January

January

மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !

மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் யாழில் இடம் பெற்ற நகைக்கடைக் கொள்ளையிலும் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்னளர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை வழக்கு கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உட்பட்ட நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இடம்பெற்ற விசாரணையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக மன்னார் கொலைக்குப் பின்னனியிலுள்ளவர் வெளிநாட்டில் இருப்பதாக கொழும்பில் பொலிஸ் திணைக்களம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதியில் உள்ள நகைக் கடைக்குள் புகுந்து தம்மை புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திய குழுவொன்று 30 லட்சம் ரூபாவை அபகரித்து சென்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கடை உரிமையாளரிடம் இருப்பதாக கூறியே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கடை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதலில் சிறை வைக்கப்பட்ட புலிகளை முடிந்து விட முயற்சிப்பது புனைவே அல்லாமல் புலனாய்வு அல்ல என்றும் இது தமிழ் மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் உள்ள உறவை முறிப்பதற்கான திட்டமிட்ட செயல் எனவும் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிடம் இருந்து வரும் கட்டளைகளுக்கே கட்டுப்பட்டுச் செயற்படுபவர்கள். அதனால் தான் தலைமைகள் அழிக்கப்பட்ட பின் மே 18க்குப் பின் ஒரு வெடிச்சத்தம் கூட அவர்கள் பக்கத்தில் இருந்து எழுப்பப்படவில்லை. இப்பொழுது அறுகம்பே தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் விடுதலைப் புலிக் கைதிகள் இருந்த சிறையில் இருந்தார் என்ற ஒரே காரணத்தை வைத்துக்குகொண்டு புனைவது புலனாய்வு அல்ல. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் இவ்வாறான செய்திகளை வெளியிடுவது சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் நாட்டின் சமாதானத்தை கேள்விக்கு உட்படுத்தவுமே.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அறுகம்பே பகுதியில் வந்திருந்த இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை குறி வைத்திருந்த தாக்குதல் திட்டச் சதியொன்று அம்பலமாகியிருந்தது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் பயண எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்த தாக்குதல் சதித்திட்டம் தொடர்பில் முற் கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததால், இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் கைதோடு இத்திட்டம் முறியடிக்கப்பட்டது.

அறுகம்பே தாக்குதல் திட்டத்தின் திருப்பு முனையாக முன்னாள் புலிகளை இவ்விடயத்தில் சிஐடியினர் இழுத்து விட்டுள்ளனர். அதன்படி பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயன்படுத்தியே அறுகம்பே தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக சிஐடியினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதற்காக அறுகம்பே பகுதியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆட்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான பல வழக்குகளில் ஆஜரான பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர் கூறும் போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வழமையானவை என்கிறார். இந்த விடயத்தில் உண்மையான தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் பாதுகாக்கப்படுகிறார்களோ எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் இது வரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ ஏ. தொன் அமரசிறி ஆகியோர் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர சிஐடியினர் முதலாவது சந்தேகநபரிடமிருந்து பல ஆவணங்களில் கையொப்பம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து கடும்சித்திரவதை மூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்ட பலர் நீதிமன்றங்கள் மூலம் இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இத்தாக்குதல் திட்டத்தின் முதல் சந்தேக நபரான பிலால் அகமது 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவ பேருந்து குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் இருந்ததாகவும் கூறும் சிஐடியினர், ஏனவே சிறையிலிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உத்தேசித்திருந்தாக கூறுகின்றனர்.

2009 விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் ஆங்காங்கே முன்னாள் புலி உறுப்பினர்களை அல்லது புலிகளுக்கு வேலை செய்தவர்களை இந்திய, இலங்கை மற்றும் பன்னாட்டு உளவு அமைப்புகள் தத்தம் நலன்களுக்கு பயன்படுத்தி வருகின்றமையும் மறுப்பதற்கில்லை. முன்னாள் புலி பல குழுக்களாக புலத்திலும் நாட்டிலும் பிரிந்து நின்று செயற்படுகிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார், துவாரகா வந்து விட்டா, தலைவர் இல்லை, தலைவரைப் பார்த்தேன் என பல குழப்பங்களும் கேலிக்கூத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.

 

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் – சித்திரை வரை காலக்கெடு !

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் – சித்திரை வரை காலக்கெடு !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிடில் வடக்கு – கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நீதி அமைச்சர், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தெரிவித்துள்ளமை மிகவும் மோசமானது. தமிழ் அரசியல் கைதிகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை விதிக்கப்படாதவர்களை விடுதலை செய்ய முடியும்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் , வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அரசியல் தீர்வு: எடுத்த முடிவில் மாற்றம் இல்லை ! தமிழரசுக் கட்சி முரண்பாடுகளை அடக்கி வாசித்தது !

அரசியல் தீர்வு: எடுத்த முடிவில் மாற்றம் இல்லை ! தமிழரசுக் கட்சி முரண்பாடுகளை அடக்கி வாசித்தது !

நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் தாங்கள் ஏற்கனவே முன்வைத்த தீர்வுத் திட்டங்களையே முன்னெடுப்பதெனவும், உள்ளுராட்சித் தேர்தலில் முன்னர் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதெனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வழக்குகளை முடித்து வைப்பதெனவும் முடிவெடுக்கபட்டதாக கட்சியின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன், வைத்தியர் ஸ்ரீநாத், சிறிநேசன், குகதாசன், கோடீஸ்வரன், ரவிகரன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், உறுப்பினர்கள் சயந்தன், பீற்றர் இளஞ்செழியன், யோகேஸ்வரன், சேயோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய சந்திப்புக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ‘முன்வைத்த தீர்வுத் திட்டங்களை முன்கொண்டு செல்வோம்’ என தமிழரசுக் கட்சிப் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இதனை முன்னெடுத்துச் செல்ல ஏழு பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இக்குழுவில் எம் ஏ சுமந்திரன், பா உ சிறிதரன் ஆகியோரும் உள்ளனர்.

கட்சிக்கு கட்டுப்படாது செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் மத்திய குழு கூட்ட முடிவில் இவைபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முரண்பாடுகளை அடக்கியே வாசித்தனர்.

எம்ஜிஆர் உம் ஈழத்தமிழர்களின் நினைவலைகளும் !

எம்ஜிஆர் உம் ஈழத்தமிழர்களின் நினைவலைகளும் !

எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை ! - News7  Tamil

இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் ஜனவரி 17 ஆம் திகதி தமிழகமெங்கும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் எம்ஜிஆரின் சிலைக்கும் உருவப்படத்திற்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இலங்கையிலும் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மலையகத்திலும் எம்ஜிஆரின் நினைவு நிகழ்வுகள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியால் 108 கிலோ கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

எம் ஜி ஆர் என்றழைக்கப்படும் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகாமையில் நாவலப்பிட்டியில் பிறந்த இந்தியவம்சாவழியைச் சேர்ந்தவர். பிறப்பால் இலங்கையோடு பூர்வீக தொடர்பை கொண்ட எம்ஜிஆர் ஈழத்தமிழர்களோடும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழீழ போராளிக்குழுக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியான உதவிகளை எம்ஜிஆர் வழங்கியிருந்தார். காலப்போக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான உறவைப் பேணிய எம்ஜிஆர், போராட்டத்திற்காக புலிகளுக்கு பல கோடி ரூபாய்களை வழங்கியிருந்தார்.

1982 ஆம் ஆண்டு பாண்டிபஜாரில் புளெட் தலைவர் உமா மகேஸ்வரன் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் கைது செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் உட்பட போராளிகள் எம்ஜிஆரின் தலையீட்டால் இலங்கை பொலிஸாரிடம் கையளிக்காமல் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய அன்றைய நண்பர் ராகவன் என அறியப்பட்ட சின்னையா ராஜேஸ்குமார் தற்போது லண்டனில் உள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான யூலை 29 1987 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக டிசம்பர் 24 ஆம் திகதி 1987 இல் திடீர் மாரடைப்பால் அவர் காலமானார். 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். எம்ஜிஆரின் இறப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக அமைந்தது. எம்ஜிஆர் அற்ற ராஜீவ் காந்தி தலைமையிலான இந்தியாவின் உறவு புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் அழிவைக் கொண்டு வந்து சேர்த்தது.

1987 இல் அமைதிப்படையாக வடக்கு கிழக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் தமிழ்மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதும்இ இறுதியில் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் போர் மூண்டதும் இப் போரினால் பல நூறு இளைஞர்களும் யுவதிகளும் ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டதும் வரலாறு. தோல்வியடைந்த இலங்கை – இந்திய ஒப்பந்தம் அதன் தொடர்ச்சியாக 1991 இல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஶ்ரீ பெரும்புத்தூரில் வைத்து ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இவ்வாறான பின்னணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு 2009 ஆம் ஆண்டுவரை மிக மோசமாக சிதைவடைந்திருந்தது.

இலங்கையில் அனைத்துலக எம்ஜிஆர் பேரவைத் தலைவரான பொன் மதிமுகராஜா 1998 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நினைவுநாள் அனுட்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். பொன் மதிமுகராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக இருந்தவர். 1998 இல் செப்ரம்பரில் முன்னாள் யாழ் மேயர் பொன்னுத்துரை சிவபாலன் கிளைமோர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் பொன் மதிமுகராஜாவே யாழ் மேயராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதேசமயம் புளொட் மாணிக்கவாசகனும் காலியாக இருந்த யாழ் மேயர் பதவியை குறி வைத்திருந்தார். புலிகளோ இலங்கை அரச கட்டமைப்பு இயங்கக்கூடாது மாநகரசபை இயங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய அரசியல் பின்னணியிலேயே பொன் மதிமுகராஜா சுட்டுக் கொல்லப்பட்டார். யாழிலில் எம்ஜிஆர் என்றாலே மதிமுகராஜாவும் சேர்ந்தே ஞாபகத்திற்கு வருவார்.

எம்ஜிஆர் படம்பார்க்க இலங்கை வல்வெட்டித்துறையிலிருந்து இராமேஷ்வரத்திற்கு படகில் சென்றுவந்த காலம் ஒன்றும் இருந்தது. ஆனால் 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை யுத்த பூமியாக மாறியது. வட இலங்கைக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கான கடல் பரப்பு ஆயுத தளபாடங்களை பெறுவதற்கும் போராளிகளை பயிற்சிக்கு அழைத்துச் செல்வதும் அவர்களை மீளக் கொண்டுவருவதற்குமான பாதையாக மாறியது. 2009ற்குப் பின் இவ் உறவு இப்போது மேலும் கசந்து இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

 

விடுவிக்கப்படாத ஆலயங்கள் விரைவில் விடுவிக்கப்படும் – புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் யாழில் தெரிவிப்பு!

விடுவிக்கப்படாத ஆலயங்கள் விரைவில் விடுவிக்கப்படும் – புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் யாழில் தெரிவிப்பு!

ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமைச்சர் நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பில் வெவ்வேறு காரணங்களுக்காக மூடிவைக்கப்பட்டிருந்த வீதிகள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. வடக்கிலும் நாம் முக்கியமான வீதியொன்றை திறந்துள்ளோம். ஏனைய வீதிகளும் திறக்கப்படும். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஆலய விபரங்களை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பேன் என்றார்.

யாழ் மண்ணில் தமிழுக்கு 3ம் இடம் தந்ததும் – இல. தமிழ் அமைச்சரை எழுப்பியதும் – யாழ் இந்திய தூதரகம் !

யாழ் மண்ணில் தமிழுக்கு 3ம் இடம் தந்ததும் – இல. தமிழ் அமைச்சரை எழுப்பியதும் – யாழ் இந்திய தூதரகம் !

யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலாசார மத்திய நிலையம் இந்தியாவின் 1.6 பில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்டு 2023இல் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவரை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றப்பட்டுள்ளது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுரவின் சீன விஜயத்தின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா இலங்கை வந்து யாழில் பெயர் மாற்ற வைபவத்தில் கலந்துகொண்டுள்ளமை இந்தியாவின் ஆதிக்கத்தை வெளிக்காட்டும் செயல் என அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய நிலையத்தின் பெயர்ப்பலகையில் ஆங்கிலம் சிங்களம் தமிழ் என்று தமிழ் மொழிக்கு மூன்றாம் இடத்தை வழங்கியுள்ளமைமையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தேசியபொங்கல் நிகழ்வும் தெல்லிப்பளையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது மகளிர் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் முன் வரிசையிலிருந்து நிகழ்வை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். நிகழ்வின் இடையில் கலந்துகொண்ட இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவருக்கு அருகில் அமர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளியை இந்தியத் தூதுவர் அருகில் இருந்தும் விதமாக அமைச்சர் சாவித்திரியை மறுபக்க கதிரையில் அமருமாறு கூற அவரும் ஆசனத்திலே இருந்து எழுந்துவிட்டார். இதை அவதானித்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சாய் முரளியை அந்த இடத்திலிருந்து எழும்புமாறு கூறி அமைச்சர் சாவித்திரி போல்ராஜை மீண்டும் அதே இடத்தில் அமரவைத்தார். இந்த சம்பவமும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !

கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் யாழில் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்ட பாயவும் செய்யாத அளவுக்கு இனவாத அரசியலை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ள முயல்கிறார் எனக் குறிப்பிட்டார். தமிழ் தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது, விடுவிப்பு போன்ற வாக்குறதிகளை வழங்கிவிட்டு தற்போது அவற்றிலிருந்து பின்வாங்கி இனவாத அரசியலை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ் மக்கள் ஜேவிபி இன் இனவாத முகத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜனாதிபதி அனுர பதிவியேற்று 100 நாட்களிலும் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 50 நாட்களிலும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தனது பாரிய கண்டுபிடிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

ஜனவரி 25 இல் நடக்க உள்ள சந்திப்பு தமிழ் தேசிய அரசியலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இவரது அழைப்பை வடக்கு கிழக்கில் உள்ள எந்த அரசியல் கட்சியும் கணக்கில் எடுத்ததாக இதுவரை தகவல் இல்லை.

இவர்கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு பிறகு கதைக்கிறது எல்லாம் அரசியல் சந்திப்பு என்ற கணக்குக்குள் வராது என பா உ சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருடைய தமிழரசுக் கட்சி தங்களுடைய வழி தனி வழி என்றும் தங்களுடைய பயணம் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர். அந்தப் பயணத்துக்கான குழுவில் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு பேசிய பா உ சிறிதரனும் உள்ளார்.

இந்தியா தலையிடாட்டி சந்தோசம், 13யை தொடமாட்டோம் என்கிற கதைக்கே இடமில்லை, இந்தியா, மாகாணசபை, 13 இல்லாவிட்டால் தாங்கள் உடன்கட்டை ஏறுவோம் என்கிறார் அரசியலில் தனிக்கட்டையாக நிற்கும் பா உ செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் அரசியலில் மூன்று தனிக்கட்டைகள்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன்.இவர்கள் தனிக்கட்டைகளாக இருப்பதால் அரசியலில் கூட்டுக்கலவியில் ஈடுபட விருப்பம் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு ஒற்றுமைப்படுவதற்கான கொள்கை எதுவும் இல்லை என்பது பெரும் பிரச்சினை. இவர்களைவிட இன்னுமொரு தனிக்கட்டை இருக்கின்றார். அவர் அரசியலிலும் தனிக்கட்டை சுயேட்சைக்குழு இராமநாதன் அர்ச்சுனா. இவர் தலைவெட்டப்பட்ட கோழி போல் எந்தப் பக்கம் பாய்வார் என்று அவருக்கே தெரியாது.

அதனால் தான் இவர்களுடைய அரசியல் என்பது பாராளுமன்றம் செல்வதும், கொழும்பில் இருக்கும் போது எங்களுக்கு நேரம் தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி வெள்ளைக்கார ராஜதந்திரிகளிடம் நேரம் எடுத்து அவர்களோடு தேநீர் குடித்தவிட்டுவருவதும் என ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மதிப்பளிக்கும் இந்த வெள்ளைக்கார தொரைகளே, இலங்கையில் இனவாதம் இல்லாத ஒரு அரசாங்கத்தை அனுரா நடத்துவதாக நற்சான்றிதழ்கள் கொடுக்கின்றனர். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டை, அதாவது ஜனாதிபதி அனுரா, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவை விட மோசமான இனவாதி என்ற கருத்தை கஜேந்திரகுமாரின் நெருங்கிய நட்பான அமெரிக்க தூதுவர் யூலி சங்கே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. குண்டுச் சட்டிககுள் சைக்கிள் ஓடி இருக்கிற ஒரு ஆசனத்தையும் தொலைக்கப் போகின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் பிரான்ஸில் வாழும் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான் என அறியப்பட்ட முருகவேள் யோகராஜா.

எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் இனவாதத்தை முன்னெடுக்க போவதில்லை – அருண் ஹேமச்சந்திர

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திர,  எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன இவற்றை நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.

நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள் வகிக்கின்றனர். எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது அரசியல் முரண்பாடுகள் ஆனது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப் பட வேண்டும். மக்களுக்காக நாம் இன மத மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் இதனை மாற்றி அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

 

ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !

ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு என முன் பதிவு செய்து எடுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில் மசாஜ் செய்யும் காணொலிகள் வெளியாகியதை அடுத்து அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மேலாளர் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த ரெயில் பெட்டிகளை முன்பதிவு செய்த நிறுவனம் இவ்வாறான தொழிலை தாங்கள் ரெயிலில் செய்வதைத் தெரியப்படுத்தவில்லை. இவ்வாறான மசாஜ் சேவைகளை வழங்குவதற்கு சட்ட அனுமதியில்லை எனவும் அம்மேலாளர் தெரிவித்தார்.