என்பிபி போட்ட ரோட்டில் கோடு போடும் தமிழ் தேசியம்: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களை மீளக் குடியமர்த்த திட்டமிடுகிறோம்! பா உ சாணக்கியன்
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சாணக்கியன் எம்.பி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பா.உ சாணக்கியன், வடக்கு – கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை தாயகத்துக்கு அழைத்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த கோரிக்கைக்கு தமிழக அதிகாரிகள் சாதகமான சமிக்ஞைகளை காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பா.உ சிறிதரன் தன் பங்கிற்கு மீனவர் பிரச்சனை பற்றி பேrTள்ளதாக பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாகவும் வெகு விரைவில் இந்திய இலங்க கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும் எனவும் பா.உ சிறிதரன் தெரிவித்துள்ளார்.
என்.பி.பி அரசாங்கத்தின் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர் பிரச்சனை தொடர்பில் தமிழக அதிகாரிகள் மற்றும் இந்திய தூதுவர்களுடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் தமிழகத்தில் உள்ள அகதிகள் மீள இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அழுத்தம் வழங்கி கொண்டிருக்கிறார்.
அண்மையில் என்.பி.பி பா.உ இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் உட்பட்ட கனிமவள அகழ்வுகளை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசியதலைமைகள் சுண்ணாம்பு கற்கள் அகழ்வுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.