2022

2022

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் !

இலங்கையில்  போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான  முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக  விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம்  எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது

“பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும்  இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும்   கூறியிருந்தார்.  இதனை  தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது.

 

ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில்  மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து  இளைஞர்கள் வரையில்  உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

இலங்கையின் குறிப்பாக வட-கிழக்கு நகர்ப்புற இளைஞர்களிடையேயும் – மாணவர்கள் மத்தியிலும் தூள், ஊசிபோதை, ஐஸ் போதை பொருள் என இந்த போதைப்பொருள் சர்வசாதாரணமான விடயமாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதனை தடுப்பதற்கான அடிப்படை  நடவடிக்கைகளில் கூட கல்வி அமைச்சோ – அரசாங்கமோ இறங்கவில்லை என்பதே ஆகக்கவலையான உண்மை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளில் போதைப்பொருள் உள்ளனவா என சோதிப்பதை விட முக்கியமானது போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். இதற்கான எந்த  நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு முன்னெடுக்க முனைவதாக தெரியவில்லை. மாணவர்கள தனதுகட்டுப்பாட்டிலுள்ள பாடசாலை நேரங்களில் எந்த பிழையும் நடந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே கல்வி அமைச்சர் கவலைப்படுவதாகவே அமைச்சரின் மேற்சொன்ன  கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது.

பாடசாலைகளில் போதைப்பொருள் கிடைக்காவிட்டால் என்ன மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு வெளியில் கிடைக்க தான் போகிறது. இதற்கான தீர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கையினுள் வருவதை தடுப்பது மட்டுமேயாகும் .

போதைப்பொருள் பாவனை கல்வி அமைச்சு மட்டுமே கவனம் செலுத்தி கட்டுப்படுத்துகின்ற விடயமல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு துறையினர் மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தென்னிலங்கை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடுத்தடுத்து கைது என்ற தகவல்கள் வெளியாகும். ஆனால் வட – கிழக்கில் அவ்வாறான செய்திகளை பார்ப்பதே அபூர்வம். போதைப்பொருள் மிதந்து வந்ததது – போதைப்பொருள் மீட்பு போன்ற செய்திகள் கிடைக்குமே தவிர கடத்தலில் ஈடுபட்டவர்கள்- விற்பனையாளர்கள் கைது என்ற செய்திகளை பார்ப்பதே அபூர்வமானது. திட்டமிட்ட வகையில் நமது பகுதி இளைஞர்களின் கவனம் வேறு திசைக்கு மாற்றப்படுகிறதா என்ற அச்சத்தையும் – சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் மாபியாவுக்கு வாலாட்டுவோராக வட – கிழக்கு காவல்துறை அதிகாரிகள் செயற்படாது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இது தவிர பெற்றோர்களிடமும் – கிராமத்து இளைஞர்களிடமும் சமூக அமைப்புக்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இயக்கங்களை – கருத்துக்களை பரப்ப முன்வர வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படியாக போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க கல்வி அமைச்சு மட்டுமே நினைத்து முடியாது ஒட்டுமொத்த சமூகமுமே பாடுபடவேண்டிய தேவையுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்துக்கான அழுத்தத்தையே கல்வி அமைச்சர் கொடுக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட. ஒவ்வொரு பாடசாலைகளும் – ஒவ்வொரு ஆசிரியர்களும் – ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் இதன் தேவையை உணர்ந்து போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

தனது 96வது வயதில் காலமானார் இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் !

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு !

சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவானின் வென்சுலானி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு !

கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபரை அரசின் கொறடாவாக்கியது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் சொந்தக் கட்சிக்குள்ளேயே பொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது.

அதனையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர். இதனால் பொரிஸ் ஜோன்சன் பாரிய நெருக்கடிக்குள்ளானார்.

இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பிரதமர் பதவியை கடந்த ஜூலை 7 ஆம் திகதி, பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்தார்.

அதனையடுத்து பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்துக்காக தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில்  இதன்மூலம் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் ஆளும்கட்சியில் கடந்த ஏழு வாரகாலமாக இடம்பெற்ற இந்தத் தலைமைத்துப் போட்டியின் முடிவை வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் வைத்து கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் சேர் கிறகம் பிராடி அறிவித்தபோது லிஸ் ட்ரஸின் ஆதரவாளர்கள் கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்திருந்தனர்.

கென்சவேர்ட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அளித்த 82.6 வீத வாக்குப்பதிவில் கிட்டிய வாக்குகளில் லிஸ் ட்ரசுக்கு 81,326 வாக்குகள் கிட்டியிருந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக்கிற்கு 60,399 வாக்குகள் கிட்டியிருந்தன.

இந்த அறிவிப்பின் பின்னர் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்ட வெற்றியாளரான லிஸ் ட்ரஸ் தனது உரையை வழங்கிய போது பிரித்தானியாவில் உயரும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க ஒரு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாளை ராணி எலிசபெத்தை ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையில் சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்குவார்.

அதன் பின்னர் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ், ராணியின் நியமனத்திற்குப் பின்னர் பிரதமாராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா – இரண்டாவது முயற்சியும் தோல்வி !

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, முதல்முறையாக கடந்த 1969ம் ஆண்டு, ‘அப்போலோ’ விண்கலத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. தற்போது, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது. இதற்காக, 322 அடி நீளமுள்ள ஆர்டெமிஸ்-I என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. முதல் கட்டமாக இதை மனிதர்கள் இல்லாமல் நிலவுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. இது வெற்றி பெற்றால், அடுத்த முயற்சியில் மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில், இந்த ரொக்கெட்டை கடந்த மாதம் 29ம் திகதி விண்ணில் செலுத்த முதல்முறையாக முயற்சி செய்யப்பட்டது.

ஆனால், ரொக்கெட்டில் எரிபொருள் கசிந்ததால், இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த குளறுபடி நீக்கப்பட்டு, நேற்று மாலை மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால், நேற்றும் ராக்கெட்டில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் கசிந்தது. அதை அடைப்பதற்கான முயற்சியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக, ரொக்கெட்டை ஏவும் திட்டம் 2வது முறையாக கைவிடப்பட்டது.

மிக்கையில் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா?

ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை சிதறடித்தவராகக் தன் மக்களால் – ரஷ்யர்களால் கருதப்படும் ஜனநாயகத்தை கொண்டுவந்தவராக அமேரிக்க கூட்டு நாடுகளால் போற்றப்படும் சர்ச்கைக்குரிய முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் மிக்கையில் கோர்ப்பசேவின் உடல் இன்று மொஸ்கோவில் அடக்கம் செய்யப்படுகின்றது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்ட பின் இடம்பெற்ற தேர்தலில் மிக்கைல் கோர்பசேவால் ஒரு வீத வாக்குகளை மட்டுமே தக்க வைக்க முடிந்தது. தனது கடைசிக் காலங்களை மிக்கையில் கோர்பசேவ்வால் நிம்மதியாகக் கழித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

பனிப் போரை இருதரப்பும் விட்டுக்கொடுத்து முடிவுக்கு கொண்டுவரவில்லை. சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகள் நேட்டோவில் அங்கத்துவம் பெற ரஷ்யாவின் எல்லைகளை நேட்டோ சுற்றி வளைத்துக் கொண்டது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட நேட்டோ அந்த நாடுகளை அணி சேர்த்துக்கொண்டது. இன்றைய ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு வித்திட்டதும் அன்று 1991இல் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மிக்கைல் கோர்பசேவ்.

அமெரிக்காவும் நேட்டோவும் கனவிலும் எதிர்பாரத்திராத வகையில் சோவியத் யூனியன்வை சிதறடித்தது மிக்கைல் கோர்பசேவ்வின் மீள்கட்டமைப்பு என்ற ‘பிறிஸ்ரொய்கா – perestroika’. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவருடைய வெளிநாட்டு அமைச்சர் பொறிஸ் யெல்சின் நேட்டோ நாடுகளின் குட்டி நாய் போலவே நடந்துகொண்டார். குடிக்கும் பெண்களுக்கும் அடிமையான இவர் பொதுவெளியில் கூட கண்ணியத்தை கடைப் பிடிப்பதில்லை. மிகைல் கோர்பசேவ்வும் – பொறிஸ் யெல்சினும் சோவியத் யூனியனைச் சிதறடித்து கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் மக்டோனால்ட்ஸ் போன்ற தங்கள் பல்தேசியக் கொம்பனிகளை ரஷ்யாவினுள் நுழைத்தன. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்தது. தங்கள் குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கைக்கு ரஷ்யப் பெண்கள் தங்களை விபச்சாரத்திற்கு தள்ள வேண்டிய நிலை 1990க்களில் ஏற்பட ஆரம்பித்தது.

மிக்கைல் கோர்ப்பசேவின் இறுதி அடக்கம் அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்படவில்லை. ரஷ்யர்கள் அவருடைய மரணம் தொடர்பில் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. தற்போதைய ரஷ்யத் தலைவர் விளாடிமிர் பூட்டினுக்கும் – மிகைல் கோர்ப்சேர்வ்க்கும் கொள்கை அடிப்படையில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. மிகைல் கொர்பசேவின் மீள்கட்டமைப்பு பிறிஸ்ரொய்கா இந்த நூற்றாட்டின் மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட விளாடிமீர் பூட்டின், மேற்குநாடுகளை கோர்பசேவ் மிகையாக நம்பிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

1980க்களில் பனிப்போர் காலத்தின் அரசியல் சூழல் இலங்கையிலும் பிரதிபலித்தது. இந்திய – சோவியத் உறவுகள் மிக இறுக்கமாக இருக்க, அமெரிக்க இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அயல் நாடான இலங்கையில் தனக்கு எதிரான போக்கில் அமெரிக்காவுக்கு சாயும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசுக்கு பாடம் புகட்ட வளர்த்து எடுக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டமும். தமிழீழ விடுதலைப் புலிகளும். அதன் பின் வேலியே பயிரை மேய்ந்ததும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றானது. இந்த அரசியல் சதுரங்கத்தில் அரசியல் கூட்டுக்கள் மாறியது. அமெரிக்காவும் இந்தியாவும் நட்பாகியது. விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகினர். இந்தியா உசுப்பிவிட்ட தமிழீழத்துக்கு தமிழீழம் உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் துடித்தனர். பாவம் இலங்கைத் தமிழர்கள். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இருந்த உரிமைகளையும் இழந்தனர். இன்னும் இந்தியா தமிழீழம் வாங்கித் தரும் என்று அடம்பிடிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது பிஜேபி யோடு சேர்ந்து மறவன்புலவு சச்சிதானந்தம் கோஸ்டி சைவத் தமிழீழம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு கொடி பிடிக்கவும் போராடவும் நியாயம் கற்பிக்கவும் எமக்கு அரசியல் தலைமைகள் இருக்கின்றன. யாரோ பெற்ற பிள்ளைகளை விடுதலை என்ற பெயரில் எதற்கும் பலிகொடுப்பதில் இலங்கைத் தமிழர்களும் புலத்து தமிழர்களும் மகா வல்லவர்கள்.

பனிப் போர், கோடைப் போர், அரப் ஸ்பிரிங், ஹோல்பேஸ் ஸ்பிரிங் என்பதெல்லாமே மக்களை மடையர்களாக்குவதாக ஆகிவிட்டது. பிறிஸ்ரொய்கா போல். மிகைல் கோர்பசேவ்வின் பிறிஸ்ரொய்கா நேட்டோ நாடுகளுக்கு கிடைத்த அல்வா.

தமிழீழம் கேட்ட ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தியா தமிழீழம் எடுத்து தராவிட்டாலும் ஜுலி சங் தமிழீழம் எடுத்துத் தர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ரிஷி சுநாக் நிச்சயம் உதவியிருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால். எத்தளை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மக்களை?

மிகைல் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா? என்ற இந்தக் கேள்விக்கான இரு பதில்களுமே சரியானது. பதில் அளிப்பவரைப் பொறுத்தது.

மீண்டும் தொடங்கும் மிடுக்கு – 2021 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடம் – மாவட்ட அடிப்படையில் மன்னார் முதலிடம் !

கடந்த காலங்களில் தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன. மாகாண அடிப்படையில் 8, 9 இடங்களையே வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றிருந்தன. தமிழர் பகுதிகளின் கல்விச்சூழல் தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடிந்ததது.

இந்த நிலையில் அண்மையில் வெளியாகியிருந்த 2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மீண்டும் வடக்கு – கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்டுத்தியுள்ளதை காண முடிகின்றது.

No description available.

2020ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தை பெற்றிருந்ததது. வடக்கு மாகாணம் 06ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் படி பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் பெறுபேற்றின் (2021) படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் . 11237 மாணவர்கள் பல்கலைகழக அனுமதிப்பிற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் மாகாண அடிப்படையில் மூன்று இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 2020ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் சுமார் 1500 மாணவர்கள் வரையில் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியிருந்தனர். எனினும் இந்த நிலையில் இந்த வருட பெறுபேறுகள் ஓரளவு சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றன. வடக்கு மாகாணத்திலிருந்து 2021ல் பரீட்சைக்கு தோற்றிய 12388 மாணவர்களில் சுமார் 8000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைகழக கற்கைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

No description available.

2021 உயர்தர பெறுபேறுகளில் மாவட்டங்களின் அடிப்படையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

2020 பரீட்சை பெறுபேறுகளின் படிவடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்தன. முதல் 5 இடங்களுக்குள் எந்த வடக்கு – கிழக்கு மாகாண மாவட்டங்கள் எவையுமே இடம்பெற்றிருக்கவில்லை.

தமிழர்கள் மீதான இன அடக்குமுறையின் ஒரு வடிவமாக வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் கல்வி நிலையை வீழ்த்துவதில் பல சதிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் உயர்தர  வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் இதன் நீடித்த தாக்கத்தின் விளைவை வெளிப்படையாக எடுத்துக்காட்டியிருந்தன. யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய வடக்கின் மாகாணங்கள் பாரிய பின்டைவை சந்தித்திருந்தன.

மாவட்ட அடிப்படையில் வடக்கில் போரினால் அதிகம்  பாதிக்கப்பட்ட பிரதேசங்களான முல்லைத்தீவு 17ஆவது இடத்தினையும், கிளிநொச்சி 21 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தன. இதுதவிர மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பு 21ஆவது இடத்தினையும், வவுனியா இறுதி இடமான 25வது இடத்தையும் பெற்றிருந்தது.

 

 

 

No description available.இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைகழகத்தெரிவுக்கான அடிப்படை தகுதியை பெற்றுள்ள மாணவர் தொகையினடிப்படையிலான  பகுப்பாய்வின் படி  வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் கனிசமானளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

 

மாவட்ட அடிப்படையிலான பெறுபேறுகளின் படி (அதாவது தோற்றுகின்ற மூன்று பாடங்களிலும் சித்தியடைவதுடன் –  common general test லும் சித்தியடைவோரின் தொகையின் படி ) மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என்பன முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளமையானது குறிப்பிடத்தக்கது. கடந்த வருட பெறுபேறுகளின் படி 10ஆவது இடத்திலிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் பெறுபேறுகள் அடிப்படையிலான நிலை 7ஆவது இடத்தினை நோக்கி நகர்ந்துள்ள அதே நேரம், வவுனியா மாவட்டம் 25ஆவது இடத்திலிருந்து 15ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. அதே நேரம் இந்த பட்டியலில் முல்லைத்தீவு 8ஆவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுபேறுகள் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளதை காண முடிகின்றது. கடந்த வருடத்தில் கொரோனா பரவலை பலர் காரணம் காட்டினாலும் கூட இந்த பிரச்சினை எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானதே. ஆகவே கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் அடுத்தடுத்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அடைவு வீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அதிக தேவையுள்ளதை இந்த பெறுபேறுகள் தெளிவாக காட்டுகின்றன.

இந்த பெறுபேறுகளின் முடிவுகள் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுகின்ற அதே நேரம் வடக்கு – குறிப்பாக யாழ்ப்பாணம் தன்னுடைய கல்வி அடைவு மட்டத்தில் தொடர்ந்து  பின்னடைவை சந்தித்து வருவதை அண்மைய கால பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றது. 2020 ஆம் ஆண்டில் 5000 மாணவர்கள் வரையில் பல்கலைகழக விண்ணப்பிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் 4500 மாணவர்களே தெரிவாகியுள்ளனர் . பல்கலைகழக இறுதி  தெரிவு அடிப்படையில் கணிக்கும் போது இந்த தொகை இன்னமும் குறைவடையும். தன்னை கல்விச்சமூகமாக அடையாளம் காட்டிக்கொண்டு வந்த யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை இன்னமும் முன்னேற்றமானதாக மாறவேண்டிய – மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாணவர்களிடையே  வேகமாக துளிர்விடும் போதைப்பொருள் கலாச்சாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமாயின் யாழ்பாபண கல்விச்சமூகம் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

கல்விக்காகவே எமது தமிழ்சமூகம் கடந்த காலத்தில் பல இன்னல்களை சந்தித்தது. போர்க்காலங்களிலும் சரி – இடப்பெயர்வுகளின் போதும் சரி – வறுமையின் போதும் சரி நமது தமிழ்சமூதாயம் கல்வியை இறுக்கமாகப்பிடித்திருந்ததது. எனினும் அண்மைய காலங்களில் வேகமாக மாணவர்களிடையே அதிகரித்துள்ள  தொலைபேசிப்பாவனை, மக்களிடம் பரவியுள்ள வெளிநாட்டு மோகம், போதைப்பொருள் கலாச்சாரம், பணம் ஈட்டும் தொழிலாக கல்வி மாறியுள்ளமை என பல காரணங்களால் வடக்கு -கிழக்கின் கல்வியும் அபாயமான ஒரு சூழலை எட்டியுள்ளது.

எனவே வடக்கு – கிழக்கின் கல்விமான்களும் – ஆசிரியர்களும் – அரச அதிகாரிகளுமாக இணைந்து வடக்கு – கிழக்கில் மீண்டும் முன்னேற்றமடைய ஆரம்பித்துள்ள இந்த ஆரோக்கியமான கல்விச்சூழலை இன்னும் ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க இயங்க வேண்டும்.

போர்த்துக்கல்லில் இந்திய கர்ப்பிணித்தாய் மரணம் – பதவி விலகிய போர்த்துக்கல் சுகாதாரத்துறை அமைச்சர் !

போர்த்துக்க்கல் நாட்டில் சுற்றுலா வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக லிஸ்பனில் உள்ள சான்டா மரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குறை மாதத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

 

இதையடுத்து தாயையும் குழந்தையையும், சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. வாகனத்திலேயே அவரை மயக்க நிலையில் இருந்து மீட்பதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணி மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நிர்வாக ரீதியாக நடந்த தவறுக்கு பொறுப்பேற்று நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்ட்டா டெமிடோ பதவி விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புதிய மந்திரி நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதாரத்துறை மந்திரியை தேர்ந்து எடுப்பதற்காக வரும் 15ம் திகதி அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், சுகாதாரத் துறையில் இருந்து செயலாளர்கள் அன்டோனியோ லசெர்டா சேல்ஸ் மற்றும் மரியா டி பாத்திமா பொன்சேகா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.

இலங்கை  அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? – கனடாவில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் !

இலங்கை  அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஆகஸ்ட்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.

ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாணமன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.

மூட்டைகளையும் அவமானங்களையும் நையாண்டிகளையும் சுமந்து சாதித்த அக்காச்சி அனுஜா – காணொளி இணைப்பு !

இலங்கை ஒரு தொழில் முனைவோருக்கு சாதகமான ஒரு நாடு அல்ல. உலகத் தரவரிசையில் தொழில்முனைவோருக்கு சாதகமான நாடுகளின் வரிசையில் இலங்கை 80வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான்இ எல் சல்வடோர் ஆகிய நாடுகள் முறையே 99வது 100வது இடத்தில் உள்ளன. வழமை போல் ஐக்கிய அமேரிக்கா முதலாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இவ்வாறான தொழில்முனைவோருக்கு சாதகமற்ற யுத்தம் தின்ற கிளிநொச்சி மண்ணில் பெண்ணாகப் பிறந்து ஒரு தொழில் முனைவோர் ஆக வருவது என்பது சாதாரண விடயமல்ல.

இளம்பெண்ணாக குடும்பத்தின் சமூகத்தின் எல்லைக்கோடுகளைக் கடந்து செல்வது ஒன்றும் இலகுவான விடயங்களே அல்ல. தங்களை அழகுப் பொருட்களாக காட்சிப்படுத்தி வலம் வரும் போருக்குப் பின்னான இளைய சமூகத்தின் மத்தியில் மூட்டைகளையும் அவமானங்களையும் நையாண்டிகளையும் சுமந்த ஒரு இளம்பெண் அனுஜா தன் அனுபவத்தை லிற்றில் எய்ட் மாணவர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.

ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் அமைப்பு நிகழ்த்திய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு மற்று கண்காட்சி விற்பனையில் கலந்துகொண்ட அனுஜா ராஜ்மோகன் தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை தனது அனுபவத்தினூடாக முன்வைக்கின்றார். ஒவ்வொரு தொழில் முனைவோரும் பெண்ணும் அனுஜாவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது. குடும்பத்தினரால் சமூகத்தால் ஓரம்கட்டப்பட்டு மணவாழ்க்கை வாய்க்கப்பெறாது என்று ஒதுக்கப்பட்ட அனுஜா அக்காச்சி ஆன கதையல்ல நிஜம்.