இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஆகஸ்ட்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.
ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாணமன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.