இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கும் – ஜனாதிபதி அநுரகுமார

இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க இன்று(15) அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 5:00 மணிக்கு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,தெரிவிக்கையில் “சீனாவின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மேம்பாட்டில் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்து துறைகளிலும் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறது. பல தசாப்தங்களாக  இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது, மேலும் இந்த விஜயம் நமது நாடுகள் மற்றும் மக்களின் பரஸ்பர செழிப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்றார்.

இதேவேளை அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *