இலங்கையைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களை பரப்புவதன் மூலம் இலங்கையின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இப்போதும் ஈடுபட்டு வருவதாக தென் ஆபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் திருமதி மெயிட்டே நெகோனா மெஷபானே கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை தொடர்பாக தனது நாட்டின் தலைமைத்துவத்துக்கும் மற்றும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கும் அறிவுறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க விருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.