04

04

ஒமிக்ரோனை விட ஆபத்தான புதிய வகை கொரோனா – அச்சத்தில் பிரான்ஸ் மக்கள் !

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை வாட்டிக்கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவுடன் மனித இனம் தொடர்டந்து போராடிக்கொண்டிருக்கின்றது.

டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமிக்ரோன் ஆகிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒமிக்ரோன் பரவல் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒமிக்ரோனை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஐஎச்யு பி.1.640.2 என  புதிய திரிபு கொரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். எனினும், இதுவரை  உலக சுகாதார அமைப்பு  இது குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

“அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம்.” – முன்னணி வல்லரசு நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை !

அணு ஆயுதங்களை முன்னணி வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது.

போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உலகளாவிய ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அணு ஆயுதங்களை சண்டையில் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை வலுவாக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு சீனா மற்றும் ரஷியாவுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது.

உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து இருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரைனை தாக்கினால் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த 5 நாடுகளும் முதல் முறையாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், அணு ஆயுத போரை தவிர்ப்பதும், ஆயுத போட்டி அபாயங்களை குறைப்பதும் தங்களின் முதன்மையான பொறுப்புகளாக கருதுகிறோம்.

அணு ஆயுத போரால் வெற்றி பெற முடியாது. அது ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணுசக்தி பயன்பாடு நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அணு ஆயுதங்கள் தொடர்ந்து இருக்கும் வரை தற்காப்பு நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். போரை தடுக்க வேண்டும். இதுபோன்ற ஆயுதங்கள் மேலும் பரவுவதை தடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சீனா துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மா ஜாக்சூன் கூறும் போது, ‘இந்த கூட்டு அறிக்கை பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மாற்றவும் உதவும்’ என்று தெரிவித்தார்.

ஒரே பாலினத்தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இஸ்ரேல் உச்சநீதிமன்றம் அனுமதி !

இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமுல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலின தம்பதிகள் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக ஓரின சேர்க்கையாளர் உரிமை ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே பாலின தம்பதியர் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்த தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், இஸ்ரேல் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதன்மூலம் ஒரே பாலின தம்பதியர் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், அந்த நாட்டிற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இஸ்ரேலில் எல்.ஜி.பி.டி.க்யூ. போராட்டத்திற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என சுகாதாரத்துறை மந்திரி நிட்சன் ஹாரோவிட்ஸ் தெரிவித்தார். மேலும், வாடகைத்தாய் மூலம் கர்ப்பம் தரிப்பதில் அனைவருக்கும் சமமான அணுகலை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

டிக்டொக் காணொளியால் வந்த வினை – சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை !

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  17 வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து,  குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இதன்போதே, சந்தேகநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் அதன்பின்னர், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.” – மனோ கணேசன்

“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பில், மனோ கணேசன் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்  மேலும் கூறியதாவது,

அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில், “நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில், “நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். ஆகவே இப்போது இதை ஒத்தி வைப்போம்” என கூறிய போது, எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.

நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரிய அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளை பிரித்து புதிய பிரதேச சபைகளை அமைக்க வேண்டும் என நான் கோரிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அம்பாறை மாவட்டத்திலும் புதிய பிரதேச சபைகளை அமைப்பதாக நான் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் ரவுப் ஹக்கீமின் மேடையில் இருந்து அந்த மக்களுக்கு உறுதி அளித்துள்ளேன். அந்த சபைகள் இன்னமும் அமைக்கப்படவில்லை. ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். இப்போது இதை ஒத்தி வைப்போம். இப்போது இதை அமைத்தால், ஏன் நுவரெலியாவில் மட்டும் அமைக்கிறீர்கள்? ஏன் அம்பாறையில் அமைக்கவில்லை? என்ற குற்றச்சாட்டு எழும்” என்றார்.

“அம்பாறை மக்களுக்கு நீங்கள் வாக்குறுதி அளித்து இருந்தீர்கள் என்றால் அதை நிறைவேற்றுங்கள். அது உங்களுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் இடைப்பட்ட பிரச்க்சினை. ஆனால், நுவரெலியா வேறு. அம்பாறை வேறு. தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாங்களும் எங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். நாட்டில் ஏனைய பிரதேசங்களில் 25,000 பேருக்குகூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, தலா இரண்டரை இலட்சம் ஜனத்தொகை கொண்டதாக அம்பகமுவ, நுவரெலிய பிரதேச சபைகள் 30 வருடங்களாக செயற்படுகின்றன. இது மிகப்பெரும் அநீதி. பாரபட்சம். எமக்கு கட்டாயம் புதிய பிரதேச சபைகள் அமைத்தே வேண்டும்” என சிங்களத்தில் கடுமையாக சத்தம் போட்டேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற அந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில், இதை சொல்லி விட்டு, நான் அமர்ந்து இருந்து நாற்காலியை உதைத்து விட்டு, கூட்டத்திலிருந்து, வெளியேற கோபத்துடன் நான் எழுந்த போது, எனக்கு ஆதரவாக “மனோ எமதிதுமாகே இல்லீம இதாம சாதாரணய்” (அமைச்சர் மனோவின் கோரிக்கை மிகவும் நியாயமானது) என சொன்ன நண்பர்தான், அன்றைய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

அதன் பிறகு தான் இன்று நுவரெலியாவில் செயற்படும், நோர்வுட், மஸ்ககெலியா, அம்பகமுவா, அக்கரபத்தனை, தலாவக்கலை, நுவரெலிய ஆகிய ஆறு புதிய பிரதேச சபைகளை அமைக்கும் வர்த்தமானியை வெளியிட அன்றைய அரசு இணங்கியது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது ஆசியாவின் ராணி !

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கலை கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை பெறுமதியில் 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரத்தினக்கல் பலாங்கொடை பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மூங்கிலாறு 13 வயதான சிறுமியின் மரணம் – ஐவருக்கு விளக்கமறியல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது

இன்று (04) வரையிலும் ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கு, நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோ​தே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

​டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த நிதர்சனா, அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில், கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து 13 ஆம் திகதியன்று புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போய்விட்டாரென அவரது குடும்ப உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 15 ம் திகதி முறைப்பாடு பதிவு செய்திருந்தனர் .

ஆனால், இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.

ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது அக்காவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரி ஆகியோரை வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர் .

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழு நடாத்திய விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் உள்ளது.

இந்நிலையில், கருவைக் கலைக்கும் போது, சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்திருந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் சிறுமியின் தாய், தந்தை, சகோதரி, சகோதரியியின் கணவன்,மைத்துனன் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு இன்று (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகி முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில் பிரேமஜயந்த !

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக் கருத்துகளுக்குப் பின்னர் சுசில் பிரேமஜயந்த உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று கல்வி அமைச்சிற்கு சென்றிருந்த அவர், ஆவணங்களை எடுத்துக்கொண்டு அமைச்சில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறினார். இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் ஒப்படைத்திருந்த காரணத்தினால் அவர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், நெருங்கிய நண்பன் என்ற வகையில் இந்தச் செய்தியை அறிந்ததும் வருத்தமடைந்ததாக கூறினார்.

அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அண்மையில் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த விமர்சனம் காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் தான் .” – விவாதத்திற்கு நான் தயார் என்கிறார் எச்.எம்.எம் ஹரீஸ் !

மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) மாலை சமகால அரசியல் தொடர்பில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

தற்போது தமிழ் பேசும் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் அது தொடர்பில் கையாளப்படும் ஆவணங்கள் கூட எமக்கு காண்பிக்கப்படவில்லை.இவ்வாறு தான் 1987 ஆண்டு கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் தரப்பிற்கு சரியாக காட்டப்படாது அவ்வொப்பந்தம் செய்யப்பட்டது.

13வது சீர்திருத்த சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும்தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட பார்வைக்காக வழங்கப்படவில்லை. இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே இது தொடர்பாக வீண் சந்தேகங்கள் எழுந்துள்ளன.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும். இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தான் தயங்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பரந்தனில் இளைஞர் படுகொலை – ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் !

பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு பின்னர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தை அவதானித்த அவருடைய மருமகன் அதனை தடுத்து நிறுத்தச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் சடலம் கையளிக்கப்பட்டிருந்தது.

சடலத்தை சுமந்துவந்த உறவினர்கள் தற்போது பரந்தன் சந்தியில் சடலத்தை வைத்து ஏ – 09 நெடுஞ்சாலையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பரந்தன் சந்திப் பகுதியில் பெரும் குழப்ப நிலை நீடிக்கிறது.

இதனால் ஏ – 09 நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மக்களுடன் சமரசத்தில் ஈடுபடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகின்ற போதிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரும் வரையில் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துவருகின்றனர்