21

21

போலந்தில் தடுப்பூசி போட்டால் மட்டுமே சாப்பாடு !

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஐத் தாண்டியுள்ளது.    தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் போலாந்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்காதது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதனால் கொரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் போலந்து மருத்துவக் கவுன்சிலின் 17 உறுப்பினர்களில் 13 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
போலந்தில் சுமார் 56 சதவிதம் பேர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம் தனது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை வோர்சோ நகர உணவங்கள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் முக்கிய முடிவு என்றும் எதிர்ப்புகள் எழுந்தாலும்  வழக்கமான வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டதாக உணவு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார்.

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும்.” – அனுர குமார திஸாநாயக்க

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர் ,

அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், பொருளா தாரம் போன்ற பல்வேறு விடயங்கள் நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் அமைச்சரவை நாட்டை நிர்வகிக்கும் எனவும் அவர் கூறினார்.

சுகாதாரம் என்ற பாடத்தை நளிந்த ஜயதிஸ்ஸ, நிஹால் அபேசிங்க போன்றவர்கள் கொண்ட குழுவும், பொருளாதாரம் என்ற பாடத்தை சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க போன்றவர்களும் கட்டுப்படுத்து வார்கள் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தாம் நாட்டின் ஜனாதிபதியானால் அரசியல்வாதிகளின் அனைத்து சிறப்புரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என அவர் தொலைக்காட்சி கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

“சர்வாதிகார நாடுகளை போலவே இலங்கை பயணிக்கிறது.” – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு சென்று சாட்சியம் வாங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

1994 இல் ஆட்சியை பொறுப்பேற்கும்போது வறுமைக் கோட்டிலுள்ள நாடுகள் பட்டியலில் 25 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தனது 11 ஆண்டுகால ஆட்சியில் போசாக்குள்ள 72 நாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமின்றி தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்ததோடு தேசிய உற்பத்தியும் மூன்று மடங்காக அதிகரிக்க அந்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

இருப்பினும் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டிருந்த கல்வி துறை 2006 இன் பின்னர் முழுமையாக சீரழிக்கப்பட்டது என சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டினார்.

பிரியந்த குமாரவின் கொலையை நியாயப்படுத்தியவருக்கு தண்டனையை அறிவித்தது பாக்.நீதிமன்றம் !

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலையை நியாயப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றம் செய்த நபருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 10000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் THE NATION இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்டான் என்ற குற்றவாளிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் 34 பேரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் தினமும் 04 மணிநேர மின்துண்டிப்பு – மக்களை தியாகம் செய்ய தயாராகுமாறு அரசு அறிவிப்பு !

நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை தவறினால் இந்நிலை ஏற்படும் என கூறினார்.

ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

இருப்பினும் மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆகவே இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் நான்கு மணி நேர மின்வெட்டுக்கு பதிலாக, இப்போதிருந்தே ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவது நல்லது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“ஜனாதிபதிக்கு மேலும் 2 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும்.” – டயானா கமகே

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

கொவிட் -19 நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. எனவே ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், எனவே தமக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தீயில் எரிந்து தாயும் 17 வயது மகளும் பலி – கிளிநொச்சியில் சோகம் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 11.50 மணியலவில் தாயும், அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் அச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் கொலையாக இருக்குமா…?, எனும் கோணத்தில் பொலிசார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி எனும் 07 பிள்ளைகளின் தாயாரும், 17 வயதுடைய லக்சிகா எனும் அவரது மகளுமே இவ்வாறு உயிரிந்துள்ளனர்.

மாணவர்களிடம் இருந்து மீளப்பெறப்படுகின்றது இஸ்லாமிய பாடப்புத்தகங்கள் – பின்னணி என்ன.?

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வௌியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.

மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும தெரிவித்தார்.

“ஒரு நாடு- ஒரு சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கல்வி வௌியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப்புத்தகங்களை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கல்வி வௌியீட்டு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதற்கமைய, திணைக்களத்தினூடாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு, இஸ்லாம் பாடநூல்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், இதன்போது விநியோகிக்கப்பட்டுள்ள பாடநூல்களை மீளப்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

06, 07, 08, 10, 11 ஆம் தர மாணவர்களுக்கான இஸ்லாமிய பாட நூல்களையே திரும்ப பெறுமாறும், இதுவரை பாடநூல்கள் விநியோகிக்காத மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் பாடப்புத்தகங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்று, துரிதகதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி வௌியீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இஸ்லாம் பாடப்புத்தகங்களில், சில வகுப்புகளுக்கான புத்தகங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

சிம்பாப்வே அணியுடனான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி !

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வோ அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, 2 – 1 என்ற ரீதியில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

“துப்பாக்கி முனைகளில்  மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனை உள்ளது.” – நாடாளுமன்றில் எஸ்.சிறீதரன் !

“இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும்   மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனை உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

மேலும் இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாக செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும். அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம்  நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019-11-18  ஆம் திகதி  ஜனாதிபதி அனுராதபுரத்திலே முதல் முதலாக தனது பதவியை ஏற்றிருந்தார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ,இந்த நாட்டிலே வாழ்கின்ற பல்லின மக்கள்,  குறிப்பாக தமிழர்கள் என்ற ஒரு தேசிய இனத்தினுடையை அடிப்படைகளை தூக்கி கடாசிவிட்டு தன்னுடைய மனதில் கூட அதனை சொல்ல முடியாத ஒரு தலைவராக இருக்கின்றார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதியின் உரை என்பது சகல இன  மக்களையும் அணைத்து செல்கின்ற ,அந்த மக்களை ஒன்றிணைத்து செல்கின்ற,  இலங்கை என்ற நாட்டை கட்டி எழுப்புகின்ற ஒரு மனிதனுடைய,ஒரு தலைவருடைய  உரையாக அது  அமையவில்லை.

மீண்டும் தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள் ,தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளில் மட்டும்தான் அவருடைய சிந்தனை இருப்பதாகவே ஜனாதிபதியின்  பேச்சு அமைந்துள்ளது.

ஆகவே இந்த நாடு  நியாயமான அல்லது நீதியான  பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதனைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது.

இங்கு எமக்கு பேச நேரம் தருவதில்லை. எமது கருத்துக்களைக்கூற முடியாதுள்ளது .அவ்வாறான ஒரு கொடூரமான அரசுக்குள் தான் நாம் இருக்கின்றோமா என்ற எண்ணம் எமக்கு தோன்றுகின்றது என்றார்.

அத்துடன் தென்னாபிரிக்காவின் கேப்டன் முன்னாள் பேராயர் டெஸ்மன்  டுட்டு,தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா போன்றவர்களையும்  தென்னிலங்கையர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .ஆட்சியாளர்கள் அவர்கள் வழி நடக்க வேண்டும் எனவரும் வலியுறுத்தினார்.