14

14

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா – பொருளாதார தடை விதித்த அமெரிக்கா !

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் இராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா சோதித்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இதன் காரணமாக  அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை  கிம் ஜாங் உன் அரசு விடுத்துள்ளது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெயரில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

‘கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம்” – அமெரிக்காவை எச்சரிக்கிறது ரஷ்யா !

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில்,

‘உக்ரைனையோ சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த மற்ற நாடுகளையோ நேட்டோ அமைப்பு தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. அத்தகைய கூட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை ரஷ்யா எதிர்பார்க்கிறது.

ஆனால், அவ்வாறு உத்தரவாதம் அளிக்க நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான அணுகுமுறை எதிரும் புதிருமாக உள்ளது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அதனை எதிரகொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொள்ளும்.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் ரஷ்யப் படைகளைக் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது’ என கூறினார்.

“பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற முன்வாருங்கள்.” – சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு !

தலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அவர்,
20 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது. பொருளாதார ஆதரவை நிறுத்தியது, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.
பொருளாதாரத்தை காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் இந்த அவசர சூழ்நிலையில் நிறுத்தப்பட வேண்டும். உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டொலரில் செயல்படுவதால் அமெரிக்காவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. ஆப்கானிய பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை விரைவாக மீட்பது மிகவும் முக்கியமானது.
பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற  ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அந்த நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.  8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டினியினால் வாடி வருகின்றனர். மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுக்கிறேன். இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் இணைய வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் வளமும் – நலமும் பெற்றிட தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பை்பொங்கல் வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் கட்டுரை#thaippongkal - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்