08

08

ஜனநாயகத்தை நிலைநாட்ட மட்டு மேயர் சிவகீதா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு

sivageetha.jpgமட்டுநகர் மேயர் சிவகீதா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க அரசியலில் நுழைந்து கொண்ட நான், அரசியலில் நுழைந்ததில் இருந்து எனது பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்றே அரசியல் செய்துவருகின்றேன். இன்றைய நிலையில் எனது பிரதேசத்தில் உள்ள மக்களும், புத்தி ஜீவிகளும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, இலங்கையின் பொருளாதாரத்தை உயத்துவார் என நம்பப்படுகின்ற ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டியதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் – லசந்தா நினைவாக இன்று லண்டனில் மாநாடு

Lasantha_Wickramathungaகடந்த ஆண்டு ஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரம சிங்கவின் (சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. : த ஜெயபாலன்) நினைவாக இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் என்ற தலைப்பில் லண்டனில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Tamil Legal Advocacy Project (TLAP) என்ற அமைப்பே இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். தங்களை சுயாதீன அமைப்பு என http://www.tlap.org.uk/ வெளிப்படுத்தி வருகின்ற அமைப்பு நடந்து முடிந்த யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கான தண்டனை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை இவ்வமைப்பினர் சில மாதங்களுக்கு முன்னர் கொன்வே ஹோலில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லசந்தா படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 8ம் நாளில் இந்தியன் வைஎம்சிஏ யில் இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாட்டில் முன்னணி மனித உரிமைச் சட்டத்தரணியான கியூசி ஹெலனா கென்னடி மற்றும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்கள் உரையாற்றுகின்றனர்.

இம்மாநாட்டிலும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான குரல்களுக்கு அழுத்தம் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சட்டத்தரணி அருண் கனநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்நிகழ்வு முற்றிலும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டது என்றும் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வு விபரம்:

First Anniversary Remembrance of Lasantha Wickrematunga &
Press Freedom in Sri Lanka

Speakers:
Baroness Helena Kennedy QC, Human Rights Lawyer
Gareth Thomas MP, International Development Minister
Frances Harrison (Former BBC correspondent for Sri lanka).
Ed Davey MP, Shadow Foreign Secretary, Liberal Democrats.
Uvindu Kurukulasuriya, Journalist and former Convenor Free Media Movement (FMM), Sri lanka.
Alex Wilks, Programme Lawyer, Human Rights Institute-International Bar Association HR Institute
Speaker from Reporters without Borders (RSF).
Message  from Journalists for Democracy in Sri lanka (JDS).

  Sonali Samarasinghe, Former Editor Morning Leader and Lasantha’s wife, Lal Wickrematunge (Managing Editor Sunday Leader and Lasantha’s brother) will be sending a specially taped video message.

TLAP appreciates a voluntary contribution to our “conference series fund”
This event is being organized by Friends of Lasantha and Tamil Legal Advocacy Project (TLAP).

You are invited to the following event:
First Anniversary Remembrance of Lasantha Wickrematunga and Press Freedom in Sri Lanka

Date:
Friday, January 08, 2010
from 6:30 PM – 9:00 PM (GMT)

Location:
YMCA
41 Fitzroy Square
W1T 6AQ London
United Kingdom

Related News:

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது! : த ஜெயபாலன்

லண்டன் இல. தூதரகம் முன்பாக சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 4:30ற்கு : த ஜெயபாலன்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்தாவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில் போராட்டம் : த ஜெயபாலன்

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டும்! – தமிழ் மக்களின் வோட்டும் ! : த ஜெயபாலன்

Sampanthan_RMavai_SenathirajahSuresh_Piremachandranதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் தெரிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவுக்கே வரும் என்பது நவம்பர் 19 – 22ல் சூரிசில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் மாநாட்டிற்கு வரும் பொழுதே ஓரளவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 20ல் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டையே அங்கு விலியுறுத்தி இருந்தது. ஆயினும் அவர்கள் அதனை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 6ல் உதிதியோகபூர்வமாக அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே ஜேவிபியும் யுஎன்பியும் தமது மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தோன்றி பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து வந்தனர்.

ஜனவரி 4ல் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற உறுதிமொழியையும் இரா சம்பந்தன் எதிர்தரப்பு கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தார். TNA promises support to Gen. Fonseka http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3682&Itemid=1 அதற்கு முன்னரேயே தங்கள் முடிவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு நடவடிக்கையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்தனர். Gen. Fonseka visits Jaffna at invitation of TNA  http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3672&Itemid=1

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுத்தது என்பது அப்பட்டமான நாடகம். ஜனவரி 4ம் 5ம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இம்முடிவை எடுக்கவில்லை. அவ்விரு நாட்களும் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கேலிக் கூத்து மட்டுமே.

ஈராக்கில் ரெஜீம்சேன்ஞ்சை கொண்டு வருவதற்காக ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டு சர்வதேசக் கூட்டமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு ஈராக் மீது படையெடுத்து ரெஜீம்சேன்ஞ்சை ஏற்படுத்தியது. தனது நோக்கத்திற்கு ஏற்ப ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு, 45 நிமிடங்களில் அவ்வாயுதங்கள் லண்டனைத் தாக்கலாம் என்ற கதைகள் சோடிக்கப்பட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டால் இவை பரப்பப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று இதற்கு ஒரு ஜனாநாயக முலாமும் பூசப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் தீர்மானமே. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் அளவுக்கு இல்லாமல் விரலுக்கு ஏற்ற வீக்கமாக உருவாக்கிய திட்டமே இலங்கையில் ரெஜீம்சேன்ஞ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது. அதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று வடக்கு – கிழக்கு இணைப்பு. ஒரே மாதத்தில் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் இன்னொரன்ன விடயங்கள். (அவற்றைத் தனிக் கட்டுரையில் ஆராய்வதே பொருத்தமானது.)

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மே 18ல் கொல்லப்படும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக எம் கெ சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் செயற்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவு அலைக்கு முதுகெலும்பாக நின்றனர்.

அப்போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களுடன் எவ்விதத்திலும் முரண்படாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அல்லது முரண்படக் கூடிய கருத்துக்களை வெளியிடாமலே மௌனம் காத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடையத் தொடங்க இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலை தூக்கியது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகக் குறுகிக்கொண்டது.

இதனை எம் கெ சிவாஜிலிங்கம் கடந்த பெப்ரவரியிலேயே தேசம்நெற்க்கு வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் பற்றி தங்களுடன் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அண்மையில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பிலும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கப்படுவதில்லை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாகவே இருந்து வந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலும் தங்கி இருந்ததும் அம்மும்மூர்த்திகளுக்கு வசதியாக அமைந்தது.

ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற போது ஒப்புக்காகவாவுதல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டி இருந்தது. அதனாலேயே ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்றியது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதனை நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால் மும்மூர்திகளின் நோக்கம் அடிபட்டுப் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் கேள்வி தொடர்பாகவும் கடுமையான முரண்பாடுகள் விவாதங்கள் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். ஒருவர் தொலைபேசியூடாகக் கலந்துகொண்டார். இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரையாவது ஆதரிப்பதா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற குரல்கள் பலமானதாக இருந்தது. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ரெஜீம்சேன்ஞ் வேண்டுமா இல்லையா என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இறுதியில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டின் முடிவின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தது. ஆனால் தொலைபெசியில் கலந்துகொண்டவரின் வாக்கை கணக்கெடுக்க முடியாது என்பதில் இரா சம்பந்தன் உறுதியாக நின்றார். அதனால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியது. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்றதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட இரா சம்பந்தன் ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார். தங்களுக்கு இசைவான பேரினவாதத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் மக்களை படுமோசமான நிலைக்குத் தள்ளிய தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது மீண்டும் ஒருமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் மயக்குகின்றது. ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்க்கின்றது” என்பது முற்றிலும் உண்மை. அதற்காக ”பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. ஏகோபித்துத் தெரிவிக்கவேயில்லை. இவ்வளவு அழிவுக்குப் பின்னும் தமிழனைத் தமிழனே தமிழிலேயே ஏமாற்றக் கற்றுக்கொண்ட சாணக்கியத்தைத்தான் சம்பந்தர் இவ்வளவுகால அரசியலில் தெரிந்து வைத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும்:

தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) , நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) 
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)

இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். அவர்கள் வருமாறு : சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை), மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்), சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).

எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சிவநாதன் கிசோர் (வன்னி), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)

வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்) மற்றும் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு). இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். சந்திரகாந்தன் சந்திரநேரு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவைக் கொண்டிருப்பதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதே முடிவை ஜெயானந்தமூரத்தி தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிட்டார். ரி கனகசபை (மட்டக்களப்பு) இவர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக இரா சம்பந்தன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரி கனகசபை இந்தியாவில் சுகவீனம் காரணமாகத் தங்கியுள்ளார். சதாசிவம் கனகரத்தினம் (வன்னி) இலங்கை அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், கூட்டணி என்பவற்றை ஒட்டுக்குழு அரசியல் என்று விமர்சித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னையவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டியதற்குப் பதிலாக இவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஒட்டியுள்ளனர். இடம் மட்டும் தான் மாறியுள்ளதே அல்லாமல் இதுவும் ஒட்டுக்குழு அரசியல் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக சரத் பொன்சேகாவை தேர்ந்தெடுத்த ஒட்டுக்குழு.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்து இருந்தாலும் அதன் கீழ் மூன்று அணிகளுக்கான அரசியல் ஓட்டங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச சிவாஜிலிங்கம் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. சிவாஜிலிங்கம் எனும் போது விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பவர்களும் சிவாஜிலிங்கத்தின் அணியிலேயே அடங்குகின்றனர்.

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிரான உணர்வலைகள் ஏற்கனவே மேலெழ ஆரம்பித்துள்ளது. இது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. புலி ஆதரவாளர்களிடையே இவ்வாண்டு நடுப்பகுதியில் தமக்கு ஏற்படுத்தப்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற போக்கு காணப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் நியாயத்தன்மை தற்போது பலம்பெற்றுள்ளது.

டிசம்பர் 20ல் வியன்னாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய சக்திகளின் சந்திப்பிலும் இந்த முரண்பட்ட நிலை வெளிப்பட்டு உள்ளது. வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் தேசிய சக்திகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு, வி ஆனந்தசங்கரி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அபிவிருத்தி என்பதன் அடிப்படையில் இம்மாநாடு கூட்டப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். நான்கு தினங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். கனடா: சேரன், இளங்கோ (தமிழீழ மக்கள் கட்சி), ரஞ்சன் (கனடிய தமிழ் கொங்கிரஸ்) நோர்வே: செல்வின், லண்டன்: ரூட் ரவி (பிரித்தானிய தமிழர் பேரவை), எதிர்வீரசிங்கம், சிற்றம்பலம் இவர்களுடன் இலங்கையில் இருந்து தேவநேசன் நேசையா, நோர்வேயில் இருந்து என் சண்முகரட்னம் ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திபில் தேர்தல் பற்றி குறிப்பாகக் கதைக்கப்படாத போதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இலங்கையில் ஒரு கட்சியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டு உள்ளது. வருகின்ற தேர்தலில் ரெஜீம்சேஞ் ஒன்றைக் கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதே சமயம் பிரதான வேட்பாளர்கள் இருவருமே யுத்தக் குற்றவாளிகள் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு சார்பானவர்களிடையேயே ஒருமித்த கருத்து நிலவவில்லை எனவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாடு மற்றும் இன்றைய தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலை தொடர்பாக அறிந்துகொள்வதற்கு அதன் முக்கியஸ்தர்களில் ஒருவராக அறியப்படுபவரும் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டவருமான சேரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வியன்னா மாநாட்டில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவர் தனக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். (அவர் தேசம்நெற் இணையம் தன்னைப் பற்றிய அவதூறை ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் மேற்கொண்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்காதவரை தான் தேசம்நெற்றுடன் எதனையும் பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் மறுத்துவிட்டார்.)

ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து உள்ளது. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே தாங்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி இருந்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947

நாடுகடந்த தமிழீழ அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் சர்வதேச அளவில் பிளவுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் வெளி அழுத்தங்கள் காரணமாக மீண்டும் ஒரு குழுவாகச் செயற்பட முன்வந்துள்ளனர். இந்த இணைவில் ரூட் ரவியின் ஆளுமைக்கு உட்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையும் (British Tamil Forum) விரைவில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் பிற்பகுதியில் தனக்கு ஆதரவு தேடி லண்டன் வந்திருந்த எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுத்த பிரித்தானிய தமிழர் பேரவை தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தேசிய நாளிதலான இன்டிபென்டனில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இரு பிரதான வேட்பாளர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இவர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது உணர்வின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் முடியாத விடயம் எனவும் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். They (General Sarath Fonseka and President Mahinda Rajapaksa) should be brought to court to answer for their crimes and, given that, I believe it is morally and ethically impossible to throw one’s support behind either of these candidates – http://www.independent.co.uk/opinion/commentators/suren-surendiran-these-candidates-are-largely-to-blame-for-destroying-our-people-1859873.html

கனடாவில் நடராஜா முரளீதரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உதிரிகள் மற்றும் தமிழ் படைப்பாளிகள் போன்ற மேலோட்டமான புலி ஆதரவு அமைப்புகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புலத்தில் இவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் முடிவை புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் நிராகரித்த போதும் அவர்கள் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எந்த அமைப்பும் தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவருகின்றது. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை மேற்கு நாடுகளும் அதன் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கீகரிக்காது என்பதனாலேயே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

”ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி சிவாஜிலிங்கத்தை கேட்போம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Selvam Adaikalanathan TNA_TELOதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நிலைநிறுத்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி எம் கெ சிவாஜிலிங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (ஜனவரி 7) தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கேட்ட போது பெரும்பான்மையின் முடிவுடன் ஒத்துப் போவது மட்டுமல்ல தமிழ் மக்கள் ஒரு முகப்பட்டு அரசியலில் இயங்குவதே இன்று அவசியமானது எனத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி பொன்சேகாவுக்காக வாக்கு வேட்டை நடத்துமா? எனக் கேட்ட போது அது பற்றிய இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சுயாதீனமானது எனத் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடுகளினதோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதோ அழுத்தங்களினால் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ அல்லது சரத்பொன்சேகாவிற்கு எதிராக வாக்களிப்பதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும் என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தமிழ் மக்கள் எடுக்கின்ற எந்த முடிவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவோம் எனக் குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் அதற்கு அரசு சம்மதிக்க மறுத்தால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

தன்னைப் போட்டியில் இருந்து விலகுமாறு யாரும் இதுவரை அணுகவில்லை எனத் தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் தானும் மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்னாவும் தமிழ் பகுதிகளின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். சென்ற இடங்களில் எலலாம் மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி கைதட்டி ஆதரவு தருவது தங்களுக்கு நம்பிக்கை அளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான உறுதியான முடிவுகளைத் தந்தாலேயொழிய இந்த சில்லறைத்தனமான உறுதி மொழிகளை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை எனவும் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு இன்று (ஜனவரி 7) தெரிவித்தார்.

10 அம்சத் திட்டத்தை உள்ளடக்கிய ஜெனரலின் “நம்பிக்கையான மாற்றம்”

pr-can.jpg“நம்பிக் கையான மாற்றம்”  என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு

1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.

அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.

2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.

மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.

உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.

3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.

உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.

சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.

4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.

சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.

5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.

மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.

6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.

முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.

நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.

8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.

3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம்%27 எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.

தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.

10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்

அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட “அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.

நம்பிக்கை மிக்க மாற்றம்

நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.

இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.

‘இதுவரை செய்த தவறையே கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது’ சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல

anu.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தவறையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறதென அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் விடிவுக்காக இதுவரை என்ன செய்துள்ளது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சம்பந்தனின் கொள்கை தமிழ் சமூகத்தின் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பல்பிட உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் சட்டம், ஒழுங்கு, சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான வாழ்வுரிமை என்பவற்றை நிலைநாட்டினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல பிரிவுகளாக தற்பொழுது பிளவுபட்டுள் ளது. அதில் சம்பந்தன் பிரிவினர் ஜனாதிபதியை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கித்த வித்து வந்த தமிழ் மக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ள சம்பந்தன் என்ன பங்களிப்பை செய்துள்ளார் என்று அமைச்சர் வினா எழுப்பினார்.

யுத்தம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடம்பெயர் ந்த மக்களை மீளக்குடியேற்றுவதி லும், வட பகுதிக்கான முதலீடுகளிலும், அபி விருத்திகளிலும் மற்றும் தமிழ் சமூகத்தின் ஏனைய தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வதற்காக பல பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை யானது அம்பாந்தோட்டை துறைமுக அபி விருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட பெருமளவு அதிகமானதாகும் என்றும் அமைச்சர் சொன்னார். இயல்பில் பிடிவாத போக்குடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் புலிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்ததால், தமிழ் சமூகம் அதன் தற்போதைய நிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் சமூகத்திற்கு தேவையானவற்றை அவர்களால் செய்து கொடுக்க முடியாமல் போனது. இவர்க ளால் தமிழ் சமூகத்தினர் பல்வேறு இன் னல்களுக்கே முகம் கொடுத்து வந்தனர். ஆனால், தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாத்து பூரண கெளரவத்தை பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

எனவே மக்கள் ஜனாதிபதியுடன் உள்ளனர். பயங்கரவாதத்தை ஜனாதிபதி முற்றாக இல்லாதொழித்ததால் சம்பந்தன் குழுவினர் ஜனாதிபதியை வைராக்கியத்துட னும், பழிவாங்கும் நோக்குடனும் பார்க்கின்றனர். ஏற்கனவே பிரிவினை வாதத்தை ஏற்படுத்திய அவர்கள் தற்பொழுது வேறு வழிகளில் அதனை செயலுருப்பெற முயற்சிக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு தேவையான சகலவற்றையும் பெற்றுக் கொடுத்தது அரசாங்கமே. நாங்கள் தனிப்பட்டவர்களுக்காக செய்வதை விட சமூகத்திற்காக செய்வதையே முக்கியமாக கருதுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

800 விக்கெட்டைக் கைப்பற்றுவதுடன் கிரிக்கெட் வாழ்வை முடிக்கவுள்ளேன் முரளி கூறுகிறார்

muttiah.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரது வருங்கால திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், மேற்கிந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 800 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.  ஆனால்,இவையெல்லாம் அப்படி நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் நான் எந்த வகையில் தேவையாக இருக்கிறேன் என்பது முக்கியமாகும். சுயநலத்துடன் செயற்பட நான் விரும்பவில்லை. நல்லபடியாக பந்து வீச முடியுமென்ற நிலை இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையெனில் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்.

ஏனெனில் எனக்கு பல்வேறு கவுண்டி அணிகளிலிருந்தும் சென்னையில் இருந்தும் விளையாட அழைப்பு வந்த வண்ணமுள்ளன. எனது உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் பந்து வீச எனது உடல் ஒத்துழைப்பது கடினம்.உடல் ஒத்துழைக்காவிட்டால் என்னை விளையாட நிர்ப்பந்திக்க மாட்டேன்.20 ஓவர் போட்டியில் எனது நாட்டுக்காக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதை சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாக இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த அணிக்கும் எளிதான காரியமல்ல. 1997 ஆம் ஆண்டில் எங்கள் அணி நல்ல நிலையிலிருந்த போது கூட இந்தியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் டிரா தான் செய்தோம். இந்தியாவில் ஆடுவது என்பது எப்போதும் கடினமான விடயமாகும். தனது சொந்த மண்ணில் எப்படி ஆட வேண்டுமென்பது இந்திய அணியினருக்கு நன்கு தெரியும். இந்தியாவைப் போல் நாங்களும் எங்கள் சொந்த மண்ணில் பலமான அணியாகும் என்றார்.

15 மாதக் கைக்குழந்தை கல்லில் அடித்துக் கொலை – வாழைச்சேனையில் பரபரப்பு

வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைக்குழந்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை ஜும்ஆப்பள்ளி, வீதியைச் சேர்ந்த காசிம் பாவா முகம்மது ஜவ்பர் (34) என்பவரின் 15 மாதக் கைக்குழந்தையே பரிதாபகரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கைக்குழந்தையின் மூத்த சகோதரர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன்.

இவ்வருடத்திற்கான பாடசாலை கடந்த 04ம் திகதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் பொருட்டு பாடசாலைக்குச் செல்வதற்காக கழுத்துப்பட்டி ஒன்றினை வாங்கித் தருமாறு தகப்பனிடம் கோரியிருந்தார். இவ்வேளையில், ஆத்திரம் கொண்ட தகப்பன் பாடசாலை செல்லும் தன் மகனையும், தன் மனைவியையும் தாக்கி, தன் மனைவியின் மடியிலிருந்த குறித்த கைக்குழந்தையை பறித்தெடுத்து அத்திவாரக் கல்லில் தலைகீழாக தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்