2010

2010

மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்

ajith.jpgஇவ் வருடம் ஜூலை 1ம் திகதி முதல் மீண்டும் 6 வருடங்களுக்கு அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் கடைமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மீனவர் பிரச்சினைகளை தீர்க்க விசேட செயலணி

தென்பகுதி மீனவர்களுக்கு வடக்கில் மீன்பிடிக்க அனுமதி வழங்காதிருக்க கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வடபிராந்தியத்தில் மீன்பிடித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் வடக்கு, கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட செயலணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட மீன்பிடி திணைக்களம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன;

யுத்த சூழ்நிலைக்கு முன்னர் 2/3 பங்கு மீன்கள் வடபகுதியில் இருந்தே பிடிப் பட்டன. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருகிறது. வடபகுதி மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள், படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. வட பகுதி மீனவர்களுக்குத் தேவையான வசதிகள், உதவிகள் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு தொன் எடையில் பிரமாண்ட திருக்குறள்! செம்மொழி மாநாட்டுக்கு உலக சாதனை

mmm.jpgஎட்டு அடி உயரம், ஐந்து அடி அகலத்தில் ஒரு தொன் எடையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திருக்குறள் புத்தகம், வி.ஜி.பி. சார்பில் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படுகிறதென்று வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் கூறினார். கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி பிரமாண்டமான திருக்குறள் புத்தகத்தை தயாரித்து உள்ளோம்.

8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட 138 பக்கங்களுடன் கூடிய திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 133 அதிகாரங்கள் 1330 திருக்குறள் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு தொன் எடை கொண்டது.

ரூ. 5 இலட்சம் செலவில் 40 பணியாளர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பாடுபட்டு புத்தகத்தை தயாரித்து உள்ளனர். இது உலகில் புதிய சாதனையாகும். கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் முதல் அமைச்சர் கருணாநிதியிடம் இந்த திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.

மாநாட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சி அரங்கத்திலும் இது இடம்பெறும். மாநாடு முடிந்த பிறகு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்படும் பேரறிஞர் அண்ணா பொது நூலகத்தில் வைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். நூலகத்தில் இந்த புத்தகம் வைக்கப்படும் போது அதன் அருகில் திருவள்ளுவர் கற்சிலை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் மலேசியாவில் இருப்பதாகத் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் பிரசன்னமாகியிருப்பதை கண்டுபிடித்திருப்பதாக மலேசிய பொலிஸாரை மேற்கோள்காட்டி பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.அவர்கள் மலேசியாவை புகலிடமாகவும் தளமாகவும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் உள்துறை அமைச்சர் கிஷாமுடீன் உசைனை மேற்கோள்காட்டி இதனை ஊர்ஜிதப்படுத்தி செய்தி வெளியாகியுள்ளது. தமது வன்முறைப் போராட்டத்தை முன்னெடுக்க மலேசியாவைத் தமது தளமாக இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியர் சாராத போராளிக்குழுக்கள் பயன்படுத்துவதாக கிஷாமுடீன் உசைன் கூறியுள்ளார்.

அத்துடன், தமது நிதிப்பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு மலேசியாவை இந்தக் குழுக்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமது அமைப்புகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆட்சேர்ப்புக்கு இக்குழுக்கள் இலக்கு வைப்பதாகவும் அவர் நிருபர்களுக்கு தெரிவித்திருந்தார்.

மலேசியாவை புகலிடமாகவும் தளமாகவும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸ் மா அதிபர் மூசாஹசனை மேற்கோள்காட்டி அரசாங்க செய்தி முகவரமைப்பான “பேர்னாமா” செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் நடமாட்டம் என்பன உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவை தொடர்பான விபரங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச புலனாய்வு முகவரமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கிஷாமுடீன் கூறியிருக்கிறார். தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக உள்துறை அமைச்சு உள்நாட்டு சட்ட அமுலாக்கத் துறையுடனும் சர்வதேச புலனாய்வு முகவரமைப்புகளுடனும் நெருங்கி செயற்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கிளிநொச்சி நகரில் அபிவிருத்தி திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைப்பு

kili.jpgநாமல் ராஜபக்ஷ தலைமையிலான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கிளிநொச்சி நகரில் பல அபிவிருத்தி திட்டங்களை நேற்று ஆரம்பித்து வைத்தனர். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கிளிநொச்சி விஜயம் செய்தனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மூன்று புதிய பஸ் சேவைகள் நேற்று ஆரம்பமாகின. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இராமநாதபுரம், விஸ்வமடு, ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இப்பஸ்சேவைகள் ஆரம்பமாகின. தற்போது சேவையிலுள்ள கிளிநொச்சி- பூநரிக்கு இடையிலான பஸ்சேவைக்கு மேலதிகமாக மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமானது.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நன்னீர் மீன்பிடித்துறையை ஏற்படுத்துவதற்கென அக்கராயன்குளம் மற்றும் ஏனைய குளத்திற்கும் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வும் இடம்பெற்றது. நாமல் ராஜபக்ஷ எம்.பி. அக்கராயன் குளத்தில் 2 இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டார்.

கிளிநொச்சி நகரில் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறக்கப்பட்டன. 109 ஆவது கிளை கிளிநொச்சி நகரில் தண்ணீர் தாங்கிக்கு அண்மித்த பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சியில் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் சேவை அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம் திறக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 94 விளையாட்டுக் கழகங்களுக்கும் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் வைபவமும் நடைபெற்றது.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, புதிய எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, உதித லொக்குபண்டார, லொஹான் ரத்வத்த, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, வடமாகாண ஆளுநர் மேர்ஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

4 பாடசாலை அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மேல்மாகாணப் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் சுபசன் நிமிதெர பாடசாலை தொடர்பாடல் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்குமுகமாக முதலமைச்சில் புதன்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இவ்வருடத்தில் (2010) இடம்பெற்றதாக கூறப்படும் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நான்கு அதிபர்கள் தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அழகியற் கல்வி ஆசிரியர்களாக 3174 பட்டதாரிகளை சேர்க்க முடிவு

teachers.jpgபாடசா லைகளில் அழகியற் கல்வியைக் கற்பிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 3174 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்குமுகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை அறிவித்தார்.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜீ இன்று இலங்கை வருகிறார்

இந்தியாவின் பெரம்பலூர் பிரம்மரிஷிமலை புலிப்பாணி அன்னை சித்தர் ஸ்ரீலஸ்ரீ எஸ். இராஜ்குமார் குருஜீ இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். சிலோன் சித்தர்கள் சபை ஸ்ரீலஸ்ரீ புண்ணியரத்னம் சித்தரின் அழைப்பையேற்று இலங்கை வரும் இராஜ்குமார் குருஜி உலகமக்கள் சேமத்திற்காகவும், எதிர்கால நன்மை கருதியும் மகா யாகங்களை நடத்தவுள்ளார்.

இலங்கை வரும் ஸ்ரீலஸ்ரீ எஸ். இராஜ்குமார் குருஜீ நாளையும், நாளை மறுதினமும் மட்டக்களப்பில் மாபெரும் யாகங்களை நடத்தி அன்னதானம் வழங்கவுள்ளார்.

நாளை சனிக்கிழமை திருமண்டபத்தடியிலு ள்ள கன்னன்குடா 210 சித்தர்கள் பீடத்தில் காலை 10.00 மணிக்கு மகாயாகம் நடை பெறும். நாளை மறுதினம் (20) ஞாயிறுக்கிழமை களுவாஞ்சிக்குடியிலுள்ள ஸ்ரீயோகஞானபீடத்தில் காலை 10.30 மணிக்கு மகாயாகம் நடைபெறும்.

நாளை இடம்பெறும் போர் வெற்றிவிழாவில் ஒன்பதினாயிரம் படையினர் கலந்து கொள்வர்.

Victory_Celebrationவிடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி விழா நாளை வெள்ளிக்கிழமை (June 18 2010) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கொழும்பில் விசேட போக்கு வரத்து வசதிகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாளைக் காலை 5மணி முதல் விழா நிறைவடையும் வரை போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விழா நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் பாதுகாப்பு நடைமுறைக்காக மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் வெற்றிவிழா நிகழ்வில் ஒன்பதினாயிரம் படையினர் பங்கேற்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  போர் வெற்றியின் முதலாம் ஆண்டு வெற்றிவிழா கடந்த மேமாதம் அரசாங்கத்தால் கொண்டாடப்படவிருந்த நிலையில் தென்பகுதியில் பெய்த கடும் மழை, வெள்ள அழிவு காரணமாக அது பிற்போட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மீளகுடியமர்ந்துள்ள மக்களின் குறைகளை லியாம் பொஸ்கோ நேரில் கேட்டறிந்தர்.

lio.jpgமுல்லைத் தீவிற்கு பயணமான ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் லியாம் பொஸ்கோ நேற்று  (June 16 2010) பிற்பகல் இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களைப் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அம்மக்களுக்கான நிவாரண உதவிகள், அவர்களின் தொழில்களுக்கான உதவிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்துள்ளார். வற்றாப்பளை கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்துள்ளதோடு, ஐ.நாவின் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நிவாரண விநியோகத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார். தொழில் வாய்ப்பு, அழிவடைந்த வீடுகளை மீளக்கட்டியமைப்பதற்கான உதவிகள் குறித்து மக்கள் லியாம் பொஸ்கோடம் கோரிக்கை விடுத்துள்ள்னர்.

பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப ஐ.நா உதவும் எனவும், அரசாங்கத்தினூடாக பாதிக்கபட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்ணி வெடியகற்றும் பணிகளையும் லியாம் பொஸ்கோ பார்வையிட்டுள்ளார்.