23

23

மத்தியமலைநாட்டில் தொடரும் வறட்சியுடனான வானிலை – எரிந்து கொண்டிருக்கும் காடுகள் !

மத்திய மலைநாட்டு பகுதிகளில் காட்டு தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை மனித செயற்பாடுகளே, இந்த காட்டு தீ சம்பவங்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரேலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்ஜித் அலஹகோன்  தெரிவித்துள்ளார்.

காடுகளில் தீ வைக்கும் சம்பவங்கள் குறித்து தகவல் அறியும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அவர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹட்டன் காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கரையோர பகுதியான சமர்வில் பகுதியில் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டதால் இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழர்களுக்கு தேவையானது அரசியல் தீர்வில்லை.” – அமைச்சர் பஸில்

“அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம்.” என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் காரசாரமாக விமர்சித்துள்ள நிலையில், கூட்டமைப்புடன் பேச்சு முன்னெடுக்கப்படுமா? என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,

திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது. அந்தப் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும்.

அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம். எனவே, முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு, அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இதுவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக உள்ளது.

இவற்றுக்கு முதலில் தீர்வு கண்டால் அரசியல் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

நாட்டைப் பிளவுபடுத்தி இனவாத ரீதியில் செயற்பட அவர்கள் முற்படக்கூடாது. நாட்டை முன்நகர்த்தும் செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.

நியூசிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – மக்களுக்காக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா செய்த செயல் !

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் ஆனது.
வரும் பெப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தினசரி தொற்று அந்நாட்டில் 70-ஐ தாண்டியுள்ளது.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன்.” இவ்வாறு ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் கட்டாயப்படுத்தப்பட்டது தடுப்பூசி அட்டை – அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் !

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அங்கு 3 ஆவது கொவிட் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 4 ஆவது கொவிட் அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. கொவிட் பரவலுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறந்த முறையில் செயற்படுவதாக உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றதுடன், பிரான்ஸில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

16 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (24) முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கட்டயாமாக தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” – இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு !

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக சாடியுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பிலும்ரூபவ் அடுத்து வரும் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் குறித்தும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையினால் தான் போர் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி மறந்து விடக்கூடாது. போரின் காரணமாகவும் அக்காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் காரணமாகவுமே நாடு மீள முடியாத பொருளாதார வீழ்க்குள் சென்றுள்ளது.

செல்வநாயகம் போன்ற தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனக் குழுமத்தினரும் சமத்துவமாகவே விரும்பினார்கள். அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தார். ஆனால் அவர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு தென்னிலங்கை பெரும்பான்மைத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு பதிலாக அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கினார்கள்.

இதன், விளைவாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்து தனிநாடு கோரி போராடினார்கள். இந்த ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு வரையில் நீடித்தது. அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது 12ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கையை நாம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றோம்.

இவற்றையெல்லாம் மறந்து விட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லாதது போல் கருத்துக்களை வெளியிடுகின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கருதுவது அவருடைய உரையில் மிகத் தெளிவாக உள்ளது.

அவ்விதமாக அவர் கருவாராக இருந்தால் அது அவர் காணும் பகற்கனவாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது வேறு எந்த விடயங்களிலும் நிரந்தரமான தீர்வினை அடைய முடியாது. இது ஜனாதிபதிக்கு புரியவில்லை. அவர், தான் பெரும்பான்மை மக்களினதும்,  கடும்போக்கு பௌத்த தலைவர்களினதும் ஆதரவோடு ஆட்சிப் பீடம் ஏறியவர் என்பதால் அவர்களை மட்டும் திருப்திப் படுத்தினால் போதும் என்று கருதுகின்றார். அவர் அதனை பல இடங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஆனால் அவர் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டும். அவர்(கோட்டாபய) உட்பட அவருடைய சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, பிரேமதாஸ, என்று அனைத்து தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதனால், அவர்கள் உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சர்வதேச நாடுகளிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய திடீரென்று விழித்தெழுந்தவர் போன்று எவ்வாறு இனப்பிரச்சினையே இல்லை என்று கூற முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களின் போக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இனியும் இவர்களிடத்தில் நீதி, நியாயம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கப்போவதுமில்லை.

ஆகவே, தமிழ் மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற அடிப்படையில் உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டினை நாம் கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், அனைத்தினதும் கவனத்திற்கு இந்த விடயத்தினை நகர்த்தவுள்ளோம்.

தற்போதைய நிலையில் நாடு பொருளாதார நிலையில் மீளமுடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணம் போர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியிருந்தால் இந்த போரே மூண்டிருக்காது. இந்தப் போரினால் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கான பரிகாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

இதேநேரம், இந்தப் போருக்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்துள்ளது. இதானால் பொருளாதாரம் மெல்லமெல்ல சரிந்து தற்போது மோசமடைந்துள்ளது. குறிப்பாக போர்க்காலத்தின்போது வரையறைகளின்றி ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அச்சமயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தினை வெகுவாக தாக்கியுள்ளது.

ஆகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. தென்னிலங்கை பெரும்பான்மை மக்களையும்ரூபவ் பௌத்த தேரர்களையும் மையப்படுத்தி தமது விரும்பத்திற்கேற்றவாறாக ஆட்சியை முன் கொண்டு செல்வதானது எதிர்காலத்திற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தில் எதனையுமே நடைமுறைப்படுத்தாது உள்ளது. இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

“ஆட்சிக்காலத்தை நீட்டித்தால் வீதிக்கு இறங்குவோம்.” – எச்சரிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி !

“பொதுமக்களின் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சிக்காலத்தை நீடிக்க முயன்றால் வீதிக்கு இறங்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும்
பொதுமக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகள் மூலமாக தங்கள் ஆணையை வழங்குவார்கள் மக்கள்  பிரதிநிதிகள் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று அல்லது வேறு பொருளாதார சர்வதேச காரணங்களிற்காக ஜனாதிபதியோ – பிரதமரோ ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பில் இல்லை.  சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே பதவிக்காலத்தை நீடிக்க முடியும். பொதுமக்களிற்கு சேவையற்றுவதற்கு ஏதாவது தரப்பிற்கு விருப்பமிருந்தால் அவர்கள் அடுத்த மூன்று வருடங்கள் அதில் ஈடுபட்ட பின்னர் பொதுமக்களின் புதிய ஆணையைகோரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் எதிர்க்கட்சிகளின் கருத்து தொடர்பில் அமைச்சர் நாமல்ராஜபக்ச ,

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை.  அவ்வாறான திட்டம் எதுவுமில்லை,நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

“எங்கள் காலத்தில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை.” – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலானது குடும்பம்,பங்காளிகளை பாதுகாக்கும் அரசியலன்றி நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் அரசியலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இயங்கும் ஐக்கிய இளைஞர் சக்தியின் கேகாலை மாவட்ட மாநாடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இளைஞர்களை கல்வி,அரசியல்,பொருளாதார,சுகாதார,கலாச்சார, மற்றும் மார்க்க ரீதியாக ஊக்குவிப்பதே ஐக்கிய இளைஞர் சக்தியினுடைய கொள்கையின் நோக்கமாகும். என்னுடைய ஆட்சியின் கீழ் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையை இளைஞர்களை மையமாக கொண்டு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எவராயினும் நாட்டு மக்களின் பணத்தையோ அல்லது அரச உடைமைகளையோ மோசடி செய்திருப்பின் அவர்களை நிபந்தனைகள் எதுவுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கொள்கையாகும். குறித்த பணங்களை பெற்று உடனடியாக மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும்.

தமது வயிற்றையும் பொக்கெட்டுகளையும் நிரப்புவதற்காக அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அது எதிர்கால அரசாங்கத்தின் நிலையான கொள்கை.

அன்று ஜே.ஆர்,பிரேமதாச,லலித், காமினி உள்ளிட்ட அரசியல் செயற்திறன் மிக்க ஞானிகள் அதற்கு முன்பு இருந்த தூர நோக்கற்ற ஏழாண்டு கால ஆட்சியின் ஊடாக படு மோசமாக சீரழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாரிய புரட்சியை முன்னெடுத்தனர்.  அந்த யாதார்த்தபூர்வமான வேலைத்திட்டத்தை மனதில் நினைத்து, வெறும் வார்த்தைகள்,பொய் வாக்குறுதிகளுக்கு பதிலாக யதார்த்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும்.

இந்நாட்டின் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்துகிறேன். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இளைஞர்களுக்காக விசேட கொள்கை பிரகடனம் வெளியிட்டு எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை சான்றுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“புலிகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளனர். அவர்களின் ஈழக்கொள்கை மாறவில்லை.” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

“விடுதலைப்புலிகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளதாகவும் அவர்களுடைய ஈழக்கொள்கை மாறவில்லை” எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றின் போதேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த அறிக்கை எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பு என்ன..?  என வினா எழுப்பப்பட்ட போது பதிலளித்த அவர்,

நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட போதிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. எப்பிஐ 2008 இல் அறிவித்தபடி இலங்கை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப்போராடியது.

மீறல்கள் – பிரச்சினைகள் இருந்தால் இலங்கை உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் இலங்கை அதற்கு தீர்வை காண்கின்றது. விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர்.

அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிகைகள் -பிரச்சாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள் . ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை- தமிழீழம் என்ற தனிநாடு.  குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் – வாக்குகளை பெறுவதற்காக அவர்களிற்கு ஆதரவளிக்கும்- தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது. மனித உரிமைகளை சில குழுக்களும் நாடுகளும் துஸ்பிரயோகம் செய்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் நாங்கள் கொள்கைகளை ஐநாவின் பிரகடனத்தை ஐநாவை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இலங்கையர்களை விசாரணை செய்வற்கான வெளிநாட்டு பொறிமுறைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. என தெரிவித்தார்

மேலும் மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் 120,000 ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கின்றார்.
அந்த ஆதாரங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்ட போது ,  பதிலளித்த அவர்,

ஆதாரங்கள் என்னவென தெரிவிக்காமல் குற்றம்சாட்டுவது நீதியா? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 16 உறுப்பினர்களிற்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்கான குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். அதன்பின்னர் பயங்கரவாத தடைச்சட்ட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட காதலன் – 19 வயது காதலி கைது !

கடவத்தையில் இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் நேற்று (22) காலை ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய கோனஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 19 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து கண்ணாடித் துண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த அறையில் சிறுமியும் அவரது முன்னாள் காதலனும் ஒன்றாக இருந்ததை கண்ணுற்ற தற்போதைய காதலன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடவத்தை கோனஹேன பகுதியைச் சேர்ந்த ராஜு மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கடவத்தையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் தனது முதல் காதலனைப் பார்த்து மீண்டும் குறித்த பெண் உறவை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் அவள் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் கொலை செய்த இளைஞன் அதிகாலை 3 மணியளவில் சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்ததை அடுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சிறுமி சிறுவர் புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி வந்து வாடகை அறையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொலை இடம்பெற்ற விதம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.