08

08

“சுசில் பிரேமஜயந்தவுக்கு கிடைத்த அதிஷ்ட சீட்டு எனக்கும் கிடைக்கும்.” – மைத்திரிபால சிறீசேன

தெல்கந்த சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணித்தியாலயத்தில்  அதிர்ஷ்டச் சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர் ,

தற்போதைய நிலைமையை உற்று நோக்கினால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல் தான் காணப்படுகின்றது.  அன்றைய நாட்களில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காமை மற்றும் வீட்டு பெண்கள் அடுப்பை மூட்டும் போது தகாத வார்தைகளால் பேசினர். அவற்றை செவிமடுக்க அன்று சிறிமாவோ பண்டார நாயக்க தயாராக இருக்கவில்லை.

நேற்று  நான் பேசியதைக் கேட்ட, சமூக ஊடகங்களில் சிலர், நீங்களும் அரசாங்கத்தை கொண்டு வழிநடத்தினீர்கள் தானே என கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.

என்னுடைய அரசாங்கம் வேறுபட்டது என்றும் இன்று அரசாங்கத்தை நடத்துபவர்கள் அன்று தமது அரசாங்கத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்பது நினைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அன்று தம்மை இழிவுபடுத்தியவர்கள் இன்று மக்களின் அவமானத்துக்கும் நிந்தைக்கும் உள்ளாளாகியுள்ளனர் தானே என அவர் கேள்வி எழுப்பினார்.

 

“வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு கடனையும் கடந்த இரண்டு வருடங்களில் பெறவில்லை.” – ஜனாதிபதி கோத்தபாய

எனது 5 வருட பதவிக் காலத்தில் கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு கடனையும் பெறவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சியம்பலாண்டுவவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் பாரிய பிரச்சினையாக காணப்படுவதைக் கருத்திற் கொண்டு நல்ல நோக்கத்துடன் சேதன உரங்களை பயன்படுத்துவதற்குத் தான் விவசாய சமூகத்தினரிடையே முன்மொழிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சேதன உரம் என்பது உரம் மாத்திரம் அன்றி ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் அபிவிருத்தியடைந்த தொழில்நுட்பமாகும். பயிர்ச்செய்கைக்காக பெருமளவிலான விவசாயிகள் சேதன உரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும் விவசாய சமூகத்துக்குத் தேவையான அறிவை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை.

நெல்லுக்கு 50 ரூபா சான்றளிக்கப்பட்ட விலையுடன் கடந்த இரு வருடங்களாக உரங்களை இலவசமாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்யும் போது வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரினதும் ஆதரவு முக்கியமானது என்றார். தடுப்பூசிகள் மற்றும் உர விநியோகம் உட்பட பெரும்பாலான அம்சங்களில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்தால், அவர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் தம்மையே விமர்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்மானம் எடுப்பதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது.

தற்போதைய நிர்வாகம் ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கான அனைத்து இலக்குகளையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அடையும் என ஜனாதிபதி பொது மக்களுக்கு உறுதியளித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பதாகவும், அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சுப் பதவிகள் மாத்திரம் தேவையில்லை.

குடிமக்களுக்காக பணியாற்றுவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிகாரிகளின் முழு ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி இதன் போது அழைப்பு விடுத்துள்ளார்.

“தேசப்பற்றற்ற தீர்மானங்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினாலேயே எடுக்கப்பட்டது.” – அமைச்சர் விமல்வீரவங்ச

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் தேசப்பற்றற்ற தீர்மானங்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினாலேயே எடுக்கப்பட்டதே தவிர தற்போதைய அரசாங்கத்தால் அல்ல என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் பேசிய போது ,

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள சாதகமான தீர்மானங்களை பாராட்டுவதற்குத் தயார்.  பாதகமான மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களை தொடர்ந்து விமர்சிப்போம்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் போது அனைத்து எண்ணெய்த் தாங்கிகளும் முதன்முதலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது சில அமைச்சர்கள்  அந்த வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் 90% தாங்கிகள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உடன்படிக்கையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை முன்னிலைப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இந்த இரண்டு வருடங்கள் இந்த நாட்டில் மிகவும் கடினமான காலம்.” – அமைச்சர் வாசுதேவ

இவ்வாறானதொரு இக்கட்டான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமர் என்ற பெயர் அழியாத எழுத்துக்களால் எழுதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களின் நலனுக்காக இந்நாட்டில் பல்வேறு சட்டங்களை இயற்றி, இந்த நாட்டின் தேசிய பாரம்பரியத்தையும், தேசிய சுதந்திரத்தையும் பாதுகாத்து, இந்த நாட்டில் தேசிய உணர்வுகளை எழுப்ப எமக்கு வழங்கிய தலைமைத்துவத்துக்கு மேலதிகமாக அவர் தலைமை தாங்கினார். இவை அனைத்திலிருந்தும் அவரது பெயர் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட பெயராக வரலாற்றில் இடம்பெறும்.

இந்த இரண்டு வருடங்கள் இந்த நாட்டில் மிகவும் கடினமான காலம். இத்தகைய கடினமான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை. எனவே இந்த ஆண்டு புதிய பயணத்தை தொடங்கவுள்ளோம்.

இந்த ஆண்டு இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியையும், நமது சாமானிய மக்களுக்கு ஏற்படும் ஒவ்வோர் அழுத்தத்தையும் தணித்து, அவர்கள் விரும்பும் வெற்றியை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

“இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்.” – இரா.சாணக்கியன்

“லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.”  என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்திரியையாளர்களை  அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து நீங்கள் இவ்வாறான வேலைகளை தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையில் இருந்து நீக்கவேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த பேட்டி ஒன்றை பார்த்திருந்தேன்  அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.

எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். லசந்த மடடுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிசாரால் லசந்த கொலை தொடர்பாக வழக்கு தொடரவில்லை.

இருந்தபோதும்  நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதை திருப்திகரமான முடிவை  எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடையம்.

எனவே இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்காத்தாலே நீதிமன்றத்தாலே  தண்டனை வழங்காவிட்டாலும் இறைவன் தண்டணை வழங்குவான்” என தெரிவித்தார்.

 

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்! – பாகம் 23

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 23 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 23

தேசம்: இப்ப நீங்கள் முழு வீச்சாக இந்த பின்தள மாநாட்டை நடத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து இருக்கிறீர்கள். பின்தள மாநாட்டில்…

அசோக்: பின் தள மாநாடு அல்ல தள மாநாடு…

தேசம்: மன்னிக்க வேணும். தள மாநாட்டில் எல்லாரும் கலந்து கொண்டார்களா? எப்படி என்ன மாதிரி?

அசோக்: நாங்கள் வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் புளொட் தோழர்களை சந்தித்து உட்கட்சிப் போராட்டம், மாநாடு, அதன் அவசியம் பற்றி உரையாடுகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் போய் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என எல்லா அணிகளோடும் நாங்கள் கதைக்கிறம். அங்க இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி தோழர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து அவர்களை கொண்டு மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் உத்தேசிக்கிறோம்.

தேசம்: தனிய மாவட்ட அமைப்பாளர்கள் என்று இல்லாமல் முன்னணி தோழர்களை, விரும்பின ஆட்களும்…

அசோக்: ஓம். அந்தந்த மாவட்டம் தெரிவு செய்து அனுப்பும். நாங்கள் தெரிவு செய்வதில்லை. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தோழர்களே மாநாட்டில் தங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் தோழர்களை தெரிவு செய்து அனுப்புவார்கள். நான் நினைக்கிறேன் எண்பத்தி ஆறாம் ஆண்டு பெப்ரவரி கந்தரோடை கிராமத்தில் ஒரு பாடசாலையில் ரகசியமாக 6 நாட்கள் அந்த தள மாநாடு நடந்தது.

தேசம்: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்…

அசோக்: எல்லா மாவட்டங்களிலிருந்து சுமார் 200 தோழர்கள் வந்திருப்பார்கள். அதற்கு பூரணமான ராணுவ பாதுகாப்பு சின்ன மென்டிஸ் தான் கொடுத்தது. மெண்டிஸ் தான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ஆனா மாநாடு நடப்பதற்கான பாதுகாப்பு எல்லாத்தையும் தான் செய்வதாக சொல்லிவிட்டார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது.

தேசம்: அதுவே ஒரு பெரிய விஷயம்…

அசோக்: ஆறு நாட்களும் பாதுகாப்பு தந்தார்.

தேசம்: நீங்கள் இந்த மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொல்லி பின் தளத்துக்கும் தெரியும் உமா மஹேஸ்வரனுக்கும் தெரியும்.

அசோக்: எல்லாருக்கும் தெரியும். மாநாடு நடக்கும் போது படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில்தான் நின்றவர். நாங்கள் மாநாடு நடாத்துவது பற்றி பின் தளத்தில் முகுந்தன் ஆட்களுக்கு தெரியும். தள மத்திய குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்த மாநாடு பற்றி பின் தள மத்திய குழுவுக்கும், முகுந்தனுக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

தேசம்: அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கலயா?

அசோக்: ஒன்றும் நடக்கவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தேசம்: ஏனைய அமைப்புகளாலும்…

அசோக்: அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் இல்லை. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

தேசம்: அந்த விவாதத்தில் எது முக்கியமாக இருந்தது.

அசோக்: பின்தள படுகொலைகள். தலைமையினுடைய எதேச்சதிகார அராஜக போக்குகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய குழுவும், தலைமையும் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லியும் ,அதன் மீதான நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் புதிதாக நிர்வாகம் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு புளொட்டில் நடந்த படுகொலைகள் சித்திரவதைகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடாடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புளொட்டின் சீர்குழைவுகளுக்கு காரணமான முகுந்தனின் மூல உபாயம் அற்ற அரசியல் இராணுவ போக்குகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான அரசியல் இராணுவ மூல உபாயங்கள் வகுப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என்றும் அத்தோட தீர்மானிக்கபட்டது. உண்மையிலேயே மிக சிறப்பான கோட்பாட்டு அரசியல் சார்ந்த மாநாடு என்றுதான் சொல்ல வேணும்.

தேசம்: தள மாநாட்டுக்கு முதலே செல்வம் அகிலன் கொலை நடந்து விட்டதா?

அசோக்: ஓம். மாநாட்டுக்கு முதலே செல்வம், அகிலன் படுகொலை விட்டது. அந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று சொல்லியும் அதில் சிவராம், வெங்கட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று சொல்லியும் முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

தேசம்: என்னென்ன தீர்மானங்கள் நீங்கள் முக்கியமாக எடுத்தீர்கள்?

அசோக்: ஒரு பதினாறு பதினேழு முக்கிய தீர்மானங்கள். தலைமை இழைத்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள். இதுவரை தோழர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அதுல சொல்லப்படுது. அதில 17 பேர் கொண்ட அரசியல் வழிகாட்டி குழு ஒன்று தெரிவு செய்யப்படுது. அவர்கள் பின் தளம் போய் இந்த தீர்மானங்களை முன் வைத்து அங்கொரு பின்தள மாநாட்டை பின் தள தோழர்களின் ஒத்துழைப்போடு நடாத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசம்: பின் தளத்தில்…

இது தள மாநாடு. ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தீர்மானிக்க இயலாது தானே. பின் தளத்தில் பயிற்சி முகாங்களில் இருக்கும் தோழர்கள், மற்றய ஏனைய தோழர்களும் இருக்கிறார்கள்தானே. அவர்களை உள்ளடக்கிய பின் தள மாநாடு நடத்தத்தானே வேண்டும். அதுதானே முழுமையான ஜனநாயக பூர்வமான செயற்பாடாக இருக்க முடியும். இதன் மூலமே ஜனநாயக மீட்புக்காக ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் என நாங்க நம்புகிறோம்.

தேசம்: தெரிவு செய்பட்ட அந்த முக்கியமான தோழர்கள் ஞாபகம் இருக்கா?

அசோக்: எல்லா வெகுன அமைப்புக்களிருந்தும் ஜன நாயக அடிப்படையில் தேர்தல் மூலம்தான் இந்த தோழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பிரசாத்…

தேசம்: பிரசாத் இப்ப எங்க இருக்கிறார்.

அசோக்: பிரசாத் லண்டனில் இருக்கிறார்.

தேசம்: வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரா?

அசோக்: இல்லை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், கிராமம் மறந்துட்டேன். தீபிநேசன் அமெரிக்காவிலயோ கனடாவிலயோ இருக்கிறார். பெண்கள் அமைப்பில் இருந்து கலா, தொழிற் சங்கத்தில் இருந்து கௌரிகாந்தன், முத்து, ராஜன், ஐ பி மூர்த்தி, சத்தியன் மாணவர் அமைப்பிருந்து தீபநேசன், டேவிட் அர்ச்சுனா ஏனைய அமைப்புக்களிலிருந்து தவநாதன் செல்வம் , துரைசிங்கம் , எல்லாளன், இப்படி 17 தோழர்கள். பெயர்கள் ஞாபகம் இல்லை. மொத்தம் 17 பேர் அதோட நாங்கள் நான்கு பேர் சென்றல் கமிட்டீ.

தேசம்: இங்கேயும் ஒரு பெண் தோழர்தானா…

அசோக்: இல்லை. ஜெயந்தி என்ற தோழரும் இருந்தவங்க என நினைக்கிறேன்.

தேசம்: முத்து என்டுறது?

அசோக்: சிறிதரன். லண்டனில் இருக்கிறார்.

தேசம்: ராஜன்?

அசோக்: ராஜன் கனடாவில் இருக்கிறார்.

தேசம்: ஜென்னியும் வருகின்றாரா?

அசோக்: இல்லை. முன்றாம் நாள் மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டாங்க என நினைக்கிறேன்.

தேசம்: அவர் ஏன் வெளியேறினவர்…?

அசோக்: குற்றச்சாட்டுகள் அவங்க மீதும் வந்தது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உடன் அவர் வெளியேறிட்டாங்க. முகுந்தனின் விசுவாசி என்றும் தளத்தில் தோழர்களை உளவு பார்த்ததாகவும் அவங்க மீது குற்றச்சாட்டுக்கள் வந்ததென நினைக்கிறேன். பல விடயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கிறது.

தேசம்: தள மாநாடு நடந்து உடனடியாக அங்க போனீர்களா அல்லது?

அசோக்: தள மாநாடு முடிந்தவுடன் எல்ரீரீஈ, ரெலோ பிரச்சனை தொடங்கி விட்டது. அதனால் உடனடியாக பின் தளம் போக முடியவில்லை.

தேசம்: எண்பத்தி ஆறு ஏப்ரலில் ரெலோவுக்கு எதிரான தாக்குதல்கள்…

அசோக்: நாங்கள் பின் தளம் போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது புலிகளின் ரெலோ மீதான தாக்குதல் பயங்கரமாக தொடங்கிவிட்டது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் போகல.

அசோக்: அதுக்குள்ள மாட்டுப்பட்டு விட்டோம் நாங்கள். அது முடிந்ததற்கு பிற்பாடுதான் நாங்கள் பின் தளம் போறம்.

தேசம்: மூன்று நான்கு மாதங்கள் அதற்குள்ளேயே இருந்திருக்கிறீர்கள்.

அசோக்: அதுக்கு பிற்பாடுதான் மன்னாருக்கு எல்லாரும் போறம். அங்கிருந்துதான் பின்தளம் சென்றது.

தேசம்: ஒரேயடியா போகிறீர்கள்…

அசோக்: இதுல ஒன்று சொல்லவேண்டும். அந்த மாநாட்டில் கண்ணனும் கலந்து கொள்கிறார். அவர் பார்வையாளராக கலந்து கொள்கினறார்.

தேசம்: படைத்துறைச் செயலாளர் கண்ணன்…

அசோக்: ஓம்.

தேசம்: அவர் மீதும் குற்றச்சாட்டு வந்திருக்கும் தானே…

அசோக்: அவர் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டு இல்லை.

தேசம்: இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு தான் பின் தளம் போகிறீர்கள்…

அசோக்: சரியாக ஞாபகம் இல்லை. நான்கு மாதங்கள் இல்லை. குறைவு என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உமாமகேஸ்வரன்…

அசோக்: உமாமகேஸ்வரன் அவர் சார்ந்த உளவுத்துறை. முழுக்க முழுக்க தலைமை மீதும், மத்திய குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. புளொட்டின் அமைப்பு வடிவம், மேலிருந்து அதிகார உருவாக்கம், சமத்துவம், ஜனநாயகம்,தோழமை அற்ற தன்மை பற்றியெல்லாம் . அரசியல் கோட்பாடு சார்ந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உண்மையிலேயே இப்ப நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசம்: அப்போ நீங்கள் இவர்கள் செய்த சிபாரிசு அல்லது தீர்மானங்களில் இப்ப இருக்கிற மத்திய குழு உறுப்பினர்கள் திருப்பியும் மத்திய குழுவில் இருப்பதற்கு சம்மதம் வழங்கப்பட்டதா? அல்லது பின் தளத்தில் மத்திய குழுவை முழுமையாக கலைத்துவிட்டு முற்றிலும் புதிய மத்திய குழுவை உருவாக்குவதுதான் நோக்கமா?

அசோக்: மத்திய குழுவை முழுமையாக கலைப்பதுதான் நோக்கம். அதில் நாங்களும் சம்பந்தப்பட்ட ஆட்கள் தானே. நாங்கள் நல்லவர்கள் அவர்கள் பிழையான ஆட்கள் என்று இல்லை. ஒட்டுமொத்தமாக மத்திய குழு அது எங்களையும் சாரும். புளொட்டின் தலைமை செய்த தவறுகள் என்ற அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகள்தானே. எனவே மத்திய குழு முழுமையாக கலைக்கப்பட்டு பின்தளத்தில் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்பபடும் தோழர்களும், தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களும் தலைமை அரசியல் வழிகாட்டி குழுவாக செயற்பட்டு புதிய மத்திய குழுவை உருவாக்குவார்கள் என்பதுதான் தீர்மானம்.