01

01

புத்தாண்டில் புதுயாகம்: நோர்வே நக்கீரா

2010.jpgபுத்தாண்டில் புதுயாகம்

கந்தகக்காற்று ஊர்கோலம் போனது
யார் யாரோ அரக்கர்களால் – எம்தேசம்
கேவலம்…போர் கோலமானது.

பட்டாசு வெடிக்க
சட்டமில்லை என்று
பாதுகாப்புச் சட்டம் போட்டது
சமாதான நாடு.
சங்காரம் செய்யும் அழிவாயுதப்படையலின்
பிரமாக்கள் என்று
அகிலச்சான்றிதழ் பெற்றது- எம்
நோர்வேயிய நாடு.

யாகம்…விஸ்வாமித்திர யாகம்
விஸ்வமான மித்துருக்களால்;
சத்துருக்க போர் யாகம்.

யாகம் போகம் மாறியும்
தாகம் தாகமென
தியாகம் தியாகமாக -காகம்
கல்லுச் சேர்த்ததே தியாகமானது
வேள்வி…கேலியாகி…கேள்வியானது போ.

அன்று…யாகம் காக்க இராம இலக்குவர்
இன்று எம்மைக்காக்க….யார் சிக்குவர்?
இலங்கையில் இராமாயணம்
இறப்பதே இல்லையோ?

துப்பாக்கிகளுடன் தூங்கி எழுந்து
குண்டுகளிடையே குறுக்கே விழுந்து
ஊரைக்காத்த உத்தம உயிர்கள்
வன்னிமக்களாய்
வனத்தினுள் வதங்கிப் போவதோ?

வெட்டிய தலைகள் மண்ணில் வீழவுமில்லை
வேட்டுவிழுந்து உடலிலுயிர் பிரியுமில்லை
உதிரம் சொட்டும் வாளுடன் வந்து
வோட்டுக்கேட்டு வருடம் பிறக்குதே!
மனிதம் மறந்து வாழ்வு சிறக்குமோ?

தமிழன்…தமிழன் என வேதம் ஓதி
ஈழம்…ஈழம் என்று எண்ணை ஊற்றி
வேளம் வந்து வேவுபார்க்க
சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது.
மிருகம் தூக்கிய மிருகத்தியாகம்
போகமின்றி மிருகமாய் போனது போ…!

தாகம்…தாகம் எனத்தண்ணீர்தேடி
காகம் கல்லைச் சேர்த்ததே மிச்சம்.
இனியும் வேண்டாம் பகைமையின் எச்சம்.
மனிதம் வாழ்ந்தால் அமைதி நிச்சயம்.

பிறக்கும் வருடம் சிறப்பாய் பிறக்க
வீழ்ந்தவை எல்லாம் மிருகமாய் போக
எழுவது எல்லாம் மனிதராய் எழுக
மிருகம் கொண்டு மிருகமானது போதும்.
வாய்மை கொண்ட மனிதவாழுமை வேண்டும்

சாதி சாதியென்று சாய்த்து
சாதித்தது என்ன?
மனிதசாதி ஒன்றே போதும்
மதமும் வேண்டாம்
மார்க்கமும் வேண்டாம் -எமக்கு
மனித மார்க்கமே போதும் போதும்.

வாழும் காலம் மனிதராய் வாழ
புத்தாண்டுப் பெண்ணே
புதுச்சேலை கட்டிவா!!!

நோர்வே நக்கீரா
01 01 2010

பிந்திய செய்தி – அமைச்சர் சந்திரசேகரன் காலமானார்.

canthira.jpgமலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பீ.சந்திரசேகரன் இன்று அதிகாலை காலமானார். கொழும்பில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை காலமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள தேசம் நெட்டுக்குத் தெரிவித்தன.

இவர் 1952 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்தவர். 1994 ஆம் ஆண்டு முதல் நுவரெலியப் பாரளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார். மேலதிக தகவல்கள் பின்பு வெளியிடப்படும். 

இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர். அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் BBC தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்திருந்தார். காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

சினவட்ராவை ஆலோசகராக நியமிக்கும் செய்தி உண்மையல்ல – வெளி விவகார அமைச்சு அறிக்கை

thaksin.jpgதாய் லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவட்ரா இலங்கையின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்தி எந்த அடிப்படையும் இல்லாத வெறும் ஊகம் என்று வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தியை முற்றாக மறுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இருந்து வரும் சிறப்பான இரு தரப்பு உறவுகளை இது போன்ற ஊகங்கள் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு உறுதியாக கூறுகிறது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் கசிப் பிரோம்யாவுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன் தினம் தொலைபேசியில் பேசினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிவரும் அரச ஊழியருக்கு இலவச பஸ் சேவை

buss.jpgயாழ்ப்பா ணத்திலிருந்து வன்னியில் கடமையாற்ற வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காக திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இலவச பஸ் போக்குவரத்துச் சேவை இம்மாதம் முதல் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர்களின் நலன்கருதி இந்த இலவச பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்தின் கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

வன்னியில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள், யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கும் இணைக்கப்பட்டிருந்த னர். இவர்களின் இணைப்பு ஜனவரியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவர்கள் அனைவரையும் தாம் முன்பு கடமையாற்றிய வன்னிப் பாடசாலைகளுக்குக் கடமைக்குத் திரும்ப வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்திலிரு ந்து வன்னிக்கு வருவதற்காக இலவச பஸ் சேவை நடாத்தப்படுகின்றது. திங் கட்கிழமை யாழில் இருந்து வருவதற்கும், வெள்ளிக்கிழமை திரும்பிச் செல்வதற்கும் அரச ஊழியர்கள் இந்த இலவச பஸ் சேவையைப் பயன்படுத்த முடியும்.

அரச பணியாளர்கள் வெள்ளிக்கிழமை வரை வன்னிப் பகுதிகளில் தங்கி யிருப்பதற்கான வசதிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக இளங்கோவன் கூறினார். வன்னிப் பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டிய சுமார் 650 ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியும் புத்தூக்கமும் நம்பிக்கையும் கொடுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! தேசம்நெற்

New_Year_2010புத்தாண்டை அறிவிக்கும் மணி ஒலிகளும் புத்தாண்டைக் கொண்டாடும் வான வேடிக்கைகளும் புத்தூக்கம் ஒன்றை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அவ்வகையான புத்தூக்கமும் நம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் அவசியமானதே. உலகம் முழுவதுமே இன்று புத்தாண்டைக் கொண்டாடுகின்றது. தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலே புத்தாண்டாக அமைந்தாலும் உலக மக்களுடன் இணைந்து இப்புத்தாண்டையும் தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலுமாக கொண்டாட்டங்கள் அமைகிறது. இந்நாளில் சகல ஒடுக்கப்பட்ட மக்களைப் பலப்படுத்தவும் அவர்களது சுபீட்சத்திற்கான குரலாக நாம் செயற்படவும் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துக் கொள்வோம்.

இலங்கைத் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் இவ்வாண்டு மிக மோசமான அவலங்களுடாகப் பயணித்து தாங்கொண்ணாத் துயருடன் இப்புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். இவர்களது துயரத்தை அவ்வளவு இலகுவில் துடைத்திடவோ இவர்களது இழப்பை ஈடு செய்திடவோ புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் முடியாது. ஆயினும் முடிந்த அளவு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து எதிர்கால நம்பிக்கையை ஊட்டுவது அவசியம். இப்புத்தாண்டு நாளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னியில் உள்ள தம் உறவுகளின் நல்வாழ்விற்கு தங்களால் இயன்ற வழிகளில் உதவ முன்வர வேண்டும். அவர்களுக்கு புத்தூக்கம் அளித்திட வேண்டும்.

தைப் பொங்கலுக்கு தமிழீழம் வருடப்பிறப்பிற்கு தனிநாடு என்ற எண்பதுக்களில் உருவான வெற்றுக் கோசங்கள் இன்று தமிழ் மக்களை வரலாறு காணாத அழிவுக்குள் தள்ளியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தோல்வியானது அதற்குத் தலைமை கொடுத்த அரசியல் தலைமைக்கான தோல்வியே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியல்ல. சகல ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து தமிழ் மக்கள் தம் விடுதலைக்கும் அனைத்து மக்களது விடுதலைக்கும் நிச்சயம் குரல்கொடுப்பார்கள். அதற்கான காலத்தையும் நேரத்தையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள். அவர்களுக்காக எப்போதும் எமது குரல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும். இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியையும் புத்தூக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கின்ற இந்நாளில் தேசம்நெற் கட்டுரையாளர்கள், கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். உங்கள் வாழ்வு ஒளிமயமானதாக அமைவதுடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒளிவீசுவதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

கடந்த காலங்களில் எம்முடன் இணைந்து வன்னி மக்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்த சிந்தனை வட்டம், அகிலன் பவுண்டேசன், லிற்றில் எய்ட் அமைப்புகளுக்கும் இவ் உதவியில் பங்கெடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1997ல் தேசம் சஞ்சிகையாக வெளிவந்து 2007 ஒக்ரோபர் முதல் தேசம்நெற் ஆக இணைய உலகில் கால்பதித்து 13வது ஆண்டில் தேசம் – தேசம்நெற் ஊடகத்துறையில் தனது பயணத்தைத் தொடர்கின்றது. கட்டுரையாளர்களின், கருத்தாளர்களின், வாசகர்களின் வாழ்த்துக்களுடன் இன்னும் பல பத்தாண்டுகள் எமது பயணம் தொடரும் என்று நம்புகின்றோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இன்றைய நாளில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தேசம்நெற்.