18

18

அமெரிக்காவில் 5G தொழில்நுட்பம் – விமான நிறுவன அதிகாரிகள் அச்சம் !

அமெரிக்காவில் தொலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 G தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும் என்று விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 5 G தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தின் ஆல்டிமீட்டர் போன்ற கருவிகள் செயல்படுவது பாதிக்கப்படும் என்று அவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர்.

5 G அலைக்கற்றையின் ஊடுருவலால் கருவிகள் பாதிக்கப்பட்டால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செயற்கை நிலவை உருவாக்கி சீனா சாதனை !

மின் செலவை குறைப்பதற்காக செயற்கை சூரியனை சீனா அண்மையில் உருவாக்கி உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது.  இந்த நிலையில் உலகில் முதன் முறையாக  செயற்கை நிலவை சீனா உருவாக்கி சீனா இன்னும் புதிய பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் தெரிவித்த போது,

நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு.

புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு  நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமான சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில், இயற்கை நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன .

இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்து விடும். அதேவேளை ஒரு சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

 

“பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயரிடம் வழங்க வேண்டும்.” – ஞானசார தேரர்

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளை சமூக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது. பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடத்தப்படும் முறையொன்று உள்ளது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார். அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என கலன்கொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

“மக்களை உசுப்பேற்றாது இருங்கள்.” – இணைந்து செயற்பட தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு !

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை. அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டது. இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் இலாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரினார்.  வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து, அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிடம் கையளிக்கப்பட்டது தமிழ்கட்சிகளின் ஆவணம் !

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து இந்த ஆவணத்தை தயாரித்தன. இந்நிலையில் இன்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கோபால் பாக்லேவை சந்தித்த போதே குறித்த ஆவணம் இரா.சம்பந்தனால் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“ஜனாதிபதியுடன் பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை.” – இரா. சம்பந்தன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவராக பதவியேற்று இரு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாத இறுதி வாரத்தில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,

“ பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை எமக்கு வரவில்லை. பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தை அரச தலைவருடனான சந்திப்பின் நேரில் தெரிவிப்போம்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி சமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும். அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை. அனைத்துக் கருமங்களும் நல்லபடி அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.

10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு இலங்கையில் இருக்கின்றது !

எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு நாட்டில் இருப்பதாகவும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது எனவும் சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை கிடைப்பதன் காரணமாக இந்த வாரம் அரிசி விலைகளில் குறைவு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பிறப்பு விகிதம் ஐந்தாவது ஆண்டாகவும் சரிவு !

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
மேலும், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021-ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கணக்கு பார்க்க தெரியாத ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

ஜனாதிபதிக்கு கணக்கு பார்ப்பதற்கு தெரியாது போல் விளக்குகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கருப்பு பொங்கள் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி அவருடைய விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.

நான் நினைக்கின்றேன் ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்க தெரியாது போல் விளங்குகின்றது. விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூட பெற முடியாது என்பது ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இந்த நிலை தான் வரும் .

அதுபோன்று அவருடைய அல்லக்கைகள் இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது என தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரை காண ஆயிரக்கணக்கில் அலை மோதும் மக்கள் !

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நடத்தை புதிய  கொரோனா அலையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, ஆதாரங்களின்படி, ஓமிக்ரோன் மாறுபாடு இலங்கையில் பரவி வருவதாகவும் கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டம் கூடுவது தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, சமூக விலகல் இல்லாமல் உல்லாசப் பாதையில் நுழைவதற்கான முறைக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வளாகத்திற்குள்கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் நீண்ட வார இறுதியில் நடைபாதையில் நுழைந்த பெருந்திரளான மக்கள் முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர் பார்வைக்காக இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகர மெரினா நடைபாதை கடந்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.