேயர்களையே ஏய்க்கும் இவர்களின் முயற்சியை பார்க்கும்போது எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் இவர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சரி இவர்கள் சொல்வது போன்று பிரபாகரன் இன்னும் உயிருடன் நலமே இருக்கிறார் என்றால் கார்த்திகை 27ல் அவர் வரவேண்டும். அவர் வரமாட்டார் என நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினாலும் அவர் வருவார் என்று நாசுக்காக சொல்லும் ஐ.பீ.சீ அவர் ஏன் அன்று வரமாட்டார் என்ற கேள்விக்கு தயார் நிலையிலுள்ள அவர்களின் பதில், வெளியே சொல்ல முடியாத காரணத்தின் நிமித்தம் நேரடியாக காட்சியளிக்காமல் மறைந்திருந்து மக்களுடன் உரையாட விரும்புகிறார் என்பதாகவே அமையும்.

ஆகவே ஐ.பீ.சீ பிரபாகரனுக்காக குரல் தரவல்ல ஒருவரை தயார்படுத்த வேண்டும். அது அவ்வளவு கடினமான காரியமுமல்ல. இருப்பினும் ஐ.பீ.சீயின் அரசியல் ஆய்வாளர்களால் அதாவது பருவமழை அடிக்கடி பொய்ப்பதால் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் அல்லலுறும் ஒரு நாட்டில் பருவகால மழையை நம்பி ஒரு பேப்பர் ஊடாக இராணுவ வியூகம் அமைத்துக் கொடுக்கும் ஜேர்மனிய சபேசன், கனேடிய திருச்செல்வம், முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றத்துக்கு தந்திரோபாய நியாயங்கள் கற்பிக்கும் ஜப்பானிய கலாநிதி சச்சி சிறிகாந்தா ஆங்கிலத்தில் படித்த காரணமோ அல்லது ஏனோ தமிழ் திக்கும் யு. கே பற்றிமாகரன் கிரிக்கட் நேர்முக வர்ணணை பாணியில் அரசியல் விமர்சனம் செய்யும் இந்திய அப்துல் ஜப்பார் என்ற பலரும் இன்னும் தொட்டுப்பார்க்காத ‘எங்கும் பிரபா என்றும் பிரபா’ என்ற நெடுந்தீவு அக்காவின் உறுதிமொழி ஐ.பீ.சீ யின் கார்த்திகை 27ஜ நோக்கிய பயணத்திற்கு வழி சமைத்து விட்டது.

இந்த ஆய்வாலர்கள் இது பற்றி கதைக்காவிட்டாலும் பின்வரும் கேள்விகளுக்கான விடைகளையும் பிரபாகரனுக்கு குரல் தரவல்லவருக்கூடாக நேயர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் ஐ.பீ.சீ உள்ளதை மறந்துவிட முடியாது.

ஆகவே ஐ.பீ.சீ பாணியில் நாம் கேட்பது கேள்விக்கு நாங்கள் தயார், பதில்தர நீங்கள் தயாரா என்பதே. நீங்கள் தயாராயின் இதோ எமது கேள்விகள்.

1. எங்கு ஒளித்துள்ளிர்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, ஆனால் ஏன் ஒளித்துள்ளிர்கள் என்று சொல்ல முடியுமா?.

2. இன்று ஏன் வெளியே வந்தீர்கள் மீண்டும் ஒழித்திருக்கப் போகிறீர்களா? அப்படியானால் எவ்வளவு காலத்துக்கு, ஏன்?.

3. கிளிநொச்சி நோக்கி இராணுவம் முன்னேறும்போது கிளிநொச்சியை பிடிப்பதென்பது ராஜபக்ஸவின் பகல்கனவு என்றீர்கள். ராஜபக்ஸவோ இது எனது கனவுமாத்திரமல்ல, அனைத்து நாட்டுமக்களின் கனவு என்றாரே. அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?.

4. கிளிநொச்சியை இழக்கமாட்டீர் என உங்களை நம்பச்செய்த விடயம் எது, ஏன் அது கைகூடவில்லை?.

5. இத்தனை ஆயிரம் உமது தொப்புள்கொடி உறவுகள் செத்து மடிந்தபோது உமது சயனைற் குப்பிக்கு என்ன நடந்தது?.

6. இது ஒரு துன்பியல் சம்பவமாக கருதுகிறீரா அல்லது வரலாற்று தவறு என்கின்றீரா அல்லது இது இன்னும் சிங்களவரின் நயவஞ்சகதனம் என்கின்றீரா?.

7. நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்றீரா?.

8. குழு குழுவாக இலங்கை சென்று அரசாங்கத்துடன் கதைப்பவர்கள் பற்றி உமது நிலைப்பாடு என்ன?.

9. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது இது சிங்கள நாட்டின் பிரச்சினை இதில் தமிழர் வாக்களிக்க தேவையில்லை என்கின்றீரா. அப்படியானால் த.தே.மு சிங்கள நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறது?.

10. முற்கம்பி முகாமுக்குள் இருக்கும் 300 000 மக்களும் உமது கட்டளையை மீறி உமது படையின் சூட்டுக்கு மத்தியில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்கள் துரோகிகளா, இதில் உமது பெற்றோரும் அடங்குவரா?.

11. இந்த மக்களை சந்தித்து மன்னிப்பு கேட்பீரா. மன்னிப்பு கேட்க தயார் எனில் நீர் தவறு செய்துள்ளீர். எனவே மீண்டும் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமாயின் துப்பாக்கியை தொட முடியாது. அப்படியானால் உமது எதிர்கால போராட்ட வடிவமென்ன?.

12. பொட்டம்மான் உயிரோடிருந்தால் அதுவும் உம்மைப் போன்று ஒளிந்திருந்தால் அவருக்கான கட்டளை என்ன?.

13. இந்த கேள்விக்கு அனேகமாக உமக்கு பதில் தெரிய நியாயமில்லை ஆனாலும் தெரிந்தால் சொல்லலாம் ‘இசையால் இனி ஒரு புது விதி’ என்ற ஐ.பீ.சீ யின் உழறல் சுமார் ஒரு மில்லியன் புலம்பெயர் தமிழரை நிரந்தரமாக இலங்கைக்கு செல்லவிடாது தடுக்க எடுக்கும் முயற்சியா?.

திருப்தியான பதில் கிடைக்குமாயின் 2011 கார்த்திகை 27ல் நாமும் கலந்து கொள்ளலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Yathartha vathi
    Yathartha vathi

    எனக்கு விளங்கேலை எதுக்கு இப்படி காசு பணம் செலவழித்து மாவீரர் தின நிகழ்வுகள் என்று . இறந்தவர்கள் நினைவு கூரபடவேன்ட்டும், ஆனால் இது ஒரு கோவிலிலோ அல்லது ஒரு சிறு மண்டபத்திலோ நிகழ்த்தலாம் . எமது உறவுகள் ஒரு வேளை சாப்பாடுக்கு கஷ்ட படும் போது, எதுக்கு இந்த வீண் செலவு?. இந்த ஆடம்பர செலவை வன்னியுள் உள்ள மக்களுக்காகக் செலவளித்தால் எவ்வளளவு நல்லதுகளை செய்யலாம்

    யதார்த்த வாதி வெகு ஜென விரோதி!!!

    Reply