2010

2010

வடமாகாணத்தில் 30 தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்க நிறுவனங்கள் தயார்:

இலங்கையின் வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை அமைக்க 30 அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி வருவதாக அமெரிக்க தெற்காசிய பிராந்திய வர்த்தக கட்டமைப்பின் பிரதிநிதி மைக்கல் டெலணி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களின் தொகை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வடமாகாணத்தின் முதலீட்டுக்கான வாய்ப்புகள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று செவ்வாய் கிழமை அமெரிக்க முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடனும் யாழ்ப்பாண பொதுமக்களுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகின்றது. அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கும் இலங்கையின் வெற்றிக்காக அமெரிக்கா பக்கபலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அமெரிக்க நிறுவனங்கள் வடக்கில் தொழிற்சாலைகளை அமைக்கும் போது பல்லாயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் காணாமல் போன சிறுவர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் காணாமல் போன சிறுவர் சிறுமிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 639 சிறுவர் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் பெற்றோரை விட்டுப் பிரிந்தும் பெற்றோரை இழந்தும் உள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெற்றோர், உறவினர்களின் முறைப்பாடுகளை அடுத்து 13 சிறுவர்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாட்டில்.

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகளை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வந்துள்ளது. இவ்வகையில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இராசாயனக் கூட்டுத்தாபனம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியன உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை என்பனவற்றை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை புனரமைக்கும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெறும் கைத்தொழில் கண்காட்சியில் யாழ்.பிரதிநிதிகள்:

சீனாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் துறையைச் சேர்ந்த 12 பேரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இக் கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று புதன்கிழமை பயணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

சீனாவின் ஹட்டன நகரில் எதிர்வரம் 15அம் திகதி தொடக்கம் 21அம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியில் பெறப்படும் அறிவு, அனுபவத்தினூடாக யாழ். மண்ணில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதே தமது நோக்கம் என இங்கிருந்து இக்கண்காட்சியில் கலந்து கொள்ள செல்லும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உடையார்கட்டில் புலிகளின் விமானக் குண்டுகள் மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குளக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் நிலத்தடி பதுங்குகுழி ஒன்றிற்குள்ளிருந்து புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. புலிகளின் வான்படைப் பிரிவிற்குச் சொந்தமான 75 கிலோ, 50 கிலோ நிறைகளையுடைய 11 விமானக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு அடி நிளம், இரண்டரை அடி அகலம் கொண்ட நான்கு விமானக் குண்டுகளும், அதே அளவையுடைய 50 கிலோகிராம் எடையுள்ள ஏழு விமானக் குண்டுகளும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப்புலிகள் தங்கள் இலகு ரக விமானத்தில் இத்தகைய குண்டுகளையே பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடைவ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளிக்கச் சென்ற பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 1.30 மணியுடன் ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் முன்னாள் பிரஜைகள் குழுத்தலைவர் கதிர் பாரதிதாசன் நல்லிணக்க ஆணைக்கழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்.

விசுவமடுவில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற பாலியல் வல்லுறவு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் எதிரான வழக்கு விசாரணை நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. மேல் விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்குவதாக கூறிய நீதவான் நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கிளிநொச்சி விசுவமடுவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சில நாட்களின் பின்னர் வீட்டில் தனியாகவிருந்த இரு பெண்கள் மீது பாலியல் வல்லறவு புரிந்ததாக நான்கு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது சகோதரன், பெண்ணின் பத்து வயது மகன் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக சாட்சியமளித்தனர்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள் கிழமை மாலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ். செயலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைச்சர் டகளஸ் தேவானந்தா தலைமை வகித்தார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்கள் மாவட்டங்களின் பிரச்சினைகளை விளக்கிக் கூறுவதற்கு ஒவ்வொரு அரச அதிபருக்கும் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், நாளை புதன்கிழமை வவுனியாவிற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வரவுள்ளதாகவும், அபிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வந்துள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் தொழில் வாய்ப்பு தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிதை நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் நேற்று திங்கள்கிழமை யாழ். போதனா வைத்திசாலைக்குச் சென்று தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒரு குழுவினர் மல்காந்தி என்பவர் தலைமையில் யாழ். வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி அவர்களைச் சந்தித்து தங்கள் பெயர் விபரங்கள், கல்விச்சான்றிதழ்கள் என்பவற்றைக் காட்டி தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கும் பணியினை சுகாதார அமைச்சுத்தான் மேற்கொள்ளும் என வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு விளக்கமளித்து அனுப்பிவைத்ததாகவும் தெரியவருகின்றது.

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

Imelda_Sugumar_GA_JaffnaUoJ_Signboardயாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 11 (நேற்று) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இமெல்டா சுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே என்றுமில்லாதவாறு இத்தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் இப்பாரிய குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டு உள்ளார்.யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதம் யூலை 01 2010 முதல் தேசம்நெற் இல் இடம்பெற்று வருகின்றது. இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட பல்வேறு சீரழிவுகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளமை தெரிந்ததே. அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் சீரழிவையும் கல்வித் தகமையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முடிவுகட்ட இவை தொடர்பான உடனடியான சுயாதீன விசாரணைக்கு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உத்தரவிட வேண்டும். இவ்வாறான ஒரு விசாரணைக்கு யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்தில் அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான ஆதரவளிக்க வேண்டும். இவற்றின் மூலமாக மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சீரழிவுக்கு முடிவு கட்டுவதுடன் யாழ் பல்கலைக்கழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும்.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரையாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர் என சுவரொட்டிகளை ஒட்டியது தெரிந்ததே. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் வெளியான சுவரொட்டி

”இறுதி எச்சரிக்கை

போரின் கோரப்பிடியில் சிக்கி தமது வாழ்வைத் தொலைத்த உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்த வன்னி மக்கள் அலல்படும் வேளையில் தமது கலாச்சார விழுமியங்களை சீர்குலைக்கும் ஒரே நோக்கமாகவும் சமூக நிறுவனமான யாழ் பல்கலைக்கழகப் பெயரைக் குலைக்கும் நோக்கமாகவும் சில விரிவுரையாளர்களின் நடத்தை காணப்படுகிறது. குறிப்பாக மாணவிகளை வற்புறுத்தி தமது காம இச்சைகளை தீர்த்து வருகின்றனர். ஆலயம் போல் காணப்படும் இப்பல்கலைக்கழகத்தினதும் எமது சமூகத்தினதும் கலாச்சாரத்தினைச் சீரழிக்கும் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இவர்களது இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் சில காலப்பகுதியினுள் உங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும். இது உங்களுக்கு நாங்கள் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இதனை நீங்கள் அலச்சியப்படுத்தினால் உங்கள் மனைவிகள் விதவையாவதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே கீழ் குறிப்பிடப்படும் விரிவுரையாளர்கள் உடனே இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

இளங்குமரன்
விசாகரூபன்
நவரத்தினம்
அருந்தாகரன்

எச்சரிக்கைகளை அலச்சியப்படுத்தினால் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்க முடியாதது.

மாணவர் சமூகம்
யாழ் பல்கலைக்கழகம்.”

இச்சுவரொட்டி ‘மனைவிகள் விதவையாக்கப்படுவார்கள்’ போன்ற கடுமையான தண்டனைகளைக் குறிப்பிட்டிருந்த போதும் இது மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இந்த எச்சரிக்கையை ஒருவழிமுறையாகவே பயன்படுத்தி உள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மௌனமாக தமக்குள் அழுகின்ற பல நூற்றுக் கணக்காண மாணவிகளின் வாழ்நிலையை எதிரொலித்து உள்ளார். முன்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டு இருப்பதையும் அரச அதிபர் உறுதிப்படுத்தி உள்ளார். பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர் இதனைத் தனக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரச அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.
 
அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அண்மைக் காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக் காலங்களில் வேகமாக அதிகரித்து இருக்கின்றமை அதிர்ச்சியை தருவதாயும் அரச அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரச அதிபருடைய இக்குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கான காலகட்டத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிபர் குற்றம்சாட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் போன்றோரே மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்ற உபவேந்தருக்கான பதவிகளிலும் போட்டியிடுகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டப்படும் கலைப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமாரன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சத்தியசீலன், தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஸ்தாபனமயப்படுத்த காரணமாக இருந்ததுடன் இவர்களே இவ்வாறான பாலியல் மற்றும் நிர்வாகத் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் மூலம் யாழ் பல்கலைக்கழக பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கு இதுவே சிறந்த தருணமாக உள்ளது.

யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் பற்றி தேசம்நெற்க்கு கருத்து வெளியிட்ட யாழ் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கபொத உயர்தர மாணவிகள், ‘நாங்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கே படிக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கதைகளை மூத்த சகோதரிகள் சொல்வதை கேட்டால் பயமாக இருந்தது. அங்கு செல்வதற்கு பயந்தே இருந்தோம். அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இது வந்தது ஆறுதலாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்