எட்டு அடி உயரம், ஐந்து அடி அகலத்தில் ஒரு தொன் எடையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திருக்குறள் புத்தகம், வி.ஜி.பி. சார்பில் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படுகிறதென்று வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் கூறினார். கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி பிரமாண்டமான திருக்குறள் புத்தகத்தை தயாரித்து உள்ளோம்.
8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட 138 பக்கங்களுடன் கூடிய திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 133 அதிகாரங்கள் 1330 திருக்குறள் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு தொன் எடை கொண்டது.
ரூ. 5 இலட்சம் செலவில் 40 பணியாளர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பாடுபட்டு புத்தகத்தை தயாரித்து உள்ளனர். இது உலகில் புதிய சாதனையாகும். கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் முதல் அமைச்சர் கருணாநிதியிடம் இந்த திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.
மாநாட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சி அரங்கத்திலும் இது இடம்பெறும். மாநாடு முடிந்த பிறகு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்படும் பேரறிஞர் அண்ணா பொது நூலகத்தில் வைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். நூலகத்தில் இந்த புத்தகம் வைக்கப்படும் போது அதன் அருகில் திருவள்ளுவர் கற்சிலை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது