நாமல் ராஜபக்ஷ தலைமையிலான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கிளிநொச்சி நகரில் பல அபிவிருத்தி திட்டங்களை நேற்று ஆரம்பித்து வைத்தனர். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கிளிநொச்சி விஜயம் செய்தனர்.
கிளிநொச்சி நகரிலிருந்து மூன்று புதிய பஸ் சேவைகள் நேற்று ஆரம்பமாகின. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இராமநாதபுரம், விஸ்வமடு, ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இப்பஸ்சேவைகள் ஆரம்பமாகின. தற்போது சேவையிலுள்ள கிளிநொச்சி- பூநரிக்கு இடையிலான பஸ்சேவைக்கு மேலதிகமாக மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமானது.
இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நன்னீர் மீன்பிடித்துறையை ஏற்படுத்துவதற்கென அக்கராயன்குளம் மற்றும் ஏனைய குளத்திற்கும் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வும் இடம்பெற்றது. நாமல் ராஜபக்ஷ எம்.பி. அக்கராயன் குளத்தில் 2 இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டார்.
கிளிநொச்சி நகரில் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறக்கப்பட்டன. 109 ஆவது கிளை கிளிநொச்சி நகரில் தண்ணீர் தாங்கிக்கு அண்மித்த பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சியில் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் சேவை அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம் திறக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 94 விளையாட்டுக் கழகங்களுக்கும் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் வைபவமும் நடைபெற்றது.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, புதிய எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, உதித லொக்குபண்டார, லொஹான் ரத்வத்த, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, வடமாகாண ஆளுநர் மேர்ஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.