15

15

பிரிடிஸ் இளவரசராக இருந்தால் என்ன பிரதமரக இருந்தால் என்ன எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா!!!

               Photo by Nils Jorgensen/REX 

வழமைபோல் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தைப்பொங்கள் வாழ்த்துக்களை ‘வணக்கம்’ என்று ஆரம்பித்து ‘நன்றி’ என்று கூறி முடித்தார். அவருடைய 100 செக்கன்கள் கொண்ட வாழ்த்துச் செய்தியில் பெரும்பாகம் கோவிட் கால நடைமுறைகளை மீள ஞாபகப்படுத்தி அதன்படி தைப்பொங்கலை கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கோவிட் நடைமுறைகளை அடிக்கடி ஞாபகப்படுத்தும் பிதரமர் தனக்கென்று வரும்போது அவற்றை மறந்துவிடுகின்றார். இந்த தமிழ் புதுவருடமோ ஆங்கிலப் புதுவருடமோ நமக்கெல்லாம் எப்படி அமையப் போகிறதோ இல்லையோ பிரதமர் பொறிஸ்க்கும் பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூவுக்கும் அட்டமத்தில் சனி ஆரம்பித்துவிட்டது.

பிரதமர் பொறிஸ் ஒரு கவர்ச்சிகரமான அரசியல்வாதி. வாயாலேயே சுடச்சுட வடை சுட்டுத்தரும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ‘அவுன் ரெடி’ டீல் இருப்பதாக மக்களை ஏமாற்றியவர். பதவிக்கு வந்து இவ்வளவு காலமாகிவிட்டது இன்னமும் அந்த இழுபறி முடிந்தபாடில்லை. பொதுவாகவே பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களோடு கதைக்கின்ற போதோ அல்லது நாட்டு தலைவர்களோடு கதைக்கின்ற போதோ கூட உள்ளடக்கம் இல்லாமல் நுனிப்புல் மேயும் போக்கிலேயே பேசுவார். அவருடைய உரைகளில் உள்ளடக்கம் மட்டுமல்ல உண்மையும் இருப்பதில்லை என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் அவரது பதவியை பாதிக்காத விடயமாக இதுவரை இருந்தது. இவர் தமிழ் மக்களுக்கு தலைவராகவோ அல்லது ஆசிய நாடுகள் ஒன்றின் தலைவராகவோ இருந்திருந்தால் அவருடைய மரணம் வரை அவர் தலைவராக இருந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நிறம் மட்டும் திராவிட நிறமாக இருந்திருந்தால் பொறிஸ் தமிழர்களுக்கே தலைவராகி இருக்க முடியும்.

துரதிஸ்டவசமாக பொறிஸ் பிரித்தானிய பிரதமராக இருப்பதால் அவருடைய அண்மைய எதிர்காலம் அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. மக்கள் பிரித்தானியாவின் பின்னடைவுக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என நம்பவைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மதில் மேல் பூனையாக நின்ற அன்றைய பொறிஸ் பின்னர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு கொன்சவேடிவ் கட்சியின் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வதே சரியெனத் தெரிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா வெளியேறினால் சுபீட்சம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்து, 2016 கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்று, பின் 2019இல் பிரதமரும் ஆனார்.

அவர் பிரதமராகி ஓராண்டுக்கு உள்ளாக கோவிட் தலைவிரித்தாடியது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரதமர் பொறிஸ் ஒரு காத்திரமான தலைவர் அல்ல. அவருக்கு மக்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைக் கவர்ந்து ஆட்சிக்கு வர முடியுமேயொழிய ஆட்சியை திறம்பட நடத்தும் ஆற்றலும் பொறுப்புணர்வும் இருக்கவில்லை.

அவருடைய பொறுப்பற்ற முடிவுகளால் குறிப்பாக மிக்க காலதாமதமாக முதலாவது லொக்டவுன் கொண்டுவரப்பட்டது முதல் பல அடுத்தடுத்த தவறுகளால் முதல் ஆண்டில் பிரித்தானியாவிலேயே அதன் மக்கள் தொகைக்கு கூடுதலான மக்கள் கோவிட்-19 இல் கொல்லப்பட்டனர். இந்த கோவிட் காலத்தில் பிரித்தானிய பெற்றுக்கொண்ட கடன் தொகை 200 பில்லியன் பவுண்கள். பிரதமர் பொறிஸின் நட்பு வட்டங்களில் இருந்த நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு அங்கிகளை இறக்குமதி செய்வதற்கு அங்கிகாரம் வழங்கி, அதற்கு செலுத்தப்பட்ட லஞ்சம், வாங்கப்பட்ட கடனில் 10 வீதம் 20 பில்லியன் பவுண்கள்.

இவையெல்லாம் போதாது என்று 2021 ஏப்ரலில் புதிய பிரளயம். பிரதமர் பொறிஸ் தனது வீட்டை அழகுபடுத்துவதற்கு கட்சிக்கு நன்கொடை வழங்கும் ஒருவர், அவர் பிரபுக்கள் சபைக்கு தெரிவானவர், அதற்கான செலவு 200,000 பவுண்களை செலுத்தி இருந்தார். அதனை அந்த நபர் இலவசமாகச் செய்யவில்லை. அதற்கு பிரதியுபகாரமாக மற்றுமொரு கொன்ராக் பேசப்பட்டுள்ளது. இந்தப் பொட்டுக்கேடுகளெல்லாம் வெளிச்சத்திற்கு வர பொறிஸ் ஓடிப்போய் தானே திருத்தச் செலவின்கான நிதியைச் செலுத்தினார்.

இதற்கு முன்னரே பிரதமரின் விசேட ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கோவிட்-19 விதிகளை மீறியது தொடர்பில் சிக்கலில் இருந்தவர். இவரே அன்றைய நாட்களில் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவர் என கொன்சவேடிவ் கட்சிக்குள்ளேயே பெரும் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. இறுதியில் 2020 நவம்பரில் கட்சி அவரை பிரதமரின் நம்பர் 10 உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்து கலைத்துவிட்டது.

அன்று டொமினிக் கம்மிங் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் குறம்சுமத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக நம்பர் 10 இல் நடந்த குடியும் கும்மாளங்களும் அம்பலத்துக்கு வந்துள்ளது. 2020 முதலாம் இரண்டாம் லொக்டவுன்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அரசு அனைவரையும் தனிமைப்படுத்தச் சொல்லிவிட்டு அந்த விதியை உருவாக்கிய அரசின் மைய அலுவலகத்திலேயே குடியும் குத்துப்பாட்டு கும்மாளங்களும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு கும்மாளத்தில் பிரதமர் பொறிஸ் 25 நிமிடங்கள் கலந்துகொண்டுள்ளார். அவர் அடிக்கடி வந்து பார்ட்டியில் கலந்துகொண்டு அம்பலப்படாமல் இருக்க அவரை கீழே பார்ட்டிக்கு வரவிடாமல் தடுக்க கதிரைகளை அடுக்கி அவரை கீழே வரவிடாமல் வேறு செய்துள்ளனர். கிட்டத்தட்ட குழந்தைப் பிள்ளைகளுக்கு சைல்ட் லொக் (chilf-lock) போடுவது போல் என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு வைக்கப்பட்ட பெயர் ‘protect the top wild dog‘. இவையெல்லாம் அம்பலமாகி வரும் வேகத்தைப் பார்த்தால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகின்றது.

இதுவரை பிரதமர் தப்பிக்கொண்டதற்கு காரணம் கொன்சவேடிவ் கட்சிக்குள் பிரதமர் பொறிஸ்க்கு எதிரான காத்திரமான தலைமைகள் இல்லாததே அல்லது இருந்தும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற பிரச்சினையாகவும் இருக்கலாம். அடுத்த தலைமைக்கு தயாராக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மைக்கல் கோவ், ரிஷி சுனாக், சஜித் ஜாவட், ஜெரிமி ஹன்ட். ப்ரித்தி பட்டேலும் அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளார்.

தற்போது கொன்சவேடிவ் கட்சியில் 360 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 54 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பொறிஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முடுக்கிவிட முடியும். இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வெறும் 22 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் தற்போது நம்பர் 10 இல் இடம்பெற்ற பார்டிகள் பற்றி தனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்றும் அவை வெறும் வேலை நேர அல்லது வேலையுடனான கூட்டே என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.

பிரதமரின் நம்பர் 10 கார்டின் 24 மணி நேர சிசிரிவி பொருத்தப்பட்டு அது பொலிஸாரின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது. இந்தப் பார்ட்டியை சிசிரிவி யில் பார்த்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதையே மாணவர்கள் செய்த போது பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அபராதம் வித்தித்தனர். தமிழ் திருமணங்களில் கலந்துகொண்ட பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம். இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டம்.

பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் தற்போது சூ க்ரேவ் என்பவர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சூ க்ரேவ் இன் அறிக்கையிலேயே பிரதமர் பொறிஸ்ஸின் எதிர்காலம் ஊசலாடுகின்றது. சூ க்ரேவ் ஓரளவு நேர்மையுடன் செயற்படுவார் எனவே பலரும் எதிர்பார்க்கின்றனர். அவரை பிரதமரே நியமித்தும் உள்ளார். பிரதமரே சர்ச்சைக்குள்ளான ஒருவராக இந்த விசாரணையில் இருக்கின்ற போது அவரால் நியமிக்கப்பட்டவர் எப்படி பிரதமருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது. சூ க்ரேவ் உண்மையில் நம்பர் 10 இல் என்ன நடந்தது என்பதையே ஆராய்கின்றார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கொன்சவேடிவ் கட்சியும் பாராளுமன்றமுமே தீர்மானிக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய அறிக்கை இன்று வெளியான புதிய தகவல்களை ஆராய மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய தகவலின் படி நம்பர் 10 இல் குடிவகைகளை ஸ்ரோர் பண்ணுவதற்கு குளிரூட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் குடிபானங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள வெயிற்ரோஸ் சுப்பர்மார்க்கற்றுக்கு சூட்கேஸ் கொண்டு சென்று குடிபானங்களை வாங்கி கையிருப்பிலும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஜெப்ரி எப்ஸ் ரீன் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் புரிந்து வந்த ஒரு செல்வந்தர். முதலீட்டாளர். அமெரிக்கர். இவர் இளம் பெண்களை ஆசை வார்த்தைகளைக் காட்டி மயக்கி தனதும் தன்னைச் சார்ந்தவர்களது பாலியல் இச்சைக்கும் வழங்கி வருபவர். ஜெப்ரி எப்ஸ் ரீன் இந்த மாமா வேலைக்கு உடந்தையாக அவருடைய மிகச் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த க்ளைன் மகஸ்வெல் இருந்துள்ளார். இவ்வாறான கிரிமனல் சிந்தனையுடையவர்களுக்கு வின்சர் அரண்மனையில் மகாராண எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூ விருந்துபசாரம் செய்துள்ளார். ஜெப்ரி எப்ஸ் ரீனின் விடுமுறை வாஸஸ்தலங்களில் அன்ரூ சென்று தங்கியும் வந்துள்ளார். அதனை அவர் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

பல பாலியல் குற்றங்களுக்காக 2019 யூலை 6 ஜெப்ரி எப்ஸ் ரீன் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் 2019 யூலை 23 இல் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது, 84 வீதமான அமெரிக்கர்கள் ஜெப்ரி எப்ஸ் ரீன் தற்கொலை செய்துகொண்டதை நம்ப மறுக்கின்றனர். 45 வீதத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். அந்த வழக்கு நீதி மன்றத்துக்கு வந்திருந்தால் ஜெப்ரி எப்ஸ் ரீன் யாருக்கு யாருக்கு எல்லாம் இளம் பெண்களை வழங்கி இருந்தார் என்பது அம்பலமாகி இருக்கும்.

பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளில் மதுக்குடில்களில் (தவறணைகளில்) இளம்பெண்களை அரைநிர்வாண நடனங்களில் ஆட வைப்பதும் இதன் பின் அவர்களை இச்சைகொள்வதும் போதைவஸ்து பாவனையும் கண்டும் காணாமல் நடைபெறும் வியாபாரங்கள். தவறணை உரிமையாளர்களின் முக்கிய வருமானங்கள் இவ்வாறுதான் வரும்.

இந்த இச்சைக்கு பிரித்தானிய மகாராணியன் செல்ல மகன் அன்ரூவும் மயங்கி வேர்ஜினியா கிவ் என்ற பதின்ம வயதுப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வேர்ஜினியா கிவ் இன் இடுப்பை இளவரசர் அன்ரூ பற்றி நிற்பதும் அருகில் க்ளைன் மக்வெல் நிற்கும் படமும் பிரித்தானிய சம்ராஜ்யத்தின் மையத்தை தற்போது ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பொய்யை மறைக்க இன்னுமொரு பொய் என்று இளவரசர் வேர்ஜினியா கிவ் என்பவரை தனக்கு தெரியவே தெரியாது என்று மறுத்து வருகின்றார். ஆனால் இவருடைய லீலைகள் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயங்களாக இருந்தது. இளவரசர் அன்ரூ பிரித்தானிய இராணுவ பட்டங்கள் அதிகாரங்கள் உடைய பொறுப்பில் இருந்தவர்.

கடந்த வருட இறுதியில் க்ளைன் மகஸ்வெல் அமெரிக்காவில் குற்றவாளியாகக் காணப்பட்டதுடன் இவ்வாரம் இளவரசர் அன்ரூவ்க்கு எதிரான சிவில் வழக்கை ஆரம்பிப்பதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் அன்ரூவின் எதிர்காலம் சிக்கலானது. நேற்று தைப்பொங்கலன்று இளவரசர் அன்ரூவின் பதவிகளை பறிக்க வேண்டும் அவருக்கு வழங்கப்பட்ட பதங்கங்களை நீக்க வேண்டும் என பிரித்தானிய இராணுவ தலைமைகள் மகாராணியை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இளவரசர் அன்ரூவின் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டு அவர் அரண்மனையின் உத்தியோகபுர்வ பங்குபற்றுதல்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இனிமேல் அவருக்கு மரணம் வரை இவை மீளளிக்கப்பட மாட்டாது. ஆனால் தொடர்ந்தும் இளவரசர் என்றே அழைக்கப்படுவார். பதவியும் பதக்கமும் ஆடை ஆபரணங்களும் இல்லாவிட்டாலும் இளவரசர்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் அதன் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

தோல்வியின் எதிரொலி – தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீர் விலகல் !

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் தலைவராக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு – டோங்காவில் சுனாமி எச்சரிக்கை !

பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது. இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகின. நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகியும் மலையக மக்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லை..” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்னார்.

இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்திய வீட்டுத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் மலையக பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது.

அமரர். தொண்டமான் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க பாடுபட்டவர். அதேபோல் தற்போதைய ஜீவனும் தொண்டமானும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றார். மலையக தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் மூலமே நாட்டுக்கு அந்திய செலவாணி கிடைக்கின்றது. நாட்டில் உருவான ஒவ்வொரு அரசாங்கமும் மலையக மக்கள் தொடர்பில் பேசினார்கள். ஆனால் ஆட்சியமைத்ததுடன் உங்கள் துக்கங்களை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகியும் மலையக மக்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லை. அதேபோல் சுதந்திரக் கல்வியும் மலையக மாணவர்களுக்கு உரிய வகையில் கிடைக்கவில்லை. எனவே ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் மலையக சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டிய கடமை உண்டு.

அதன்படி இன்றைய அரசாங்கம் சிரமங்களுக்கு மத்தியிலும் தடைப்பட்டிருந்த அபிவிருத்தியை முன்னெடுத்து செல்கின்றது. அதற்கமைய மலையக பகுதிகளில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்ட பாடசாலைகள் இன்று தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் உலகமும் எமது நாடும் பல சவால்களை சந்தித்துள்ளது. அதன்படி ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு பெருந்தோட்ட மக்களுக்கு கோதுமை மா சலுகையை வழங்க தீர்மானித்தனர். அதன்படி 80 ரூபாவுக்கு கோதுமைமா வழங்கப்படுகின்றது. ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமையவே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. ஆகவே நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே இதுவாகும். பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றார்.

வவுனியாவில் ஒரே நாளில் பல கைகலப்பு சம்பவங்கள் – 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம் !

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்கம் இரவ 12.00 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த சம்பவங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆண்கள் மற்றும் 03 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் வவுனியா பூந்தோட்டம், புளியங்குளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தககது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையினை வவுனியா, ஈச்சங்குளம், புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

“அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது.” – மகிந்த ராஜபக்ஷ

“அரசை விமர்சிப்போர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றது.” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு. இதனால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றது.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது. அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களை பெற்றுள்ளேன். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் !

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் என்பதை மீள உறுதிப்படுத்துவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் கடன் வசதிகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காக ஏனைய உலக நாடுகளின் முயற்சிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரெயிலில் ஏவுகணை சோதனை செய்து அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா பதிலடி !

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது. உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த தடையை ஒரு பொருட்டாகவே வட கொரியா கருதவில்லை. ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இந்த முறை ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரெயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட கொரியா கூறி உள்ளது.
இந்த மாதம் வடகொரியா மூன்றாவது முறையாக ஏவுகணைகளை கடலில் வீசி சோதனை செய்ததைக் கவனித்ததாக தென் கொரியாவின் ராணுவம் கூறிய மறுநாள் வட கொரிய அரசு ஊடகம் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று நடந்த இந்த சோதனையானது, இராணுவத்தின் ரெயில் ஏவுகணைப் படைப்பிரிவின் எச்சரிக்கை நிலையை சரிபார்க்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென வந்த அறிவிப்பு மற்றும் ஏவுகணை சோதனைக்கான உத்தரவை தொடர்ந்து, ராணுவத்தினர் விரைவாக ஏவுதளத்திற்கு சென்றதாகவும், கடல் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் இரண்டு வழிகாட்டுதல் ஏவுகணைகளை ஏவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பெட்டிகளில் இருந்து இரண்டு வெவ்வேறு ஏவுகணைகள் சீறிப் பாய்வது போன்ற புகைப்படங்களை ரோடாங் சின்முன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 160 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் !

இலங்கையில் மேலும் 160 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட 182  மாதிரிகளில் இருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாதிரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னர் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாதிரிப் பரிசோதனைகள் மூலம் அனைத்து ஒமிக்ரோன் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும்.” – ஜீவன் தொண்டமான் உறுதி !

“அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும்.” என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பொது செயலாளர் நான். ஆனால் மலையக மக்களை பொறுத்தவரையில் பொதுவான அமைச்சர். அதனடிப்படையில் கட்சி பேதங்கள் அற்ற வகையில் அணைவருக்கும் சேவை செய்வது என்னுடைய கடமையாகும்.

கடந்த அரசாங்க காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையகத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ள வீடுகள் பெரும்பாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த உறுப்பினர்களுக்கு அல்லாது ஏனைய கட்சியை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒழிவு மறைவு அற்ற விடயமாகும்.

நான் அமைச்சு பொறுப்பை ஏற்கும் பொழுது இந்திய நிதி உதவியின் ஊடாக மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் 697 வீடுகள் மாத்திரமே பூரணமாக வழங்கப்பட்டிருந்து. ஏனைய வீடுகள் நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகளுடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இன்னும் பல வீடுகள் பாரிய குறைபாடுகளுடன் காணப்படுவதால் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு குறைபாடுகளுடன் காணப்பட்ட வீடுகளுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்த இந்த அரசாங்கம் எனது அமைச்சுக்கு நிதிகளை வழங்கி தற்பொழுது அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் உட்கட்டமைப்பு வசதிகள் பூரணப்படுத்தப்பட்ட ஆயிரம் வீடுகளுக்கான திறப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகள் உள்ள இன்னும் பல வீ்டுகளுக்கான அபிவிருத்தி பணிகளை பெருந்தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நானே முன்னெடுப்பேன்.

அதே போன்று ஏனைய 10 ஆயிரம் வீடுகளுக்கான பணிகளை விரைவில் நான் ஆரம்பிப்பேன். தற்பொழுது வீடுகளில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு காணி உறுதி பத்திரங்களை இவ் ஆண்டு இறுதிக்குள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு முன்பாக பலர் அறிக்கை விட்டிருந்தனர். அதில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளை வழங்குவதாக சொல்லியிருந்தனர். அது தவறான கூற்று. அப்படியென்றால் அவர்கள் முழுமையாக வீடுகளை கையளித்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் எனது அமைச்சின் ஊடாக வீடுகளுக்கான முழு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமையை அவர்கள் உணர வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் கூறி சென்ற ஒரு விடயம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே. அதன் அடிப்படையில் அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மலையகத்தில் பல்கலைகழகம் உருவாக்க அடிக்கல் நாட்டப்படும் என்றார்