2025

2025

உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?

உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?

சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2024 இல் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருபது லட்சமாகTk; 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தென்னிலங்கை மற்றும் கிழக்கு இலங்கையை மையப்படுத்தியே நகரும் நிலையில் mg;பகுதிகளில் இன்னமும் பயணிகளை கவரும் நிலையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை வடக்கு மாகாணத்திலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பறவைகள் சரணாலயங்கள், போர்த்துக்கேயர் கால கோட்டைகள், நெடுந்தீவு சுற்றுலா மையம், பழங்கால கோயில்கள் , வடக்கு நிலத்துக்கே உரித்தான கைத்தொழில் நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றது. எனினும் கூட வடக்கு மாகாணசபை இயங்கு நிலையில் இருந்த போது வடக்கின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே ஊழல் அமைச்சர்களால் புஸ்வாணமாகிப்போனது. கிளிநொச்சியில் பறவைகள் திடல் என்ற பெயரில் பொன். ஐங்கரநேசன் அமைத்த திட்டம் கூட இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றது.

இது போலவே யாழ் மாநகரசபைதானும் ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பலர் எதிர்பார்த்த போதும் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. யாழ் மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன் ஆரம்பித்த ஆரியகுளம் புதுப்பிப்பு திட்டம், வரலாற்று இடங்களை பாதுகாக்கும் திட்டங்கள் கூட உட்கட்சி கோளாறுகளாலும் – சுயநல அரசியலாலும் வீணே போனதுதான் வரலாறு.

இலங்கை ஓர் சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார நீரோட்டத்தில் வடக்கு மாகாணமும் தன்னை இணைக்காதவரை அபிவிருத்தி திட்டங்கள் இந்த பகுதிகளை வந்தடைவதும் சிரமமானது தான். சுற்றுலாத்துறை நோக்கி வடக்கு பொருளாதாரம் கட்டமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. நீண்ட கடல்வளமும் – வரலாற்று பாரம்பரியமும் – தனித்துவமான வாழ்க்கை கோலமும் – பிரமாண்டமான நீர்ப்பாசன கட்டமைப்புக்களையும் – இயற்கை கொடைகளையும் கொண்ட வடக்கு மாகாணம் தேசிய பொருளாதார நீரோட்டத்துடன் தன்னை இணைக்க மறுக்கிறது. இதன் விளைவே இன்றும் வடக்கு புலம்பெயர் தமிழர்களின் கைகளை நம்பியிருக்கவும் காரணம்.

தரமிழக்கும் இலங்கையின் இலவச மருத்துவ கல்வியும் – மருத்துவ சேவையும் !

தரமிழக்கும் இலங்கையின் இலவச மருத்துவ கல்வியும் – மருத்துவ சேவையும் !

வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காலங்களில் இலவச மருத்துவமானது தனியார் வைத்தியசாலைகளாலும் – மருத்துவ மாஃபியாக்களின் கைகளிலும் சிக்குண்டு அதன் தரத்தை இழந்துவருவது தொடர்பில் பல தரப்பினரும் அதிருப்பதி வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ் மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர்.

மேலும் மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று இலங்கையின் மருத்துவர்களாக தெரிவாகும் வைத்தியர்கள் கூட நாட்டிற்கான இலவச சேவையை வழங்காது நாட்டை விட்டு வெளியேறும் தொகை அதிகமாகுவதையும் அவதானிக்க முடிகிறது. நாட்டின் ஏனைய அரச துறை அதிகாரிகளுடன் ஒப்பிடும் போது அதிகமான சலுகைகளை பெறும் வைத்திய அதிகாரிகள் சிலர் தமது கடமை நேரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடங்கி தனியார் வைத்தியசாலைகளை நோக்கி நோயாளர்களை ஊக்குவிப்பது வரையான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கையின் வைத்தியர்கள் தொடங்கி அரச ஊழியர்களில் பலர் பின்தங்கிய கிராமப் புறங்களில் பணியாற்ற தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தனது அதிருப்தியையும் அண்மையில் வெளியிட்டிருந்தார். நகர்ப்புறங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகள் கிராமப்புறங்களை எட்டியதும் இல்லை. மாறாக அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இவர்கள் இடமாற்றம் ஏதுமின்றி இருக்கின்றனர் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதியில் மனநல மருத்துவர்களின் தேவையும் அதிகமாக உள்ளது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மனநல மருத்துவர்களின் தேவை அதிகமாக உணரப்பட்டு வரும் நிலையில் 60 மருத்துவமனைகளிலேயே மனநல மருத்துவர்கள் உள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனைக்கு மனநல மருத்துவராக நியமிக்கப்பட்ட ஒருவர் குறித்த இடமாற்றத்தை நிராகரிக்க முற்பட்டு வருவதும் வைத்தியதுறையினரிடையே விசனத்தை ஏற்படுத்தி வருகிறது.

என்பிபி போட்ட ரோட்டில் கோடு போடும் தமிழ் தேசியம்: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களை மீளக் குடியமர்த்த திட்டமிடுகிறோம்! பா உ சாணக்கியன்

என்பிபி போட்ட ரோட்டில் கோடு போடும் தமிழ் தேசியம்: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களை மீளக் குடியமர்த்த திட்டமிடுகிறோம்! பா உ சாணக்கியன்

 

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சாணக்கியன் எம்.பி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பா.உ சாணக்கியன், வடக்கு – கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை தாயகத்துக்கு அழைத்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த கோரிக்கைக்கு தமிழக அதிகாரிகள் சாதகமான சமிக்ஞைகளை காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேற்குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பா.உ சிறிதரன் தன் பங்கிற்கு மீனவர் பிரச்சனை பற்றி பேrTள்ளதாக பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாகவும் வெகு விரைவில் இந்திய இலங்க கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும் எனவும் பா.உ சிறிதரன் தெரிவித்துள்ளார்.

என்.பி.பி அரசாங்கத்தின் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர் பிரச்சனை தொடர்பில் தமிழக அதிகாரிகள் மற்றும் இந்திய தூதுவர்களுடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் தமிழகத்தில் உள்ள அகதிகள் மீள இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அழுத்தம் வழங்கி கொண்டிருக்கிறார்.

அண்மையில் என்.பி.பி பா.உ இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் உட்பட்ட கனிமவள அகழ்வுகளை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசியதலைமைகள் சுண்ணாம்பு கற்கள் அகழ்வுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

நாற்றமெடுக்கும் யாழ்பாணம் – குப்பைகளை பொறுக்கும் இராணுவம் !

நாற்றமெடுக்கும் யாழ்பாணம் – குப்பைகளை பொறுக்கும் இராணுவம் !

வலி கிழக்கு புத்தூர் பிரதேச சபைக்கு உட்பட்ட இராஜ பாதை வீதியில் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை கொட்டித் தீர்க்கிறார்கள் என்ற முறைப்பாடு நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் கூட வலிகாமம் கிழக்கு பியதேச சபையினர் இது தொடர்பில் மாற்று ஏற்பாடுகள் எவையுமே இது வரையில் மேற்கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த பாதை தொகுதியை துப்புரவு செய்யும் பொறுப்பை இராணுவத்தினர் கையிலெடுத்துள்ளதுடன் இந்த பகுதியில் குப்பை போட வேண்டாம், இராணுவத்தினர் இப்பகுதியை சுத்தமாக்க வைத்திருக்க விரும்புகின்றனர் என்ற காட்சிப்பதாகை பலருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பதாகை யாழ்ப்பாண மக்களிடையேயும் – அரச அதிகாரிகளிடையேயும் – பிரதேச சபைகளிடமும் குப்பைகளை – கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பான ஓர் பொறிமுறை இல்லாமையை வெளிப்படுத்துகிறது.

தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குப்பைகள் – கழிவுகளை அகற்றுவது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் தேசம்நெட்க்கு கிடைத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய மருத்துவ மாபியா கூடாரமாகவுள்ள நோர்தேர்ன் வைத்தியசாலை மலக்கழிவுகளுடன் கூடிய கழிவுத் தண்ணீர் பொதுப்பாதையில் திறந்து விடப்பட்டமை, மீசாலையில் நீர்ப்பாசன திணைக்கள அரச அதிகாரிகளின் கவனமின்மையால் மக்களின் காணிகளுக்குள் இரசாயன – கிருமி கொல்லிகளை உள்ளடக்கிய கழிவு நீர் மக்களின் காணிகளுக்குள் திறந்துவிடப்பட்டமை ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் தேசம்நெட் தனது அவதானத்தை செலுத்தியிருந்தது.

மேலும் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கழிவு நீர் வாய்க்கால் தொகுதிகளும் பிளாஸ்டிக் குப்பைகளாலும் – Vida குப்பைகளாலும் நிறைந்து வழிகிறது. இதன் விளைவாகவே மழை அதிகரிக்கும் காலங்களில் யாழ்ப்பாண நகர்ப்புறத்தில் அத்தனை வெள்ளக்காடு ஏற்படுவதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். நாம் பாவித்த தண்ணீர் போத்தல்களை கூட அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் போட முடியாமல் கழிவுநீர் ஓடும் வாய்க்காலுக்குள் வீசிவிடும் அளவிற்கு யாழ்ப்பாண தமிழ் மக்களிடையே சோம்பேறித்தனமும் – சமூக விரோத எண்ணமும் மேலோங்கி விட்டதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெட்க்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கின் அத்தனை பகுதிகளிலும் நீடிக்கிறது. கடந்த காலங்களில் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வழிபாட்டுக்கு குவிந்த ஆயிரக்கணக்கான மக்களும் தாம் பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளை தெருக்களில் வீசியெறிந்தனர். இதனால் வழிபாட்டு இடமான வற்றாப்பளை அம்மன் ஆலயம் குப்பைக்காடாக மாறிப் போயிருந்தது. பின்னர் அப்பகுதி இராணுவத்தினரே குப்பைகளை அகற்றினர். இதே நிலைதான் யாழ்ப்பாணத்தின் வலி கிழக்கு பகுதியிலும் நடைபெறுகிறது.

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், இராணுவ காணி ஆக்கிரமிப்பைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்களே தவிர இராணுவ வெளியேற்றத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை என கூறியிருந்தார். குறிப்பாக இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதினாலேயே போதைப்பொருள் கடத்தல் தொடங்கி சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஆளுநர் வேதநாயகன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஆளுநர் வேதநாயகனை சிங்கள ஒட்டுக்கழு என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் தமிழ்தேசிய வாதிகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அரச அதிகாரிகளும், பிரதேசசபைகளும் இனிவரும் காலங்களில் சரி முறையான கழிவகற்றல் பொறிமுறை ஒன்றை பேணுவார்களா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். உள்ளுராட்சி சபைத் தேர்தல் மிக நெருங்கி வருவதால் இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் முதலில் தங்கள் தங்கள் பிரதேசங்களில் சிரமதானத்தைச் செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதே சாலச்சிறந்தது. தங்கள் பிரதேசங்களில் சிரமதானங்களில் ஈடுபடாதவர்களுக்கு அப்பிரதேசங்களின் வளர்ச்சிக்காக உழைக்காதவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கும் – ஜனாதிபதி அநுரகுமார

இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க இன்று(15) அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 5:00 மணிக்கு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,தெரிவிக்கையில் “சீனாவின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மேம்பாட்டில் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்து துறைகளிலும் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறது. பல தசாப்தங்களாக  இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது, மேலும் இந்த விஜயம் நமது நாடுகள் மற்றும் மக்களின் பரஸ்பர செழிப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்றார்.

இதேவேளை அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் – பா.உ. மனோ கணேசன்

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா  சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும்  சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள்.  அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம்,  “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள்.  ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல்  கைதிகளை  அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம்.

மேலும் “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் அடையாள அட்டைகள் ! 

நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் அடையாள அட்டைகள் !

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் எரங்க , அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தையும் – நிர்வாக நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக தீவிரமாக செயற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, “ நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாத தடைச்சட்டம்

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள். அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.”என ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய கையெழுத்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !

தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !

 

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்படும் வரை அமைதி காத்து பின்னர் திறப்பு விழா செய்யும் வரையும் அமைதி காத்துவிட்டு தற்போது முழுமையடைந்த விகாரையை இடிக்குமாறு முன்னணியினர் கோசம் போடுவது தேர்தல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். முழுமையடைந்த விகாரையை மீண்டும் இடித்துவிடுங்கள் என முன்னணியினர் கூறுவது மீள ஓர் 1983 கலவரத்தை ஏற்படுத்தும் என கூறும் நல்லிணக்க அரசியலை விரும்பும் செயற்பாட்டாளர்கள் கஜா – கஜா குழுவினர் கனவு உலகத்தில் வாழ்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கட்டி முடிக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதி காத்து பின்னர் விகாரையை இடியுங்கள் என கூறுதல், ஒற்றையாட்சியையும் – தேசிய கொடியையும் எதிர்ப்பதாக கூறிவிட்டு ஒரு நாட்டிற்குள் இருப்போம் என பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்தல், மாகாண சபை முறையை எதிர்த்து நடை பவணி செய்து விட்டு மாகாண சபை தேர்தலிலேயே போட்டியிடுதல் என விதவிதமாக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் முன்னணியினர் என முகஞ்சுழிக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

இதேவேளை அரசியல் லாபமீட்டும் விடயங்களில் மட்டும் தலைபோடும் முன்னணியின் கஜா குழுவினர் தமிழர் பகுதிகளில் உள்ள சமூக சீரழிவுகள் பற்றியும் வைத்திய – அரச அலுவலக மாபியாக்கள் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் ! 

தொழில் திறனுடன் வெளிநாடு செல்லும் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் – வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் !

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

தற்போதும் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் கிடைகின்றன. அண்மைய காலத்தில் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 6,000 நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் அதிகரித்து வரும் நிலையில் லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கொடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாந்து போயுள்ளனர் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை பாடசாலை மாணவர்கள் தொடங்கி பல்கலைக்கழக இளைஞர்கள் வரை தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் கல்வி நிலையையும் சீரழித்து வருவதாக கல்வி சமூகத்தினர் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு இளைஞர்களின் வெளிநாட்டு மோகம் தொடர்பில் அண்மையில் தேசம் நெட்க்கு தெரிவித்த தொழில்கல்வி ஆசிரியர் ஒருவர், சிங்கள, முஸ்லீம் இளைஞர்களிடையேயும் வெளிநாட்டு மோகம் காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் அனைவருமே NVQ முறையில் அமைந்த தொழில்கல்விகளை கற்று தொழில் அறிவுடன் ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நல்ல வேலைகளுக்கு செல்கின்றனர். நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் அவ்வாறின்றி பாடசாலை கல்வியையும் இடைநிறுத்தி எந்த ஒரு தொழில் திறனும் இல்லாமல் அடிமைகள் போல் ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமறைவாக செல்ல ஏஜென்சிகளிடம் லட்சம் ரூபாய் தொடங்கி கோடி வரை கொடுத்து ஏமாறுகின்றனர். அங்கு தலைமறைவாக செல்வோரை ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் கடைகளில் இரகசியமாக வேலைக்கு அமர்த்தி உழைப்பை உறிஞ்சி விடுகின்றனர். சுருக்கமாக சொல்வதாயின் ஒரு காலத்தில் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து இங்கு வந்து நம்மை அடிமையாக்கினர் – தற்போது நாமே விரும்பி போய் அங்கு அடிமையாகி வேலை செய்ய ஆசைப்படுகின்றோம். வெளிநாட்டுக்கு செல்ல செலவழிக்கும் பல லட்சம் ரூபாய்களை இங்கு வைத்திருந்தாலே ஓர் புதிய தொழிலை தொடங்க முடியும் எனவும் குறித்த தொழில்கல்வி ஆசிரியர் தெரிவித்தார்.