02

02

தமிழர்களுக்கு என்ன தேவை? அவர்களுக்கு என்ன வேண்டும்?

சிறு பிள்ளைகளோடு உரையாடல் நடத்தினால் “நீங்கள் யாரைப் போல் வரப்போகின்றீர்கள்? என்னவாக வரப் போகின்றீர்கள்?” அவர்களும் தங்களுக்கு தெரிந்ததைச் சொல்வார்கள். ஊரில் கேட்டால் டொக்டர், என்ஜினியர் என்பார்கள். அன்று அப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். புலம்பெயர் நாடுகளில் கேட்டால் புட்போல் ப்பிளேயராக, யூரியூப்பராக, விடியோ கேம் டிசைனராக என்று சொல்வார்கள். ஏனெனில் இத்தொழில்களில் வருமானம் அதிகம். அவர்கள் வளர்ந்து பதின்ம வயதை அடையும் போது தங்கள் உண்மைநிலையை உணர்ந்து அதற்கமைய தங்கள் தெரிவுகளை மேற்கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தேவை என்ன என்பதை அடையாளம் கண்டுகொண்டால் தான், அத்தேவையை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும். இது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல.

சமூகத்திற்கும் இதே பிரச்சினை இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்ன தேவை?’ என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் உடன்பாடும் இல்லை. ஆனால் ஜனவரி முதலாம் திகதி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் வீட்டில் வைத்துத்தான் தமிழ் பேசும் தலைவர்களின் ஒருமித்த நிலைப்பாடு இறுதி செய்யப்பட்டதாம். அப்படி என்றால் 2021 டிசம்பர் 31 வரை இவர்களிடம் ஒருமித்த நிலைப்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்றதும் தெரியாது. டிசம்பர் 31 கொழுத்திப் போட்ட வெடிச்சத்ததில் எழும்பி சனிக்கிழமை ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு என்ன என்பது தமிழ் சனத்துக்கு தெரியாது.

இந்தத் தமிழ் பேசும் தலைவர்கள் யார் என்பதிலேயே தெளிவில்லை. ரிஎன்ஏ யும் முஸ்லீம் காங்கிரஸ்ம் தான் தமிழ் தலைவர்கள் என்று யார் சொன்னது? முதலில் இந்தச் சொல்லாடல்களை வைத்து ரீல் விடுகின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்குத் துணை போனவர்கள் இன்று தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தங்கள் கறள்கட்டிய சைக்கிளை எடுத்து ஓடுகின்றனர். தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தது சிங்கள மக்களின் நலனுக்காக அல்ல. அதேபோல் அதனை எதிர்த்தவர்கள் தமிழர்களுடைய நலன்களுக்காக மட்டும் அதை எதிர்க்கவில்லை.

எழுபதுக்களில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பிரச்சினை தமிழ் மக்களுடைய பிரச்சினையாக்கப்பட்டது. உண்மையில் அது யாழ்ப்பாணத்தில் இருந்த படித்த சமூகத்தின் ஒரு பிரச்சினையே. ஏனைய தமிழ் மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தல் ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழிர் விடுதலைக் கூட்டணியாக ‘தமிழீழம்’ என்ற கோசத்தை தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கும் செயற்திட்டமாக முன்வைத்தனர். அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டனர். ஆனால் ‘தமிழீழம்’ அமைப்பது கூட்டணியின் எண்ணமாக ஒருபோதும் இருக்கவில்லை.

அதனை உணர்ந்த இளைஞர்களான வே பிரபாகரன் உட்பட்டவர்கள் தாங்கள் தமிழீழத்தை பெறுகிறோம் என்று கூறிக்கொண்டு சின்னதும் பெரிதுமாக ஆளுக்கொரு ஆயத இயக்கத்தைக் கட்டினர். பாராளுமன்ற அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர். உடைந்தும், சேர்ந்தும், திருப்பியும் உடைந்தும் ஐந்து இயக்கங்கள் நாற்பது இயக்கங்களாகி எதற்காகவோ சண்டை பிடித்தனர். வே பிரபாகரன் உட்பட இவர்களுக்கும் ‘தமிழீழம்’ நோக்கமாக இருக்கவில்லை. தங்களின் தலைமையின் தாகங்களை, வெறிகளை தமழர்களின் தாகமாகக் கற்பிதம் செய்துகொண்டு தங்களையும் அழித்து சுற்றியிருந்த மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களையும் அழித்தனர். தமிழீழத்திற்காக அல்ல தமிழீழத்தின் பெயரால்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் ஆதரவோடு இலங்கை அரசு வே பிரபாகரன் கேட்ட தமிழீழத்திற்கு அவரோடு சேர்த்து சங்கூதியது. வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளாவிட்டால் அதன் திசையை மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு இன்னொரு சுற்று அதே ஓட்டத்தில் ஓடும். இப்போது ஆயதம் தாங்கியவர்கள் எல்லாம் ஆயதத்தை தூக்கிப் போட்டுவிட்டு மாறு வேசத்தில் வந்து மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கின்றனர். இப்போது மீண்டும் பாராளுமன்ற அரசியல்.

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை? என்ன தேவை? என்று இவர்கள் யாரும் அன்றும் தமிழ் மக்களிடம் சென்று கேட்டறியவில்லை. இன்றும் கேட்டறிய முயற்சிக்கவும் இல்லை. அது அவர்களுக்கு தேவையானதொன்றும் அல்ல. அவர்கள் தங்களுடைய நலன்களும் அபிலாசைகளும் என்னவென்பதை சரியாக அடையாளம் கண்டு அதற்கான திட்டத்தை மிகச் செம்மையாக வகுத்துள்ளனர். தங்களுடைய நலன்களையும் அபிலாஷைகளையும் தமிழ் மக்களினதாக மாற்றி விட்டுள்ளனர். அதனால் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர்.

கோயிலில் பிள்ளையார் சிலை திருட்டு முதல் வடக்கு கிழக்கு இணைவு வரை ஒரு கதையைச் சொல்லி இடையில் புத்தரையும் பிக்குவையும் செருகி அவர்கள் மக்களை வேறொரு மாயைக்குள் வைத்துள்ளனர். உலக நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும், சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் அமெரிக்காவையும் உசுப்பிவிட்டு இடையால தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பம் என்றெல்லாம் தமிழ் பேப்பரிலேயே நாலு எழுத்து வாசிக்காத தமிழ் பாராளுமன்ற சீவன்கள் அறிக்கைவிடுகின்றன.

அல்வாயில் வாழ்ந்தால் என்ன அந்தாட்டிக்காவில் வாழ்ந்தால் என்ன நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது என்பது முதல் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்பது உட்பட நாம் அகற்றும் கழிவுகளுக்கு என்ன நடக்கின்றது என்பது வரை அனைத்துமே அரசியல் தான். தமிழ் மக்களுக்கும் அரசியல் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அது இந்த தமிழ் பேசும் தலைமைகளின் ஒருமித்த சுத்துமாத்து கதையளப்புகள் அல்ல.

இலங்கையில் வாழும் இந்த தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கும் தமிழ் பேசாத மக்களுடைய பிரச்சினைக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் இல்லை. மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு இடையேயும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகையால் தமிழ் பேசும் மக்களும் தமிழ் பேசாத மக்களும் தங்களுடைய பொதுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு அதற்கான தீர்வுக்கான செயற்திட்டங்களை இணைந்து வகுக்க வேண்டும். ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மீது ஏவிவிட்டு தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகள் நடாத்தும் கூட்டுக்கலவியை தமிழ் பேசும் தமிழ் பேசாத இலங்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாடு கடன் பொறிக்குள் சிக்கியது .” – ராஜபக்ஷக்கள் மீது விஜயதாஸ ராஜபக்ஷ சாடல் !

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை தற்காலிக பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகின்ற நிலையில், அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் சட்ட அங்கீகாரம் குறித்தும் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ஆட்சி மாற்றம் அவசியமாக இருந்த வேளையில் இந்த ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்தை முன்னெடுத்தோம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை வைத்தோம், அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஆனால் அதன் பின்னர் அவரும் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது. மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாடு கடன் பொறிக்குள் சிக்கியது என்பதே உண்மையாகும்.

பஷில் ராஜபக்ஷ இன்று நாட்டை நாசமாக்கி வருகின்றார். பஷில் ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் சாதாரண அரச பணியாளராக கூட சேவைசெய்ய முடியாது. அதற்கு இலங்கை சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் அமைப்பில் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்தவுடன் அனைத்தும் நிவர்தி செய்யப்பட்டுள்ளது என இவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் 1948 ஆம் ஆண்டில் டி.எஸ்.சேனாநாயகவினால் கொண்டவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அதுதான் செல்லுபடியாகும் சட்டமாகும். ஆகவே இதற்கு அமைய பஷில் ராஜபக்ஷவினால் இந்த நாட்டில் அமைச்சுப்பதவியை மட்டுமல்ல எந்தவொரு அரச பணியில் கூட ஈடுபட முடியாது. ” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா தண்டிக்கப்பட வேண்டும்.” – ஐ.நாவிடம் ஈரான் வேலியுறுத்தல் !

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது. அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் !

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த நேரத்தில் வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல் 10.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரின் கடும் பிரயத்தனத்தினால் தீ பரவல் கட்டுப்பாட்டக்குள் வந்தது.

இதன்போது கனகபுரம் முறிப்பு வீதியின் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதிகளவான மக்கள் கூடியிருந்தமையால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து பொது மக்களும், வர்த்தகர்களும், பிரதேச சபை உத்தியோகத்தர்களும் துரிதமாக செயற்பட்டு சுமார் 1 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.மின்னொளுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். தீப்பரவல் காரணமாக பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

“இந்தியப்பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று தமிழ் கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை.” – சிவஞானம் சிறீதரன்

“இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இலங்கை வந்திருந்த பாரதப் பிரதமர் என்னுடைய 13 வருட முதலமைச்சர் கால அனுபவத்தில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு கூட்டு சமஸ்டி முறையே பொருத்தமானதென இலங்கை நாடாளுமன்றத்தில் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னார். அவ்வாறு கூறுபவரிடம் 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த கோரி நாம் கடிதம் எழுதுவது எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

யார் பெரியவர் – யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள். இதன்போது முஸ்லிம் தரப்புகள் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்துள்ளனர்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள் வித்தியாசமானது. அதேபோல மலையக தமிழர்களது அபிலாஷைகள் வித்தியாசமானது. வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது அரசியல் அபிலாசைகள் வித்தியாசமானது. ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வாரத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரைபை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய உயர்மட்டக்குழு கூட்டத்தில் அது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவது வரைபு பற்றியும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாவது வரைபில் உள்ள பல விடயங்கள் இல்லாமலாக்கப்பட்டு வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக அந்த வரைவு காணப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சமஸ்டியையே முன்வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என கூறவில்லை. அதேபோல நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்தவும் கூறத் தேவையில்லை. தேர்தல் சட்டங்களின் படி நடத்தியிருக்க வேண்டும். இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை. அதை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியில் ஓர் மாயை உண்டு அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர் அது தவறு.

இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா…? என்பதனை இந்தியாதான் சிந்திக்க வேண்டும் என்றார்.

“சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது.” – சிறீதரன்

“சொந்த மக்களையே சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு  பூநகரி பிரதேச சபையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சின்னக் குழந்தைகளைக்கூட பட்டினி போட்டு சாகடிக்கும் ஒரு நிலையை இந்த அரசாங்கம் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. குடிக்கும் பால்மா கூட அளவிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது. சொந்த மக்களையே சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிற்றுண்டிகள் உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கிறது பால்த் தேநீர் தேநீர் கடைகளில் கேட்க வேண்டாம் என்று இலங்கையில் தேநீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு நிலை மாறி இருக்கிறது.

இந்த அரசாங்கம் பிரதேச சபைகளின் உடைய அதிகாரங்களை மீளப்பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபைகளுக்கு ஊடாகவே பணிகளை ஆற்றி வந்தார்கள். இப்போது அவர்களை சுகாதார அமைச்சோடு இணைத்திருக்கிறார்கள் அதேபோன்று உள்ளூராட்சி சபைகளின் பொதுச் சுகாதார செயற்பாடுகளையும் மத்திய சுகாதார அமைச்சிற்கு கீழ் கொண்டு வருவதற்கு முயல்கிறார்கள். சுகாதார அமைச்சுக்கு கீழே பொதுச் சுகாதாரபணிகளை உள்வாங்கினால் பிரதேச சபைகளினுடைய சுகாதார நடவடிக்கைகள் செயற்பாடுகள் அவர்களின் மக்களுக்கான பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். ஒரு குறுநில அடிப்படையில் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிப்பது ஒரு துர்ப்பாக்கியம் ஆகும்.

இந்த அரசாங்கத்தினுடைய போக்குகள் இராணுவ ரீதியாகவும் முழு இராணுவ சிந்தனையோடும் நடைபெறுகின்ற காரணத்தினால் மக்களுக்கான பணிகள் அற்று ஒரு வெற்று அரசாங்கமாக இராசி இல்லாத அல்லது மக்களால் விரும்பப்படாத ஒரு தலைவனாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மாறியிருக்கிறார். மக்களால் விரக்தியடைந்திருக்கின்ற இந்த அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் மக்களின் எண எண்ணங்களின் அடிப்படையில் செயற்படவேண்டும்.

இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் உண்டு. ஒன்று தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய இனம். சிங்கள தேசிய இனத்திற்கு உள்ளது போன்ற கலை கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் போன்றன தமிழ்த் தேசிய இனத்திற்கும் உண்டு. சிங்கள தேசிய இனத்திற்கு முன்பாக பல ஆயிரம் ஆண்டுகள் பூர்வீகமாக வரலாற்று ரீதியாக மொழி அடையாளங்களோடும் நில அடையாளங்களோடும் பஞ்ச ஈச்சரங்களை வைத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆகவே அவர்களின் இழந்து போன இறைமையை வழங்கி அவர்களையும் அணைத்து இந்த நாட்டிலே தேசிய அரசியல் நீரோட்டதைக் கொண்டு சென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மட்டும் அல்ல இந்த நாட்டின் இன ஒற்றுமையும் நாடும் வளர்ச்சி அடையும் இவற்றை புரிந்து கொண்டு இந்த அரசாங்கம் தமிழர்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதி செய்யப்பட்டது தமிழ் பேசும் தலைவர்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் !

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அனுப்பிவைத்த குறிப்பும் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து விபத்தில் 22 பேர் பலியான சம்பவம் – சாரதிக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை !

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 65 பயணிகள் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக காணப்பட்டனர்.

பேரூந்தை சம்சுதீன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். அவர் பேரூந்தை தாறுமாறாக ஓட்டினார். இதை பார்த்த பயணிகள் மெதுவாக செல்லும்படி கூறினார்கள். ஆனாலும்  சாரதி அதை கேட்கவில்லை. அப்போது திடீரென அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதனால் பயணிகள் அவசர வழியாக வெளியேற முயன்றனர். ஆனால் அந்த கதவில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. இந்த விபத்தில் தீயில் கருகி 22 பயணிகள் பலியானார்கள். ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலி வாங்கியதால் சாரதி சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பஸ் உரிமையாளர் ஜிதேந்திர பாண்டேவுக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதம் !

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக ஆலயம் ஒன்று இல்லாத நிலையில் புதிதாக புனரமைக்கப்பட்ட குறித்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்களும் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச  தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும். அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என நம்புகிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்.

இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.