November

November

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

des_browneStephen_Smith_and_Rajaparksa._._._._._.
இன்று லண்டனில் வெளியான லண்டன் குரல் பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தி. இப்பத்திரிகையில் வெளியான ஏனைய செய்திகளும் வரும் நாட்களில் தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். லண்டன் குரல் பத்திரிகையின் அச்சுப் பிரதியைப் பெற விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும்)
._._._._._.

அரசியல் தஞ்சம் கோரியுள்ள படகு அகதிகளை திருப்பி அனுப்ப
பிரித்தானிய அரசு அவுஸ்திரேலிய அரசுக்கு முழு ஆதரவு!!!

இந்தோனேசியக் கடலில் ஒரு மாதமாக தத்தளிக்கும் 260 படகு அகதிகளை திருப்பி அனுப்ப முற்படும் அவுஸ்திரேலிய அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதி டெஸ் பிரவுணியே ‘தமிழர்கள் உட்பட மக்களை திருப்பி அனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்’ (‘’We take the view that it is safe to return people, including Tamils, to Sri Lanka.’’ ) என்று கன்பராவில் நவம்பர் 10 அன்று தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தாம் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக ஐந்து இலங்கைத் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பட்டுள்ள டெஸ் பிரவுணி அவ்வழக்குகளில் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக தீர்ப்புக் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னரேயே டெஸ் பிரவுணியைச் சந்தித்த அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் ஸ்டிபன் சிமித் நவம்பர் 9 அன்று இலங்கை சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயும் அகதிகளை அழைத்துச் செல்லும் முகவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுவாக்கவும் தகவல்களை நபர்களைப் பரிமாறவும் உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.

ஏற்கனவே படகு அகதிகள் தொடர்பாக ‘இந்தோனேசியத் தீர்வு’ என்பதனையே அவுஸ்திரேலியா பின்பற்றுகிறது. படகு அகதிகள் அவுஸ்திரேலியத் தரையைத் தட்டுவதற்கு முன் அவர்களை கடலிலேயே வழிமறித்து இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பதை ஒரு வழிமுறையாக அவுஸ்திரேலியா பின்பற்றுகின்றது. அதற்காக இந்தோனேசியாவிற்கு தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்புக்களிலும் பேசவுள்ளனர்.

இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8ல் Australian Tamil Forum for Justice & Equality அமைப்பினரைச் சந்தித்த டெஸ் பிரவுணி பிரித்தானிய அரசு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டையே சர்வதேச சமூகமும் கொண்டுள்ளதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவ மாட்டாது என்றும் தீர்வைக் கொண்டுவருவதற்கு எதிராக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெஸ் பிரவுணி உடனான சந்திப்புப் பற்றி கருத்து வெளியிட்டுள்ள Australian Tamil Forum for Justice & Equality அமைப்பின் பிரதிநிதி ஆர் ரவீந்திரன், டெஸ் பிரவுணி தமிழ் மக்களிடம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். தாங்கள் கடுமையான கோரிக்கை எதனையும் அங்கு வைக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஆர் ரவீந்திரன் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு சரியான பாதையில் செல்வதாக அமையும் என டெஸ் பிரவுண் கருத்து வெளியிட்டதாகக் தெரிவித்தார். ‘தனியரசு கேட்கமாட்டோம்’ என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என டெஸ்பிரவுண் கருதுகின்றாரோ தெரியாது எனவும் ஆர் ரவீந்திரன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. 2002 கணிப்பின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது.

படகு அகதிகள் தொடர்பான பிரித்தானிய, அவுஸ்திரேலிய அரசுகளின் நிலைப்பாட்டை பிரித்தானிய சோசலிசக் கட்சியின் துணையமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு வன்மையாகக் கண்டித்து உள்ளது.

BTF Bannerஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை – பிரிஎப் அல்லது அதன் முக்கிய உறுப்பினர்கள் பிரித்தானிய தொழிற்கட்சிக்கும் கொன்சவேடிவ் கட்சிக்கும் பல்லாயிரம் பவுண்களை நன்கொடையாக வழங்கி உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகளுடன் பல்லாயிரம் பவுண் செலவில் விருந்துபசாரங்கைளயும் மேற்கொண்டுள்ளன. இது தொடார்பாக பிரிஎப் இடம் கேட்கப்பட்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

பிரித்தானிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசு தொடர்பான கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த போதிலும் அவை எதுவும் செயற்பாடுகளில் காட்டப்படவில்லை. தற்போது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அவுஸ்திரேலிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும்போக்கான நிலைப்பாட்டுக்கு டெஸ் பிரவுணி முண்டுகொடுத்துள்ளார். ஏற்கனவே பிரித்தானியா இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டு உள்ளது. தற்போது அகதிகளைத் திருப்பி அனுப்புவது முக்கியம் என்றும் அதன் மூலமே அந்தச் செய்தி சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையும் என்றும் அதுவே அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்தும் என்றும் டெஸ் பிரவுணி அவுஸ்திரேலிய அரசுக்கு ஆலோசணை வழங்கி உள்ளார்.

தாங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள இலங்கையர்களின் வழக்கில் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால் அது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் திருப்பி அனுப்பப்படுவதற்கு வழிவகுக்கும்.

தேசம்நெற் வாசிப்பதில் தடங்கல்?

Difficult to read thesamnet click here
தேசம்நெற் வாசிப்பவர்கள் தமது internet explorer மற்றும் vista ற்கு கொம்பியூட்டர்களை மாற்றம் செய்தவர்கள் எமது தேசம்நெற்றை வாசிப்பதில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார்கள். இதை நிவர்த்தி செய்ய internet explorer ல் வலது பக்க மூலையில் உள்ள tools பட்டனை (கிளிக்) தெரிவு செய்து அதில் உள்ள compatability ஜ தெரிவு செய்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். இந்தப் பிரச்சினை எமது இணையத்தள தயாரிப்பில் உள்ள பிழைகளில் ஒன்று இதை மிக விரைவில் நிவர்த்தி செய்வோம்.

இதில் உள்ள படத்தினை டபிள் கிளிக் செய்து விபரமாக பார்க்கவும்

T Sothilingam – (0044) 07 846 322 369 – admin@thesamnet.co.uk

நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் தொடரும் போராட்டம்

Nepal_Maoists_Protestநவம்பர் 12ல் நேபால் மாவோயிஸ்ட்டுக்கள் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தலைநகர் காத்மண்டு வீதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச கட்டிடத் தொகுதியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகையையும் குண்டாந்தடி அடியையும் பயன்படுத்தி கடுமையாக நடந்த கொண்டனர். மாணவர்களும் இளையவர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Nepal_Maoists_Protestஆயுதப் போராட்டத்தில் இருந்து சமாதான உடன்பாட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்டுக்கள் சென்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று கூட்டாட்சியை ஏற்படுத்தினர். தங்களது போராளிகளை நேபாள இராணுவத்தில் இணைப்பதற்கு இராணுவத் தளபதி சம்மதிக்காததால் அவரை பதவிநீக்கம் செய்தனர். அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதி இப்பதவி நீக்கத்தை நிராகரித்து இராணுவத் தளபதியை மீண்டும் பதவியில் அமர்த்தியதை அடுத்து மாவோயிஸ்ட்டுக்களின் ஆட்சி தடம்புரண்டது.

அண்மைக் காலத்தில் ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு முன்ணுதாரணமாக நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் அமைந்திருந்தது. பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் மத்தியிலும் மாவோயிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் வல்லமையை நிரூபித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பின்னரேயே மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இலங்கையில் மார்க்ஸிய அமைப்புகள் சில உருவான போதும் அவை போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை. இன்று இலங்கையில் புரட்சி பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் இலங்கைக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். இவர்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்களாகவே உள்ளனர். ஆனால் நேபாளில் புரட்சி பற்றிப் பேசும் மாவோயிஸ்ட்டுக்கள் காத்மண்டு வீதிகளில் போராட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அங்கு புரட்சி சாத்தியமாவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது.

”வன்னி முகாம்கள் நல்லமுறையில் இயங்குகின்றது. மீள்குடியேற்றம் நல்லமுறையில் நடக்கின்றது” அவுஸ் பிரதமரின் விசேட பிரதிநிதி

John_McCarthyநவம்பர் 12ல் மனிக் பாம் முகாமுக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய பிரதமரின் விசேட பிரதிநிதி ஜோன் மக்காத்தி ”நாங்கள் நேரடியாக நிலைமைகைளப் பார்வையிட்டது பயனுள்ளதாக இருந்தது” என்று தெரிவித்ததுடன் ”அங்கு கண்ட விடயங்கள் தங்களை ஊக்கப்படுத்தி உள்ளது” என்றும் குறிப்பிட்டார். ”முழுமையாகப் பார்க்கையில் முகாம்கள்நல்ல முறையில் இயங்குககின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நல்லமுறையில் நடைபெறுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் படகு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ள நிலையில் அவ்வாறு அகதி அந்தஸ்துக் கோரி வருவொரைக் கட்டப்படுத்தும் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் அவுஸ்திரேலிய இலங்கை அரசுகள் கைச்சாத்து இட்டன. அதற்காகவே அவுஸ்திரேலியப் பிரதமரின் விசேட தூதுவர் இலங்கை வந்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரி கடந்த ஒரு மாதகாலமாக கடலில் தவிக்கும் இரு தொகுதிப் படகு அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முயற்சி எடுத்து வருகின்றது. அதற்கு பிரித்தானிய பிரதமரின் விசேட தூதுவர் டெஸ் பிரவுணியும் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளார்.

முல்லை மீள்குடியேற்ற பகுதியில் விவசாய நடவடிக்கை ஆரம்பம்

imalda.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக 17ஆம் திகதி விவசாயக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார். இதன் போது 10 சிறிய குளங்களையும் 10 பெரிய குளங்களையும் புனரமைப்புச் செய்து விவசாயத்துக்குத் தேவையான நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினத்துடன் 1682 குடும்பங்களைச் சேர்ந்த 5532 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேரை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த காலப் பகுதிக்குள் துணுக்காய் பிரதேசத்தில் 10312 பேரும், மாந்தையில் 4691 பேரும், ஒட்டுச்சுட்டானில் 1391 பேரும் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

ஐநா பிரதிநிதியின் மற்றுமொரு விஜயம்

John_Holmes_UNஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹொல்மஸ் நவம்பர் 17 முதல் 19 வரையான மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளாதாக ஐநா பேச்சாளர் நவம்பர் 12ல் அறிவத்துள்ளார். ஜோன் ஹொல்ம்ஸ் பெப்ரவரி ஏப்ரல் மே மாதங்களில் இலங்கைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு இருந்தார். தற்போது நான்காவது தடவையாக அவர் இலங்கைக்குப் பயணிக்கின்றார்.

சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பலர் வன்னி முனாம்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் பொதுவாக மக்கள் விரைவில் மீள் குடியெற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். வன்னி முகாம்களில் மக்களுடைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இலங்கையின் தற்போதைய நிலை பற்றி தென் ஆபிரிக்கா. தமிழர்களுக்கு விளக்கப்படும்

இலங்கையைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களை பரப்புவதன் மூலம் இலங்கையின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இப்போதும் ஈடுபட்டு வருவதாக தென் ஆபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் திருமதி மெயிட்டே நெகோனா மெஷபானே கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை தொடர்பாக தனது நாட்டின் தலைமைத்துவத்துக்கும் மற்றும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கும் அறிவுறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க விருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏ-9 வீதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் செளகரியம் கருதி ஏ-9 வீதியின் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயணிகள் போக்குவரத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் நேற்று விடுத்த அறிக்கையில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் பற்றி மேலும் கூறப்பட் டுள்ளதாவது,

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அல்லது எடுத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள வாகனங்கள் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு பொருட் களை கொண்டு செல்வதற்கான வாகனங் களை அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் நாயகத்திடம் பதிவு செய்வது 2009 நவம்பர் 30ஆம் திகதி வரை நீடி க்கப்பட்டுள்ளது. அரசாங்க டிப்போக்கள், கூட்டுத்தாபனங்கள் வங்கிகள் மற்றும் உற்பத்திக் கம்பனிகள் தமது சொந்த வாகனங்களில் பொருட்களை 6 மாதகாலத்துக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனங்கள் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொது மக்கள் தற்போது சேவையிலீடுபடும் பொது போக்குவரத்து மூலம் அல்லது தனியார் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் அனும திக்கப்படுவர்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சேவையிலீடுபட விரும்பும் தனியார் பஸ் மற்றும் சொகுசு பஸ்களின் சொந்தக்காரர்கள் அதற்கான வீதி அனுமதிப் பத்திரங்கங்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

துறைமுக அதிகார சபையின் கப்பல்களுக்கான அனுமதி மற்றும் சேவைக்கான தேவைகளுக்கு ஏற்றதாக அமையும் வகையிலான தனியார் கப்பல்கள் நாட்டின் எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். இதற்கு அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரம் தேவைப்படமாட்டாது.

”ரெலோ, சிறிரெலோ தலைமைகள் கைவிட்டதாலேயே சுதந்திரக் கட்சியில் இணைந்தோம்.” சு க இணைந்த ரெலோ உறுப்பினர் சிவம்: ரி சோதிலிங்கம்

Sri_TELOநவம்பர் 09ல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் தமது முன்னைய அமைப்பான ரெலோ அமைப்பிலிருந்து என்ன குற்றச்சாட்டுக்களைக் கொண்டு பிரிந்து சிறிரெலோவை உருவாக்கினார்களோ, அதே குற்றச்சாட்டுக்களினால் பின்னர் சிறீரெலோவிலிருந்தும் வெளியேறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

ரெலோ மற்றும் சிறிரெலோ அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது அக்கறையற்று இருப்பதாகவும் இவர்களும் கடந்தகால மிதவாத அரசியல்வாதிகள் போன்றே செயற்ப்படுவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்தவர்கள் சார்பாக சிறீரெலோ சிவம் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

”ரெலோ இயக்கத்திற்கு பல தோழர்கள் தமது வாழ்க்கையையும் உயிர்களையும் அளித்துள்ளனர். ஆனால் தற்போது இக்கட்சியின் தலைவர்கள் தமது சொந்த நலனிலேயே அக்கறையுடன் இருக்கின்றனர். நானும் இன்னும் பல தோழர்களும் ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அவஸ்தைப்படுகின்றோம். அதேவேளை ரெலோ தலைவர்கள் எனப்படுவோர் தமக்கென சொத்துக்களை வெளிநாடுகளிலும் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் குடியேற்றியும் உள்ளார்கள். சிலவேளை பாராளுமன்றப் பதவி பறிபோனால் இவர்கள் உடனடியாகவே வெளிநாடு சென்று அங்கு குடியேறி விடுவார்கள். அதிலும் சில தலைவர்கள் பாராளுமன்ற பதவிகளை பெற்றதே இதன் மூலம் தமது குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதற்கே தவிர மக்களுக்கு உதவிசெய்யும் நோக்கில் அல்ல. மேலும் இவர்கள் தமது அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்க்கும் எவ்வுதவிகளும் செய்பவர்களாக இல்லை, செய்யும் நோக்கமும் இல்லை” என்று சிவம் கூறினார்.

”போராட்டம் என்று கூறி தலைவர்களால் மக்களும் இயக்க உறுப்பினர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் மக்களின் அரசியலை வென்றெக்க செய்தது ஒன்றுமில்லை. அல்லது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவாவது ஏதும் செய்தார்களா என்றால் ஒன்றுமில்லை. இவர்களால் மக்களுக்கு ஒருவித பிரயோசனமும் இல்லை. மக்களுக்கென இவர்கள் செய்த சேவைகள் என்ன என்று ஒருவிடயத்தை இவர்கள் எமக்கு தெரியப்படுத்தட்டும் நாங்களும் பதில் அளிக்க தயாராக உள்ளோம்.

இன்று ஜனாதிபதி ராஜபக்ச ஆட்சிக்கு வந்து பயங்கரவாதத்தை ஒழித்து உடனடியாகவே மக்களுக்கான உதவிகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார். ஆகவே எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே நாமும் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். கடந்த 40 வருடங்களாக அபிவிருத்தி நடைபெறாது போன எமது பிரதேசங்களை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வளவு காலமாக இயக்கங்களின் கீழ்மட்ட உறுப்பினர்களை மட்டுமல்ல மக்களையும் மறந்து தனிநாடு என்ற கனவு கோசத்தின் பின்னால் திரிந்தவர்கள் இன்று மீண்டும் தேர்தல் நெருங்கியவுடன் மக்களுக்கு ஏமாற்றுக் கதைகள் சொல்வதற்கு வந்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இனியும் இடமளிக்கமாட்டோம்” என்றும் சிறீரெலோ சிவம் தெரிவித்தார்.

தாம் இந்த விடயங்களை – தமக்குள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறியதாகவும் ஜனாதிபதி தமது பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் சிவம் தெரிவித்தார். தம்மோடு உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணைவதைவிட வேறு வழியில்லை எனவும் இதுவே இன்றுள்ள யதார்த்தம் எனவும் தமக்கு சுதந்திரக்கட்சியின் பல மூத்த தலைவர்களின் ஆதரவும் ஒத்தாசைகளும் கிடைக்கும் எனவும் சிவம் நம்பிக்கை கொள்கிறார்.

இன்று நாட்டிலுள்ள நிலைமையிலும் பெரும்பான்மை மக்கள் சுதந்திரக் கட்சியுடனேயே இணைய விருப்பமாக இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி மூலமே நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை உருவாக்கப் பட்டிருப்பதாகவும் இல்லையேல் இன்றும் இந்நாட்டில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.

சிறீரெலோவில் உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார்கள், இவர்களும் ரெலோ தலைவர்களால் கைவிடப்பட்டவர்கள். தற்போது ரெலோவினர் தமது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்தல் மூலம் தமது வருவாயீட்டும் தொழிலை ஆரம்பிக்க உள்ளனர். ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொலைபேசி மூலம் அழைத்து தம்மை ஏன் சுதந்திரக்கட்சியில் இணைகிறீர்கள் என்று கேட்டபோது இவற்றையே தான் கூறியதாகவும் சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பலர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மேலும் பலர் பல மாவட்டங்களிலிருந்தும் இணைய உள்ளதாகவும் இது ஒரு பாரிய மாற்றத்தை ரெலோவின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.

தாம் ஜனாதிபதியுடன் பேசும்போது திருகோணமலையில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் கிழக்கு மாகாணத்து விதவைகள் பிரச்சினை பற்றியும் எடுத்து கூறியதாகவும் இப்பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் மக்கள் தற்போது உறுதிகள் அற்ற அரச காணிகளிலேயே வாழ்வதையும் சிலர் பல வருடங்களாக அவ்வாறே வாழ்வதையும் தாம் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியபோது இவர்களுக்கான உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தமக்குத் தெரிவித்தாகவும் கூறினார்.

வட கிழக்க மாகாணத் தமிழர்களின் அரசியல்ப் பிரச்சினைக்கு தீர்வு தனது அரசாட்சிக் காலத்தில் நிச்சயமாக வைக்கப்படும் எனவும் தான் அரசியல்த்தீர்வு முன்வைக்கும்போது எல்லா அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்து தனக்கு ஒத்தழைப்பு வழங்கும் இதை நம்புங்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் சிவம் தெரிவித்தார்.

சிறிரெலோ தமிழர்களில் பலர் இராணுவ பொலீஸ் பதவிகளில் சேர்வதை ஊக்குவிப்பதாகவும் இதன் மூலமே எமது தமிழ் பிரதேசத்தில் எமது நிர்வாகங்களை தமிழில் நடாத்த முடியும் எனவும் எமது பிரதேசங்களில் வழங்கப்படும் உதவிகள் வேலைவாய்ப்புக்களில் விதவைகளிட்கு ஒரு குறிக்கப்பட்ட விகிதம் ஒதுக்கப்படுவதை தாம் விரும்புவதாயும் சிவம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தான் கிளிநொச்சியில் தங்கியிருந்து, தமிழ் மக்களின் அந்தப் பிராந்திய மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பேன் இது மிக விரைவில் நடக்கும் என்று கூறியதாகவும் சிவம் தெரிவித்தார்.

இலங்கையில் உடனடியாக தேவையாக உள்ளது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்று வினவியதாகவும் பலரும் பல கருத்துக்களை முன்வைத்த போதும் சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண செயலாளர் திரு புஞ்சிநிலமே இப்போதுள்ள பிரச்சினை வட – கிழக்கில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளே என்றும் இவைகள் தீர்க்கப்பட்ட பின்பே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கருத்து முன்வைத்ததாகவும் சிவம் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருணா தங்களுடன் நன்றாக உரையாடியதாகவும் தன்னுடன் சிறீரெலோவை கைகோர்த்து வேலைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சிவம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தனியாகவும் கூட்டாகவும் நடந்ததாகவும் சந்திப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே நடைபெற்றதாகவும் ஜனாதிபதி தமிழில் சரளமாக பேசியதாகவும் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் தமக்கும் சிறீசபாரத்தினத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் குறையாமல் இருக்கும் என்றும் சிவம் கூறினார்.

பிரிவுற்ற சிறீரெலோவின் இணைப்பாளராக பாரிசில் வதியும் திரு சாந்தகுமார் இயங்குகிறார்.

சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்

031109sarathfonseka.jpgஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து  ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று பிற்பகல்  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்கவிருப்பதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆந் திகதியோடு நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.