20

20

உட்கட்சிப் போராட்டத்துக்காக தள கொமிட்டி பயணம்! பின்தளத்தில் பரந்தன் ராஜன் வெளியேற்றம்!!! – பாகம் 25:

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 25 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 25

தேசம்: தளத்தில் மாநாடு முடிந்து நீங்கள் 17 பேர் போறதுக்கு தெரிவு செய்யப்படுகிறீர்கள். என்ன மாதிரி அந்தப் பயணம் அமைந்தது? எப்படி போனீர்கள் எல்லாரும்? எல்லாரும் ஒன்றாக போனீர்களா அல்லது வெவ்வேறு படகுகளில் …

அசோக்: எல்லோரும் ஒன்றாகவே பயணம் செய்தோம் தளக் கமிட்டி 17 பேர், சென்றல் கமிட்டீ நாலு பேரில் தோழர் முரளி எங்களோடு வரவில்லை. அவருக்கு தனிப்பட்ட சில அலுவல்கள் இருந்ததால அதை முடித்துக் கொண்டு பின் தளம் வருவதாக சொல்லி இருந்தார். மற்ற படைத்துறைச் செயலாளர் கண்ணன், டெலோ பொபி, சந்திரன் பாதுகாப்புக்கு இரண்டு பேர். அதில் ஒருவர் டேவிட்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன்

அசோக்: ஓம். அவர்தான்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன் எந்த ஊரைச் சேர்ந்தவர்.

அசோக்: அது தெரியல எனக்கு. பின் தளத்தில்தான் இருந்தவர். இப்ப இங்க பிரான்சில்தான் இருக்கிறார். பயிற்சி பெற்றதற்கு பிறகு புதுக்கோட்டை பயிற்சி முகாமில் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவர் என்று நினைக்கிறேன். பின் தளத்தில் நடந்த நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும். ஏனென்றால் நிறைய பேருடன் உறவு வைத்திருந்தவர்.

தேசம்: இந்தக் காலகட்டத்திலும் நிறைய பேருடன் தொடர்பில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: புதுக்கோட்டை பயிற்சி முகாமில் 2 பேர் இருந்தவர்கள். இவர் ஒன்று மற்றது அகஸ்டின் ஜெபமாலை என்று சொல்லி ஜீவா. அவர் பயிற்சி பொறுப்பாக இருந்தவர். அவர் இப்ப ஜெர்மனியில் இருக்கிறார்.

தேசம்: அகஸ்டின் ஜெபமாலை?

அசோக்: அவரும் அம்பாறை மாவட்டபுளொட் பொறுப்பாளராக நான் இருந்த காலத்தில் தளத்தில் இருந்தவர்.

தேசம்: இந்தப் பயணம் என்ன மாதிரி போயிட்டு. எல்லாரும் ஒன்றாக போகிறீர்களா? என்ன மாதிரி?

அசோக்: இது ஒரு மோசமான பயணம். மன்னாரில் இருந்து நாங்கள் ஸ்பீட் போட்டில் போறது என்றுதான் முடிவெடுத்தது. ஸ்பீட் போட் கிடைக்கவில்லை எங்களுக்கு. மாதகலிலிருந்து போற பயணங்கள் ஒரு அளவுக்கு பாதுகாப்பானது. ஸ்பீடு போட்டில் போயிடலாம். மன்னாரில் ஸ்பீட்போட் கிடைக்காதபடியால் ரெண்டு மூன்று நாள் அங்கு தங்கிட்டம். ஸ்பீட் போட் தேடிக்கொண்டு. அந்த நேரம் புளொட் பெருசா அதிலே இண்ட்ரஸ்ட் காட்டேல எங்களுக்கு போட் தாறதில. பிறகு தனியார் படகு ஒன்று எடுத்து ரோலர் எடுத்துதான் நாங்கள் மன்னாரிலிருந்து கிளம்புறோம்.

தேசம்: 17 பேரும் ஒன்றாக தான் போகிறீர்கள் எத்தனை பேர் எல்லாமாக பாதுகாப்புக்கு வந்தவர்கள்…

அசோக்: எல்லோருமாகச் சேர்ந்து 25 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய ரோலர் மீன்பிடி ரோலர் தெரியும் தானே. ஆனா ஸ்பீடா போகாது. மிக ஸ்லோவாக தான் போகும். பெரிய ஆபத்தான பயணம் இது. ஏனென்றால் எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ரெண்டே ரெண்டு துப்பாக்கிகளோடுதான் அங்க பாதுகாப்புக்கு வந்தவங்க என்று நினைக்கிறேன். அடுத்தது பகல் நேரப்பயணம். ஆபத்தானது.

தேசம்: கடற்படை வழிமறிச்சா சிக்கல் தான் என?

அசோக்: நேவியின் அந்த அந்த ஸ்பீடுக்கு இவங்களால ஓட இயலாது. ரெண்டு மணிக்கு கிளம்பினாங்க .ரோலர் ஓடியோடி போய் இரவு பட்டபின் சேர்ந்து விட்டோம். அதிர்ஷ்டவசமாக போய் சேர்ந்து விட்டோம்

தேசம்: இவ்வாறு தான் இந்த பயணங்கள் அமைகிறதா? 25 பேர் ஒரே நேரத்தில போறது என்பது…

அசோக்: அப்படி ரோலரில் போறது முட்டாள்தனமான வேலை. யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்களை பயிற்சிக்கு அனுப்பும்போது ஸ்பீட் போட்டில்தான் அனுப்புவோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண கரையோரங்கள் டெலோ – எல் ரீ ரீ ஈ பிரச்சனைகளால் புலிகளின்ற கண்காணிப்பு இருந்தது. டெலோ தோழர்களை கொண்டு பயணம் செய்வது ஆபத்தானது. அத்தோட நாங்களும் தனியப்பயணம் செய்ய தயங்கினோம். புலிகள் ஏதும் செய்வார்கள் என்ற பயம் இருந்தது.

தேசம்: ஏன் அந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஸ்பீட்போட் எடுக்க முடியாமல் போனது?

அசோக்: அந்த நேரத்தில் மன்னாரில் புளொட்டிலும் பெரிய ஸ்பீட் போட் இல்லை என்று நினைக்கிறேன். புளொட்டில் கேட்டபோது அந்த நேரத்தில் தங்களிடம் ஸ்பீட்போட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அடுத்தது நாங்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்த, பின் தள மாநாடு நடத்த பின் தளம் போகிறோம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தேசம்: ஆனால் கண்ணனும் வந்தது அதில். கண்ணனுக்காகவாது பாதுகாப்பு கொடுக்குற முயற்சியை அந்த நேரம் மேற்கொண்டிருக்கலாம். ஒன்றுமே இல்லை. கண்ணன் தானே படைத்துறைச் செயலாளர்?

அசோக்: கண்ணன் படைத்துறைச் செயலாளர் அவருக்கே இந்த நிலை என்றால்…

தேசம்: அப்போ அவ்வளவு மோசமான போக்கு ஒன்று இருந்திருக்கு. என்ன சொல்லுறது …

அசோக்: ஒரு சுவாரசியமான விடயம் சொல்ல வேண்டும். நாங்கள் தளமாநாட்டில் பின்தள படுகொலைகள் பற்றி பின்தள செயற்பாடுகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம் தானே, அப்போ கண்ணன் கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் எங்களுடைய எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொண்டவர்.

தேசம்: அதற்கு பின்பு வருவோம் நாங்கள். இப்ப போட்ல போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். போய் சேர்ந்தா எப்ப மாநாடு நடக்குது? போட்டுக்குள்ள ஏதாவது கருத்து பரிமாற்றங்கள்?

அசோக்: அந்தப் பயணம் மோசமான பயணம் என்றாலும் மிகவும் கலகலப்பான பயணம். எல்லோரும் ஒத்த கருத்துக் கொண்ட தோழர்கள்தானே. கண்ணனும் கூட எங்களோடு உடன்பாடு கொண்டவராகத்தான் இருந்தார். தள மாநாட்டில் எங்களுடைய கருத்துடன் முழுக்க முழுக்க உடன்படுகிறார். புளொட்டுக்குள்ள படுகொலை நடந்தது என்று சொல்லியும் படுகொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் அதற்கு முழுக்க முழுக்க உமா மகேஸ்வரனும் உளவுத்துறையும் சங்கிலியும் தான் பொறுப்பு என்று சொல்லியும் ஒத்துக்கொண்டார்.

தேசம்: அவர் ஒத்துக் கொண்டது படகுக்குள்ள நடந்த உரையாடலிலா?

அசோக்: இல்லை இல்லை தளமாநாட்டில் பப்ளிக்கா. தள மாநாட்டில் நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் இருக்குதானே தலைமை மீது. அதற்கு முகாமில் நடந்த கொலைகளுக்கு தனக்கு தொடர்பில்லை என்று சொல்லிட்டார். தனக்கு தொடர்பு இல்லை என்று சொல்லியும் கட்டாயம் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும், பின் தளத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற எங்க நிலைப்பாட்டிக்கு ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அப்போ அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் படைத்துறைச் செயலாளர் தானே…

அசோக்: அவருக்கு எந்த அதிகாரமும் பின் தளத்தில் இல்லை.

தேசம்: அவர் வெளியேறியவர்கள் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தவர்?

அசோக்: நாங்க வெளியேறினதற்குப் பிறகு, பின் தளத்தில் நிறையத் தடவைகள் நான் சந்தித்திருக்கிறேன் கண்ணனை. இயக்கம் தொடர்பாக முழுக்க முழுக்க அதிருப்தியோடு தான் இருந்தவர். நாங்க வெளியேறியது தொடர்பாக அவருக்கு மனவருத்தமும் விமர்சனங்க களும் இருந்தன.

ரகுமான் ஜான், கேசவன் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் ஒரு ஆரோக்கியமான போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி இருந்தால் இயக்கத்தை சரியான வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் அவரிடம் இருந்தது.

தேசம்: உண்மையிலேயே ஆரோக்கியமான சக்திகள் நிறைய பேர் இருந்தும் அந்த ஆரோக்கியமான சக்திகளுக்கு இடையில் ஒரு…

அசோக்: ஒருங்கிணைப்பு இல்லை. உரையாடலும் நடக்கலை. ஏனென்றால் கண்ணன் நிறைய அதிருப்தியோடு இருந்தது எனக்கு தெரியும். தனிப்பட்டமுறையில் என்னோடு கதைப்பார். ஆனால் வெளிப்படையாக கதைக்க மாட்டார். தன்னுடைய படைத்துறைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தானும் கொலைசெய்யப்படலாம் என்ற பயம் இருந்தது. பின் தளத்தைப் பொறுத்தவரை உங்களுடைய பதவி என்பது வெறும் பொம்மை. படைத்துறை செயலாளராக இருந்தால் என்ன, அரசியல் துறைச் செயலாளராக இருந்தால் என்ன முகுந்தனும் அவருடைய உளவுத்துறையும் நினைத்தால் யாரையும் கொலை செய்யலாம். அங்க அதிகாரம் என்பது உளவுத் துறைக்கும் முகுந்தனுக்குமானது தான்.

தேசம்: இல்லை பொதுவாக இந்த ராணுவ கட்டமைப்புகளை பார்த்தீர்கள் என்றால் இப்படியான இந்த அதிகாரங்கள் வந்து குவியுறது குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தான் நடக்கும். ஒரு அமைப்பு வந்து மெது மெதுவாக வளர்ச்சியடைந்து பெரிய அமைப்பாக வரேக்க சில ஆண்டுகளுக்குப் பிறகு அது கொலை இயந்திரமாக மாறும். இது நீங்கள் ஐந்து பேர் சேர்ந்து தொடங்குகிறீர்கள். அது பார்த்தா ஆறு மாதத்திலேயோ ஏழு மாதத்திலேயோ நீங்கள் கொலைஞர்களாக மாறுகின்றீர்கள் என்றால் இது ஒரு பெரிய கால இடைவெளி இல்லை தானே.

அசோக்: கால இடைவெளி என்றால்…

தேசம்: 83 க்கு பிறகு தானே இது எல்லாம் ஆரம்பிக்குது.

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி…

தேசம்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி என்றால் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதத்திற்குள்ளேயே இந்தப் பிரச்சினை வருது. இத்தனைக்கும் புளொட்டுக்குள்ள ஆயுதமும் இருக்கேல. ஆயுதம் வந்து ஒரு கொஞ்ச காலம் தான். மற்றது இதுக்குள்ள இருந்த ஆட்கள் எல்லாம் ஏதோவொரு வகையில் பயிற்சி எடுத்தவர்கள் ஒத்த சிந்தனையோடு இருந்தவர்கள். இவர்களுடைய அக்கறையின்மையா இத்தனைக்கும் காரணம்?

அசோக்: நீங்கள் சொல்லுவது சரி. முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்ப காலத்திலேயே சின்ன சின்ன அதிருப்திகள் முரண்பாடுகள் பிரச்சனைகள் வரேக்கையே பேசித் தீர்த்திருக்க வேண்டும். நான் முதலே சொல்லிருக்கிறேன் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உரையாடல் அவசியம். அந்த உரையாடல் இருக்கல. முரண்பட்ட உடனே முரண்பாடு கூர்மையடைந்து கொண்டு போனதேயொழிய தீர்ப்பதற்கான எந்த வழியும் இல்லை .ஏனென்றால் முரண்பாட்டுக்கு ஊடாக குழு வாதம் உருவாகிவிட்டது. அந்தக் குழு வாதம் எங்க உருவாகுதோ அங்க முரண்பாடுகள் பெரிதாகும்.

முதல்ல எல்லா பேரும் ஒரு சினேகபூர்வமாக வாற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள் என்றால் அங்க இந்த உளவுத்துறையினுடைய அதிகாரம், நடவடிக்கைகளை எல்லாத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்த உரையாடலில் இதைப்பற்றி முன்னமே நிறைய கதைச்சிருக்கம்.

தேசம்: இந்த பிரச்சனைக்காக தானே பிரபாகரனில் இருந்து இவர்கள் வெளியில வாறினம்.

அசோக்: பிரபாகரன் மீது அதாவது புதிய புலிகள் பிறகு புதிய பாதை பிறகு விடுதலை புலிகள் பிறகு புளொட் இந்த வரலாற்றை பார்த்தீர்களென்றால் எல்லாம் ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தான் வருது. அரசியலற்ற ஒரு தனிநபர் பயங்கரவாத கண்ணோட்டத்தில் தான் உருவாக்கம் பெறுகிறது. இந்த தனிநபர் பயங்கரவாதத்தை யார் முன்னெடுத்து செய்றது, யாரிடம் அந்த அந்த அதிகாரம் இருக்கு என்பதுதான் பிரச்சனையேயொழிய எல்லா வகையிலும் நாங்கள் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமென்றால் எங்களுடைய போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதத்தின் ஊடாகத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. எந்த அரசியலும் இல்லை. எந்தவொரு ஜனநாய அமைப்பு வடிவங்களும் இருக்கவில்லை.

தேசம்: ஏனென்றால் புளொட்டில் இருந்த இந்த தலைமைகளைப் பார்க்க இவர்களுக்கு விடுதலைப் புலிகளையோ பிரபாகரனையோ விமர்சிக்க எந்த ஒரு தார்மீக நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட அதே போக்கைத் தான் கடைப்பிடிக்கினம் பிறகும்.

அசோக்: அதிகாரம் கிடைத்தால் புளொட்டும் ஒன்றுதான் புலிகளும் ஒன்றுதான். புளொட் தத்துவார்த்த கோட்பாட்டோடு கொலை செய்திருப்பார்கள். புலிகள் தத்துவார்த்த கோட்பாடற்று கொலை செய்திருப்பார்கள். எங்களுக்கு முலாம் பூசுவதற்கு ஒரு தத்துவார்த்த கோட்பாடு இருந்தது தானே சில நேரம் கொலைகளை செய்து போட்டு தத்துவ முலாம் பூசியிருப்போம்.

தேசம்: ஆனால் சங்கிலியன் செய்த படுகொலைக்கு நீங்கள் எப்படி அந்த தத்துவக் கோட்பாட்டை பாவிக்கிறது?

அசோக்: அதுதான் முகுந்தனின் சாணக்கியம். தோழர் சந்ததியாரை கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு எதிரான ஆள் என்று ரோவிடம் போட்டுக் கொடுத்தார். உண்மையில் முகுந்தன் தொடர்பாக ஒரு நேர்மையான விமர்சனம் வைப்போமானால் அவரை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. முகுந்தன் விசுவாசிகளாக இருந்த பலர் இந்த கொலைகளை நியாயப்படுத்த முகுந்தனுக்கு உதவினாங்க. உதாரணமான டெல்லியிருந்து ரோவுக்கும் புளொட்டிக்கும் டபுல் ஏஜென்சியாக இருந்தவர்கள் முக்கியமானவர்கள். புளொட்டின் அழிவுக்கு இவர்களும் ஒரு காரணம். பிறகு இது பற்றி கதைப்பம்.

தேசம்: இந்த மாநாட்டை சொல்லுங்கள். நீங்கள் போய் எத்தனை நாளில் மாநாடு நடந்தது? அல்லது நீங்கள் போக உங்களுக்கான வரவேற்பு…

அசோக்: வரவேற்பு பெரிய சந்தோசமாக இல்லை. நாங்கள் போய் மன்னாரில் இருந்து வேதாரணியத்துக்கு போறோம். அங்கிருந்து ஒரத்தநாட்டிக்கு போறம். அங்க போன உடனே தளத்தில் இருந்து வந்த 17 பேருக்கும் மத்திய குழு உறுப்பினர்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது வந்து ஒரத்த நாடு புளாட் ஆபீஸ் இருக்குக்கும் இடத்திலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் உள்ளுக்க இருக்கிற கிராமத்தில் நாங்க தங்குவதற்கு ஒரு இடம் ஒழுங்கு பண்ணி தந்தாங்க. அங்கு பஸ் போக்குவரத்து ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு ஒன்று வரும். அந்த கிராமத்தில வீடொன்று எடுத்து எங்களை தங்க வைத்து, எங்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் கண்காணிப்பு.

தேசம்: யார் உங்களுக்கு பாதுகாப்பு தந்தது…

அசோக்: அது சங்கிலி ஆட்கள்தான் போட்டது. ஆனால் எங்களுக்கு தெரியும் அது எங்களுக்கான ஒரு பொறி , எங்களை கண்காணிக்க உளவுத் துறையால் போடப்பட்டது என்று. அங்க இருந்து ஒவ்வொரு குரூப்பா ஐந்து பேர் ஆறு பேர் சேர்ந்து முகாம்களுக்கு போவதற்கான அனுமதி கேட்டனாங்கள். முதல்லில் முகுந்தன் அனுமதி தரவில்லை. பிறகு சில நாட்களுக்கு பிறகு அனுமதி தந்தார். தள செயற்குழுவும் நாங்களும் போய் முகாம்களை பார்வையிடலாம் என. முகாம்களுக்கு போய் முகாம்களை பார்வையிட்டு நாங்கள் தளத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று தளத்தில் நடந்த மாநாட்டு பிரச்சனை எல்லாம் சொல்லி, இங்கே ஒரு தள மாநாட்டுக்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம். தோழர்கள் எங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த ஆதரவு காட்டினாங்க…

தேசம்: அதற்கு உமாமகேஸ்வரன் அனுமதி கொடுத்தவரா?

அசோக்: உமாமகேஸ்வரன் முகாம்களைப் பார்வையிட மட்டும்தான் அனுமதி கொடுத்தது. முகாம்கள் தொடர்பாக அதிருப்தி இருந்தது தானே. அப்போ முகுந்தன் சொல்லுச்சு உங்களுக்கு அதிருப்தி இருந்தால் நீங்கள் போய் பார்க்கலாம் அங்க எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று. முகுந்தன் எதிர்பாக்கல தளத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இங்க போய் ஒரு பிரச்சாரமாக மேற்கொள்ளுவோம் என்று.

தேசம்: அது ஓரளவுக்கு எதிர்பார்க்கக் கூடியது தானே அவ்வளவு முட்டாள் இல்லை தானே முகுந்தன். ஒன்றில் அவர் சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் ஒருத்தரும் கதைக்கக் கூடாது என்று. அப்படி சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்ப அவர் எதிர்பார்த்து தானே இருப்பார்.

அசோக்: எதிர்பார்த்தாரோ தெரியாது, ஆனால் அதற்குப் பிறகு முகாம்களுக்கு போவதற்கான தடை வந்துவிட்டது. அந்த நேரத்தில் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிட்டார்கள் தானே. வெளியேறினதற்குப் பிறகு முகாங்களுக்குள் கதை பரவிட்டது இவங்க ஒரு குரூப் வெளியேறிவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு ராஜனோடு ஒரு குரூப் உடைந்து போய்விட்டது. தளப்பிரச்சனைகள் பற்றி தோழர்களுக்கு பெரிசாக தெரிந்திருக்கவில்லை.

தேசம்: பரந்தன் ராஜன்…

அசோக்: ஓம். ராஜன் பாலஸ்தீன பயிற்சி முடித்து வந்த பின் பின்தள நிலைமையை பார்த்து முகுந்தனோடு கடும் பிரச்சனை. முக்கிய பிரச்சினை என்று கேட்டால் காக்கா சிவனேஸ்வரன் என்று உடுவிலைச் சேர்ந்த தோழர் படுகொலை பற்றி …

தேசம்: அவர் எப்ப படுகொலை செய்யப்பட்டவர்?

அசோக்: சரியாக காலம் ஞாபகம் இல்லை. இந்த கொலை சந்ததியார் கொலைக்கு முன்னமே நடந்துவிட்டது.

அப்போ ராஜன் கடும் பிரச்சினை. ஏனென்றால் ராஜனுக்கு மிகத் தெரிந்த நெருங்கிய தோழர் அவர். பிறகு ராஜனுக்கும் முகுந்தனுக்கும் நிறைய முரண்பாடுகள் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜன் வெளியேறி விடுகின்றார். காலப் போக்கில் ராஜனோடு நிறையதோழர்கள் வெளியேறிப் போயிற்றாங்க. நாங்கள் பின்தளம் போகும்போது ராஜனோடு 300-350 தோழர்கள் கேம்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

மத்தியகுழு உறுப்பினர்களான ஆதவன், செந்தில், பாபுஜீ மற்ற முக்கிய தோழர்களும் குறிப்பா PLO ராஜா, PLO காளித் ஐயா, விஜி, மெக்கன்ரோ, சுரேஸ் போன்றவர்களும் ராஜனோடு சென்றுவிட்டார்கள். முகாம்களில் தோழர்கள் பெரும் குழப்பத்தோடுதான் இருந்தாங்க. புளொட்டை விட்டு முன்னரே வெளியேறி இருந்த டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம், யூலி, துளசி, தங்கராஜா தோழர் இவங்க எல்லோரும் ராஜனுக்கு சப்போர்ட்பண்ணிக் கொண்டிருந்தாங்க.

கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களுக்காக நாட்டின் கதவுகளை திறந்தது அவுஸ்திரேலியா !

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் எதிர்பார்ப்புடன் உள்ள மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் விஸா கட்டணத்திற்கு விசேட சலுகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டிற்குள் வருகைத் தருவதை ஊக்குவிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp மூலம் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா கமலா ஹாரிஸ் . ? – ஜோ பைடன் பதில் என்ன.. !

அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவின.

கடந்த மாதம் கமலா ஹாரீஸ் அளித்த பேட்டியில் 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவாரா? என்று கேட்டதற்கு, நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. நாங்களும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நிருபர்கள் அதிபர் தேர்தலில் உங்களுக்கு போட்டியாக கமலா ஹாரீஸ் வருவாரா? என கேட்டனர். அதுபற்றி ஜோபைடன் கூறும்போது, கமலா ஹாரீஸ் தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என நினைக்கிறேன்.

அதிபர் தேர்தலில் எனக்கு அவர் போட்டியாக இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

தேவாலயத்திலும் , வைத்தியசாலையிலும் வெடிகுண்டு வைத்த 75 வயது வைத்தியர் – மனைவி மீதான காதல் தான் காரணமாம் !

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் குறித்த தேவாலயத்தின் மீது வெறுப்புடன் இருந்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு இதற்கு முன்னர் கைக்குண்டொன்று வைக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு வைக்கப்பட்டமை குறித்து, கைதுசெய்யப்பட்டுள்ள ஓய்வூப் பெற்ற வைத்தியர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

1974ம் ஆண்டு தான் பௌத்த பெண்ணொருவரை, பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது மனைவி பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதனால், குறித்த தேவாலயத்திலிருந்த பாதிரியார், தனக்கு காலை நேர திருப்பலி ஒப்புக் கொடுத்தலை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமையினால், அது தொடர்பில் தான் மனவேதனையுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனாலேயே, குறித்த தேவாலயத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, குறித்த வைத்தியர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் இதன்போது விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது மனைவி கவலைக்கிடமாக இருந்த சந்தர்ப்பத்தில், அவரை கொம்பனிதெருவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்க முயற்சித்த போதிலும், தனது மனைவியை அனுமதிக்க வைத்தியசாலை மறுப்பு தெரிவித்துள்ளதாக அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.

இந்த நிலையில், நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த வைத்தியசாலையினால், தனது மனைவிக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டமையினால், வைத்தியசாலைக்கு பிரசாரத்தை வழங்கும் நோக்கில், கைக்குண்டை வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக தான், கைக்குண்டை வைத்த நபருக்கு இடைக்கிடை பணம் வழங்கி வந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். தனது மனைவியின் மீது கொண்ட காதல் காரணமாக, அவர் உயிரிழந்ததன் பின்னர், அவரின் அஸ்தியின் ஊடாக தயாரிக்கப்பட்ட மோதிரம் ஒன்றையும், குறித்த வைத்தியர் தனது விரலில் அணிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆலய திருவிழாவில் தீமிதித்த இளம்தாய்க்கு நடந்த சோகம் – கொழும்பில் கடவுளின் பெயரால் ஓர் உயிர்பலி !

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்றும் அவர் 10 வயது குழந்தையின் தாயார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீமிப்பில் பங்கேற்ற அந்தப் பெண்ணின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தீக்காயங்களுக்கு சிகிச்சைப் பெறாமல் வீட்டில் இருந்த அந்த பெண் மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா முகக்கவசங்களுக்கு goodbye சொல்கிறது இங்கிலாந்து !

சுமார் 2 வருடங்களாக கொரோனா உலகை முழுமையாக உலுக்கி வருகின்ற நிலையில் அதனுடைய வீரியம் குறைந்தபாடில்லை. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள் முறையாக இதனை ஒரளவு கட்டுப்படுத்தியுள்ளன. முக்கியமாக கொரானா கட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்து அரசு அந்நாட்டு பிரஜைகளுக்கு மகிழ்வான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்துள்ள இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் “இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முதல் நிறைவுக்கு வருமென தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் கடவுச்சீட்டு இரண்டும் கைவிடப்படும்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் உடனடியாக கைவிடும் என்றும் பிரதமர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசிகள் காரணமாக இங்கிலாந்து ‘பிளான் -ஏ’க்கு திரும்புகிறது மற்றும் மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

ஓமிக்ரோன் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ‘இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும் போது இந்த நாடு என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது’ என கூறினார்.

உண்மையிலேயே ஜனாதிபதி கோட்டாபாய நடனமாடினாரா..? – வைரல் வீடியோ தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நடனமாடுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து – மக்கள் வறுமையின் பிடியில் துன்பப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் தலைவர் நடனமாடிக்கொண்டிருக்கிறார் என்ற தொனியிலாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

இந்த வீடியோவின் நடமாடுபவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஜனாதிபதி செயலக தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவரே, இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டு, நடனமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பொறுப்புடன் செயற்படுங்கள்.” – மைத்திரி தரப்புக்கு நாமல் அறிவுரை !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு கட்சி என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அவை அமைச்சரவைக் கூட்டத்திலோ, அரசாங்கக் கட்சிக் கூட்டத்திலோ அல்லது கட்சித் தலைவர்களின் கூட்டத்திலோ மாத்திரமே விவாதிக்கப்பட வேண்டும். அரசியல் தலைமைகள் இதனை கவனத்திற்க் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தற்போதைய நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​

பொது மக்கள் தனிநபர்களை ஆட்சி செய்வதற்கு வாக்களிக்கவில்லை எனவும், தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரின் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்படுவதை பிரஜைகள் அறிவார்கள் என்றும் . அரசாங்க அரசியல்வாதிகள் என்ற வகையில் கருத்துக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் அவர்  தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாகப் போட்டியிடுவது குறித்த தீர்மானது தமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விருப்பம் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவின் மிகவும் வங்குரோத்து நாடாக இலங்கை !

கடந்த இரண்டு வருட கால ஆட்சியில் இலங்கை வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்,

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுக் கையிருப்பு வளர்ந்துள்ளது.  அதற்குக் கீழே இலங்கை இருக்கின்றது. இன்று தெற்காசியாவிலேயே மிகவும் வங்குரோத்து நாடாக இலங்கை மாறியுள்ளது.

இந்த வருடமும் இந்த ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார். நிச்சயமாக. எனவே, இனியும் மக்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ள முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கூட வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்துள்ளது.

தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 79 வீதத்தால் குறைந்துள்ளது. இரண்டு வருடங்களாக நாடு வங்குரோத்தாகி விட்டது. இரண்டு வருட ஆட்சி நாட்டுக்கு சாபமாகிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.